Wednesday 4 November 2015

ஃபேஸ்புக்கை (Facebook) முகநூல் என்பது சரியா?



நம் தமிழ்நாட்டில் தமிழின் நிலை எவ்வாறு இருக்கிறது? என்பதற்கு அன்றே ஒரு பாடல் எழுதி வைத்தார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

மணக்கவரும் தென்றலிலே குளிரா இல்லை?
     தோப்பில் நிழலா இல்லை?
தணிப்பரிதாம் துன்பமிது தமிழகத்தின் தமிழ்த்தெருவில்
     தமிழ்தான் இல்லை   
                                ( - பாரதிதாசன் )

இன்றும் அந்தநிலை மாறவில்லை. இது ஒருபுறம் இருக்க, அதிக ஆர்வம் காரணமாக, தமிழ்ப்படுத்துகின்றேன் என்று தமிழ் ஆர்வலர்கள் சிலர்.
சிறப்பு பெயர்ச்சொற்களையும் தமிழ்ப்படுத்தி வருகிறார்கள் . இது சரிதானா?  

பள்ளி மாணவர்கள்:

நான் பள்ளி மாணவனாய் இருந்த காலத்தில், தமிழில் உள்ள தமிழ் திரைப்படங்களின் பெயர்களை (Title) ஆங்கிலப்படுத்தி சொல்லி மகிழ்வோம்.

அன்னை இல்லம் – Mother’s House அல்லது Mother Home
ஆண்டவன் கட்டளை – God’s Command
ஆலயமணி – Temple Bell
ஆசைமுகம் – Love Face
இரு மலர்கள் – Two Flowers
பச்சை விளக்கு – Green Light
பாலும் பழமும் – Milk and Fruit
புதிய பறவை – New Bird
கலங்கரை விளக்கம் – Lighthouse
காட்டு ராணி – Jungle Queen
குழந்தையும் தெய்வமும் _ Child and God
வாழ்க்கைப் படகு _ Life Boat
வெண்ணிற ஆடை – White Dress

பள்ளி மாணவர்கள் இவ்வாறு விளையாட, நம்மூர் சினிமா விநியோகஸ்தர்கள், ஆங்கிலப் படங்களுக்கு தமிழ் தலைப்புகள் வைக்கும் போது இஷ்டத்திற்கு வைத்தார்கள். உதாரணத்திற்கு “ The Three musketeers” என்ற ஆங்கிலப் படத்தை, சினிமா சூழ்நிலைக்கு ஏற்பமூன்று எம்ஜிஆர் வீரர்கள்” , ”மூன்று ரஜினி வீரர்கள்என்று போஸ்டர் அடித்தார்கள். மலையாளப் படங்களுக்கு நம்ம ஆட்கள் வைத்த பெயர்கள் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

பெயர்ச்சொல்:

ஒரு ஆளையோ, ஒரு உயிரினத்தையோ, ஒரு இடத்தையோ அல்லது ஒரு பொருளையோ, அந்தந்த மொழியில், ஒரு பெயரினால் அழைக்கப்படும் சொல் பெயர்ச்சொல் (NOUN) ஆகும். ( உதாரணம் அம்மா – Mother, ஆடு- Goat, இலை – Leaf முதலானவை)

அதிலும் சில குறிப்பிட்ட பெயர்கள் சிறப்புப் பெயர்கள் ( Proper Noun) ஆகும்.( உதாரணம்: அமெரிக்கா, இந்தியா, திருக்குறள், முருகன் முதலானவை) இவற்றை அப்படியே அழைக்க வேண்டும்.

ஒல்காப் புகழ் பெற்ற தொல்காப்பியர், பெயர்ச்சொல்லின் இலக்கணமாக

அவற்றுள்
பெயரெனப் படுபவை தெரியுங் காலை
உயர்திணைக் குரிமையும்அஃறிணைக்குரிமையும்
ஆயிரு திணைக்குமோர் அன்ன வுரிமையும்
அம்மூ வுருபின தோன்ற லாறே.    (தொல்காப்பியம் - 160)

என்று சொல்லுகிறார்

( இதன் எளிமையான பொருள்: பெயர் என்று சொல்லும்போது, அது உயர்திணைக்கு உரியவை,அஃறிணைக்குரியவை, இருதிணைக்கும் பொதுவானவை என்று மூன்று வகைப்படும்)

அதன் பின்னர் தொடர்ச்சியான சூத்திரங்களில், பெயர்ச் சொல்லின் வகைகளையும் சொல்லுவார்.

