Friday 2 January 2015

வி.கிரேஸ் பிரதிபா – துளிர் விடும் விதைகள் (நூல் அறிமுகம்)



சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் (05.10.2014, ஞாயிறு) மாலை புதுக்கோட்டை, நகர்மன்றத்தில் ஒரு இனிய விழா நடை பெற்றது. ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களது மூன்று  நூல்கள் வெளியீட்டு விழாதான் அது. நானும் போயிருந்தேன்.அப்போது அய்யா முத்துநிலவன் அவர்களும் மற்ற நண்பர்களும் “ தேன் மதுரத் தமிழ் கிரேஸ் என்ற வலைப்பதிவர் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும், வலைப் பதிவர்களை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே தனது குடும்பத்துடன் வந்து இருக்கிறார். அவர் ஒரு சாப்ட்வேர் என்ஜீனியர். தமிழார்வம் மிக்கவர் ‘ என்றும் சொன்னார்கள். அவரை அறிமுகமும் செய்து வைத்தனர். தேன் மதுரத் தமிழ் கிரேஸ் எனப்படும் அந்த பதிவர் சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள். அவருடைய வலைத் தளத்தின் பெயர் (http://thaenmaduratamil.blogspot.com) தேன் மதுரத் தமிழ் என்பதாகும். இன்னும் http://innervoiceofgrace.blogspot.com மற்றும் http://sangamliteratureinenglish.blogspot.com என்ற தன்னுடைய ஆங்கில வலைத் தளங்களிலும் எழுதி வருகிறார்.

சகோதரி வி.கிரேஸ் பிரதிபா அவர்கள் எழுதிய துளிர் விடும் விதைகள் என்ற கவிதை நூலை அறிமுகம் செய்து எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பெரும்பாலும் இவரது கவிதைகள், புதுக் கவிதைகளுக்கே உரிய “இயல்பு நவிற்சி அணி கொண்டு அலங்கரிக்கின்றன.

தமிழின் பெருமை:

தமிழுக்கு தமிழ், செந்தமிழ், தீந்தமிழ் என்று பல பெயர்கள். சொல்லிக் கொண்டே போகலாம். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர் என்று பாடினார். செவ்வாயோ எவ்வாயோ  எக்கிரகம் சென்றிடினும் தமிழ் கொண்டே சென்றிடுவாய் (பக்கம்.23) என்ற கொள்கை கொண்ட நமது சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள்,

பல மொழி கேட்பினும்
அயல் மொழி பயன்படுத்தினும்
இன்னுயிராய்க் குருதியோடு கலந்தது தமிழன்றோ?
வாய் மொழி மாறினும் உயிர் மொழி மாறுமோ?
இடையில் துவங்கி இடையில் போன மொழிபல உண்டு
இடையூறு பல தாண்டித் தொன்றுதொட்டு
என்றும் இளமையுடன் செம்மொழியாய் இனிப்பினும்
இனிப்பது எம் தமிழ் அன்றோ!
                                       - (பக்கம்.22)

என்று சொல்லி மகிழ்கிறார்.

தந்தையின் பங்கு:

ஒரு குழந்தையின் வளர்ப்பினில் அந்த குழந்தைக்கு தாய் செய்யும் தியாகங்கள் போன்றே தந்தையின் தியாகமும் மகத்தானது. சமுதாயத்தில்  தாயின் தியாகம் போற்றப்படும் அளவிற்கு, தந்தையின் தியாகம் நினைக்கப் படுவதில்லை. திருவள்ளுவர், தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி என்றும், மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி என்றும் பேசுகிறார். நமது கிரேஸ் அவர்கள்,

என் தந்தாய்
நீ
எல்லாம் தந்தாய்
எதுவும் எதிர்பாராமல்

என்னைச் செதுக்கிய சிற்பியே
நீ இல்லாமல் நான் வெறும் கல்லே
என்னை உருவாக்கிய குயவனே
நீ இல்லாமல் நான் வெறும் மண்ணே   
                     - (பக்கம்.26)

என்று, தந்தையர் தினத்தன்று, தந்தையின் பெருமையைச் சொல்லி சிறப்பிக்கின்றார்.

தண்ணீர் தண்ணீர்:

இப்போது எங்கு பார்த்தாலும் தண்ணீர் பிரச்சினைதான் பெரிதாகப் பேசப்படுகிறது. இரண்டு உலக யுத்தங்கள் வந்து விட்டன. இனி மூன்றாவது உலக யுத்தம் என்ற ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள். அன்று தண்ணீருக்காக அலைந்த காகம் ஒன்று, பானையின் அடியில் இருந்த கொஞ்சம் தண்ணீரைக் குடிக்க, சிறு சிறு கற்களைப் போட்ட கதை எல்லோருக்கும் தெரியும். நமது கவிஞர் அன்றைய கதையை நினைவு படுத்தி,  

கதை கூறிய என் சிந்தை
கவர்ந்ததே ஒரு காக்கை
தொடுத்ததே கேள்விக் கணை

கூழாங்கல் எங்கே?
பானையும் எங்கே?
தண்ணீரும்  எங்கே எங்கே?
                     - (பக்கம்.32)

என்று கூழாங்கல் மறைந்து போகும் நிலைமை, மண் பானையின் பயன்பாடு அருகி வந்தமை, தண்ணீர்ப் பிரச்சினையென்று சுற்றுப்புறச் சூழல் பற்றி, சில வரிகளில் ஓவியமாய் வரைகின்றார்.