எங்கள் காலத்தில், பள்ளியில் ஆங்கில இலக்கணம் என்றால்Wren and MartinஎழுதியHigh School English Grammar & Compositionஎன்ற நூல்தான். இதிலிருந்துதான் அப்போது தேர்வுக்கு வினா தயாரிப்பார்கள். அதில் சொல்லப்பட்ட இலக்கண சூத்திரங்களை நெட்டுரு போட்டது ஒருக்காலம்அதில் பெயர்ச்சொல் என்பதற்கு  “A Noun is a word used as the name of a person, place or thing" என்றும், சிறப்பு பெயர்ச்சொல் என்பதற்கு “A Proper Noun is the name of some particular person or place” என்றும் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக்(Facebook) – பெயர்ச்சொல்

முன்பெல்லாம் கிராமத்திற்கு போனால், அறியாதவர்கள் கேட்கும் கேள்விஇங்க்லீசில் உனது பெயர் என்னப்பா?” என்பதாகும். அவர்கள், மேலே சொன்னமாதிரி அம்மா – Mother, ஆடு- Goat, இலை – Leaf போல ஒவ்வொருவருடைய பெயரும் ஆங்கிலத்தில் ஒருமாதிரி இருக்கும் என்று எண்ணியதே காரணம். அப்படிப் பார்த்தால், எனது பெயரை (தமிழ் இளங்கோ) “Tamil Prince” என்றுதான் அழைக்க வேண்டும். மேலே சொன்ன தமிழ் திரைப்படங்களின் பெயர்களை (Title) ஆங்கிலப்படுத்தி சொன்னதை இங்கு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் (இப்போதெல்லாம் கிராமத்தில் இப்படி எல்லாம் கேட்பதில்லை. விழிப்புணர்வும், கல்வியறிவும் வந்து விட்டன)

சரி, விஷயத்திற்கு வருவோம்.  ஃபேஸ்புக் (Facebook) என்பது ஒரு சிறப்புப் பெயர் (Proper Noun) ஆகும். இதனை முகநூல் என்று பெயரிட்டு தமிழில் அழைப்பது என்பது, எனது பெயரை (தமிழ் இளங்கோ) “Tamil Prince” என்று அழைப்பது போலாகும்.

சூரிய நாராயண சாஸ்திரியார் என்பவர் தீவிர தமிழ்ப் பற்றுள்ளவர். தமிழின் மீதுள்ள ஆர்வம் காரணமாக தனது பெயரைபரிதிமாற் கலைஞர்’’ என்று மாற்றிக் கொண்டார். மக்கள் ஏற்றுக் கொண்டனர்: ஆனால் ஆங்கில ஷேக்ஸ்பியருக்கு அவர் சொன்னஜெகப்பிரியர்என்ற தமிழ் பெயர் மாற்றத்தை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை இங்கு நினைவு கூறல் அவசியம். 

எனவே நண்பர்களே, ஃபேஸ்புக் (Facebook) என்பதனை அதன் பெயரான ஃபேஸ்புக் (Facebook) என்ற பெயரிலேயே  அழையுங்கள்.


54 comments:

  1. முகம் என்பதே தமிழ் சொல் இல்லையாம். தமிழில் 'மூஞ்சி' என்றுதான் சொல்லவேண்டுமாம். அப்படி பார்த்தால் 'மூஞ்சிநூல்' என்பதுதான் சரி. முகத்திற்கு வதனம் என்றும் சொல்கிறார்கள். அது சரியான தமிழ் சொல்லா என்பதை தமிழில் புலமை பெற்ற நண்பர் ஊமைக்கனவுகள் விஜு சொன்னால் சரியாக இருக்கும்.
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கையாளர் சகோதரர் எஸ்.பி.எஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. முகம் என்பது தமிழ்ச் சொல்தான். கீழே உள்ள மேற்கோள்களே போதும் என்று நினைக்கிறேன். (இன்னும் உண்டு)

      அகத்தின் அழகு முகத்தில் தெரியும் – பழமொழி

      மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
      நோக்கக் குழையும் விருந்து. – திருக்குறள் 90

      கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
      புண்ணுடையர் கல்லா தவர். – திருக்குறள் 393

      முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
      அகநக நட்பது நட்பு - திருக்குறள் 786

      தீராக் காதலின் திருமுகம் நோக்கிக்
      கோவலன் கூறும் ஓர் குறியாக் கட்டுரை –
      - சிலப்பதிகாரம் (மனையறம் படுத்த காதை)

      Delete
  2. தங்களின் கருத்து மிகச் சரி..

    ஆனாலும் - வரிந்து கட்டிக்கொண்டு மொழி பெயர்த்து -
    பதிவு செய்பவர்களை எப்படித் திருத்துவது!....

    ReplyDelete
    Replies
    1. எனது கருத்தினைச் சரி என்று சொன்ன சகோதரர் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. ஃபேஸ்புக்கை ஃபேஸ்புக் என்று அழைப்பதுதான் சரியானது! நல்ல விளக்கம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களே ஃபேஸ்புக்கை ஃபேஸ்புக் என்று அழைப்பதுதான் சரி

      Delete
  4. நட்பு நூல் எனக்கூறலாம்

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களே, நீங்கள், எனது கட்டுரையின் மையக்கருத்தினை சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன். பேஸ்புக் (Facebook) என்பதனை அதன் பெயரான பேஸ்புக் (Facebook) என்ற பெயரிலேயே அழைப்பதுதான் முறை.

      Delete
  5. Replies
    1. சகோதரர் திண்டுக்கல்லார் அவர்களே! நீங்களும், எனது கட்டுரையின் மையக்கருத்தினை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்றுதான் நினைக்கிறேன்.

      பேஸ்புக் (Facebook) என்பதனை அதன் பெயரான பேஸ்புக் (Facebook) என்ற பெயரிலேயே அழைப்பதுதான் முறை.

      Delete
  6. நண்பர் செந்தில் குமார் அவர்கள் சொல்வது போல் வதனம் என்பது சரியான பெயரே தங்களின் விளக்கவுரை நன்று நண்பரே..
    தமிழ் மணம் 3

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களே! நீங்களுமா? பேஸ்புக் (Facebook) என்பதனை அதன் பெயரான பேஸ்புக் (Facebook) என்ற பெயரிலேயே அழைப்பதுதான் முறை.

      Delete
  7. பின்னூட்டம் இடும் அன்பர்கள், எனது கட்டுரையை நான் சொன்ன, உதாரணங்களோடு நன்றாகப் படித்து, கருத்துரை இடும்படி கேட்டுக் கொள்கிறேன். முகநூல், மூஞ்சி நூல், நட்புநூல், வதன நூல் – என்பதெல்லாம் - FACEBOOK என்ற பெயரை தமிழ்ப்படுத்துவது ஆகும். இது சரியன்று. பேஸ்புக் (Facebook) என்பதனை அதன் பெயரான பேஸ்புக் (Facebook) என்ற பெயரிலேயே அழைப்பதுதான் முறை.

    ReplyDelete
  8. உலகம் முழுமைக்கும் ,ஷேக்ஸ்பியர் ,ஷேக்ஸ்பியர்தான் , பேஸ்புக் , பேஸ்புக்தான் :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் பகவான்ஜீ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      ஷேக்ஸ்பியர் சொல்வது போல “ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும் ரோஜா ரோஜாதான்”

      "What's in a name? That which we call a rose
      By any other name would smell as sweet."
      -William Shakespeare (Romeo and Juliet)

      “பேஸ்புக்கை எந்த பெயரிட்டு அழைத்தாலும் பேஸ்புக் பேஸ்புக்தான்”

      ( பெரும்பாலும், மேனாட்டவர்கள் பேஸ்புக்கை ஒரு சமூக வலைத்தளமாகவே, நல்ல காரியங்களுக்கே பயன்படுவது கண்கூடு. ஆனால், இங்கு ஜாதி, மத, இன அரசியலுக்கு பயன்படுத்தி பேஸ்புக்கின் நோக்கத்தையே சிதைத்து விட்டார்கள் என்பதே உண்மை)

      Delete
  9. எல்லாரும் தப்பு. "மொகரக்கட்டைப் புஸ்தகம்" என்பதுதான் சரி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு என்ன மறுமொழி எழுதுவது என்று தெரியவில்லை.

      Delete
  10. விவாதம் தொடரட்டும் ஐயா
    தம+1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தையாருக்கு நன்றி.

      Delete
  11. நல்ல விவாதம். தமிழ்ப்படுத்துகிறோம் என்று கூறி அவ்விலக்கிலிருந்து பல சூழல்களில் மாறிவிடுகிறோம் என்பதற்கு இவை போன்ற மொழிபெயர்ப்புகளே காரணமாகிவிடுகின்றன.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  12. Face Book ஐ தமிழாக்கம் செய்யாமல் அப்படியே அழைப்பதுதான் சரியென்று நீங்கள் சொல்வதை ஆமோதிக்கிறேன். Rotary Club ஐ சுழல் கழகம் என அழைத்தபோது Rotary International அவ்வாறு அழைக்கக்கூடாது என சொல்லிவிட்டதாம். சிறப்புப் பெயரை அப்படியே அழைப்பது தான் சரி. தமிழ் ஆர்வலர்கள் இதை புரிந்துகொண்டால் சரி.