கடற்கரையில்:

கடற்கரையில் நுரைத்து வரும் நுரைக் கற்றைகளை வெள்ளிக் கொலுசிற்கு உவமையாக்கி காட்டுகிறார்.

நுரைக்கும் வெள்ளியைக்  கொலுசாய் அணிவிக்க
காலை வருடும் அலைகள்
அவற்றிடம் பொறாமை கொண்டு கால்களைப்
புதையச் செய்யும் மணல்

                          - (பக்கம். 61)

இந்த வரிகள் வரும் கடற்கரை என்ற கவிதையில் நிறையவே உவமைகளைக் காணலாம்.

கம்ப்யூட்டர் காலம்:

இது கம்ப்யூட்டர் யுகம். இது வந்ததும் தொலந்து போனவை எத்தனை எத்தனையோ? தபால் எழுதுவது கூட மின்னஞ்சல் வழியேதான். அதில் கையெழுத்தே கிடையாது. கவிஞரின் நுணுக்கமான சிந்தனை வரிகள் இவை.

அஞ்சல் ஆவணம்
அனைத்தும் கணிணியில்
தொலைத்து விட்டேனே
கையெழுத்தை!
              
             -( பக்கம்.94) 

பாட்டு வரும்:

முன்பெல்லாம் பெண் கவிஞர்கள் காதலைப் பற்றி வெளிப்படையாக பாடுதல் அரிது. இன்று அப்படி இல்லை. வலைப்பதிவில் பல பெண் கவிஞர்கள் எழுதி வருவதைக் காணலாம். நமது சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்கள் எழுதிய காதல் பாடல்களில் ஒன்று இதோ

நாடியில் விரல் வைத்து
நாள்கணக்காய் யோசித்தாலும்
எழுதுகோலைக் கடித்து கடித்து
எழாமல் எண்ணினாலும்

காகிதத்தைக் கசக்கி கசக்கி
கடமையாகச் சிந்தித்தாலும்
கவிழ்ந்து படுத்து மணிக்கணக்காய்
காலாட்டி யோசித்தாலும்

வராத கவிதை நீர்வீழ்ச்சியாய்
வந்ததே உனைக் கண்டதும்

                    - ( பக்கம். 48)
  
இந்த வரிகளைப் படித்ததும், எனக்கு எம்ஜிஆர் சரோஜாதேவி பாட்டு வரும் உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்என்று பாடும் டூயட் காட்சி நினைவுக்கு வந்தது. படத்தின் பெயர் நான் ஆணையிட்டால். பாடலாசிரியர் - வாலி

ஆண்: பாட்டு வரும்

பெண்: என்ன?

ஆண்: பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்

பெண்: ம் ... ம்ஹூம் ...

ஆண்: பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
      அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
       உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
      அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்

பெண்: அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
       அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும் 

பாட்டு வரும்  உன்னைப் பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்என்ற என்ற இந்த பாடலை, கண்டு கேட்டு களித்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை சொடுக்கவும் (CLICK HERE)



தமிழ்ப் பணி தொடரட்டும்:

நூலினைப் பற்றி சிறப்பாக இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் (வி.கிரேஸ் பிரதிபா) அவர்கள் ஐங்குறுநூறு பாடல்களுக்கு எளிமையான உரை எழுதி இருக்கிறார். மேலும் தமிழ் இலக்கியம் சம்பந்தமாக ஆங்கிலத்திலும் கட்டுரைகள் எழுதி இருக்கிறார். இவைகளும் நூல்களாக வெளி வந்தால் நல்லது. தமிழ் இலக்கியத்திற்கு இவை மேலும் சிறப்பு செய்யும். வாழ்க அவரது தமிழ்ப் பணி.                                              
                                                          
இவரது இந்த கவிதை நூலானது மதுரையில் நடந்த  வலைப் பதிவர்கள் சந்திப்பு மாநாட்டில் (26.10.2014 ஞாயிறு) சிறப்பாக வெளியிடப்பட்டது. 

'துளிர் விடும் விதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

நூலின் பெயர்: துளிர் விடும் விதைகள்
நூலாசிரியர்:   வி.கிரேஸ் பிரதிபா
பக்கங்கள்: 104  விலை ரூ 100/=
நூல் வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலாநகர், தஞ்சாவூர்
               613 007 போன்: 04362 239289



45 comments:

  1. படித்து ரசித்திருந்தாலும், தங்களின் ரசனையை ரசித்தேன்...

    ReplyDelete
  2. படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நல்ல ரசனைப்பார்வை!

    ReplyDelete
  3. புத்தகத்தினை படிக்கத்தூண்டசெய்யும் விமர்சனம்! அருமை! நன்றி!

    ReplyDelete
  4. ஒரு நூல் அறிமுகத்தை