    ReplyDelete
    Replies
    1. நான் சுற்றி வளைத்துச் சொன்னதை, நறுக்கென, நாலு வார்த்தைகளில், சுருங்கச் சொல்லி விளங்க வைத்த அய்யா V.N.S அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. உங்கள் அகத்தின் அழகு எழுத்திலும் தெரிகிறது அய்யா....
    முகப்புத்தகமே வேண்டாம் என்பது என் நிலை....

    உங்களுக்கு தமிழ் இளங்கோ என்ற பெயர் சரிதான்...
    எத்தனை ஆதங்கம்...எத்தனை ஆதாரம்...தொடரட்டும்....

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் பாராட்டிற்கு நன்றி.

      Delete
  14. பழனி. கந்தசாமி Thursday, November 05, 2015 6:34:00 a.m.
    எல்லாரும் தப்பு. "மொகரக்கட்டைப் புஸ்தகம்" என்பதுதான் சரி.

    ஐயா பேஸ்புக், முகநூல், மூஞ்சிபுக், என்பதெல்லாம் மாறி தற்போது "பேச்சிபுக்" என வந்து நிலமை மோசமாகிக்கொண்டிருக்கிறது, இன்னும் சிறிது காலங்களில் மார்க்கே வைத்த பெயரை மறந்துவிடுவார் பாருங்களேன்.
    தமிழாக்கம் வரவேற்கப்பட வேண்டியவைதான் ஆனால் எதற்கு தமிழாக்கம் தேவை என்பதை மறந்து விடுகிறார்கள். தற்போது வாட்ஸ்அப் பிற்கு ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்,,,

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சகோதரரே! நீங்கள் சொல்வது போல வாட்ஸ்அப்பையும் ”கட்செவி” என்று தமிழாக்கம் செய்கிறார்கள். கட்செவி என்பதற்கு தமிழில் பாம்பு என்று பொருள். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  15. ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று மொழிபெயர்த்துக் கூறுவது சரியல்ல என்று அவர்கள் உண்மைகள் தளத்தில் படித்த நினைவு.

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. நமது வலைத்தள நண்பர்கள் , பேஸ்புக்கை, முகநூல் என்று எழுதுவதை ரொம்பநாளாக பார்த்ததன் விளைவாக மனதில் எழுந்த ஆதங்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. அவர்கள் உண்மைகள் என்ன எழுதினார்கள் என்று தெரியவில்லை. இணைப்பு இருந்தால் தெரிந்து கொள்ளலாம்.

      Delete
  16. Replies
    1. நீங்கள் யார் என்று அறிந்து கொள்ள முடியாதது போலவே, என்ன அர்த்தத்தில் இதனை சொல்லி இருக்கிறீர்கள் என்றும் தெரிந்து கொள்ள இயலவில்லை.

      Delete
  17. முகநூல் என்பது சரியில்லை என்றாலும் அது வழக்காறாக ஆகி விட்டது! எனவே அப்படியே விட்டு விடலாம் என்னபதே என் கருத்து!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யா! தங்கள் கருத்தினை ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் மரபுப்படி, நான் பேஸ்புக் நிறுவனர் வைத்த பெயரான, பேஸ்புக் என்றே சொல்ல விரும்புகிறேன்.

      Delete
  18. ஃபேஸ்புக்.... என்றே அழைக்கலாம் - தவறில்லை.... தமிழ்படுத்துகிறேன் என சில சொற்களை படுத்தி எடுக்கிறார்கள்.....


    இருந்தாலும், மொகரக்கட்டை புஸ்தகம் என்றும், முகப்புத்தக இற்றை என்றும் நானும் எனது பதிவுகளில் உபயோகிக்கிறேன்! :)

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

      Delete
  19. பல சொற்களைத் தமிழ்படுத்துகிறோம் என்று சொல்லி பல சமயங்களில் அது ஒட்டாமல் போகின்றன.

    முகப்புத்தகம், முக நூல் என்று சொல்லப்பட்டு வ்ந்தாலும், ஃபேஸ்புக் என்று சொல்லுவதே போதும். ஆனால் நாங்களும் அதன் தமிழாக்கத்தை பதிவுகளில் சொல்லுகின்றோம்...

    ReplyDelete

  20. இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  21. இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. மனங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. அதை அதை அதனதன் பெயரில் அழைப்பது மட்டுமே அனைவருக்கும் புரியக்கூடியதாக இருக்கும்.

    இதில் மாற்றமோ தமிழாக்கமோ போன்ற எதுவுமே தேவையில்லை என்பதே என் கருத்து.

    கஷ்டப்பட்டு அப்படியெல்லாம் செய்வதால் குழப்பம் மட்டுமே மிஞ்சும். யாருக்கும் ஒன்றும் புரியாது.

    ReplyDelete
    Replies
    1. திரு V.G.K அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி. உங்கள் கருத்தினை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

      Delete
  24. உங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
    http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html

    பதிவிற்கு மீண்டும் வருகிறேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. சகோதரி ஆசிரியை கீதா (புதுக்கோட்டை) அவர்கள் , தனது பத்தில், உங்களுக்கு இட்ட பின்னூட்டத்திலிருந்தே, நிச்சயம் உங்களிடமிருந்து தொடர்பதிவு அழைப்பு வரும் என்று எதிர்பார்த்து எழுதத் தொடங்கி விட்டேன். பாதி கட்டுரை எழுதி வைத்துள்ளேன். மீதியை எழுதியதும் வெளியிடுவேன். எதிர்பார்ப்பை பொய்க்காத, அன்புச் சகோதரி தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  25. பெயர்ச்சொற்களை அப்படியே சொல்வதுதான் சரி..நானும் வழக்காகிப் போனதால் முகநூல் என்று பயன்படுத்தத்தான் செய்கிறேன்..ஆனாலும் இது சரி இல்லையே என்று என் மனதில் ஓடிக்கொண்டுதான் இருந்தது. google கூகிளாக இருக்கும்போது facebook முகநூல் என்று ஏன் மாறியது? ஃபேஸ்புக் என்றே சொல்லலாம்.
    பதிவிற்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. ” google கூகிளாக இருக்கும்போது facebook முகநூல் என்று ஏன் மாறியது? ஃபேஸ்புக் என்றே சொல்லலாம்” – என்ற நல்ல கேள்வி நல்ல பதில் சொன்ன, சகோதரி அவர்களுக்கு நன்றி. .ஃபேஸ்புக் என்றே அழைப்போம்.

      Delete
  26. தங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். ஆனால் மற்ற இந்திய மொழிகளில் இருப்பது போல் க,ச, ட, த, ப போன்ற எழுத்துகளின் நால்வித உச்சரிப்பு பேதம் தமிழில் இல்லையென்பதால் ஆங்கிலத்தைத் தமிழில் எழுதும்போது சில குறைபாடுகள் எழுவதுண்டு. facebook என்பதை எப்படி உச்சரிக்கிறோமோ அப்படியே எழுதுவதும்தான் முறை.. ஆனால் பேஸ்புக் என்று எழுதும்போது பாமரர்கள் அதை pacebook என்றோ basebook என்றோ உச்சரிக்கக்கூடும். f உச்சரிப்பு தமிழில் இல்லையென்றாலும் அதற்கு மாற்றாக ஃ போட்டு எழுதிப் பழகியுள்ளதால் ஃபேஸ்புக் என்று எழுதினாலன்றி அது சரியான உச்சரிப்பைத் தாராது..அதனாலேயே அதை முகநூல் என்று எழுதிவந்தேன். இனி ஃபேஸ்புக் என்றே நானும் எழுதப் பழகுகிறேன். சிந்தனை தூண்டும் கருத்துப்பகிர்வுக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு நன்றி. நேரம் கிடைக்கும் போது இந்த பதிவினில் .ஃபேஸ்புக் என்றே திருத்தி விடுகிறேன்.

      Delete
  27. நான் கவனமாக தவிர்க்கும் சொல் இது. ஃபேஸ்புக், பேஸ்புக் ஜேர்மனிய உச்சரிப்பிலும் சரிதான். முகநூல் என்பது சரியல்ல. பேஸ்புக் என்றில்லை எந்த மொழியில் பெயர்ச்சொல்லாய் ஒரு சொல் இருந்தாலும் அதை அப்படியே உச்சரிப்பது தான் சரி. மொழிமாற்றம் செய்கின்றோம் என குழப்பியடிக்காமல் இருந்தால் சரி

    ReplyDelete
    Replies
    1. சகோதரி ‘ஆல்ப்ஸ் தென்றல்’ நிஷா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete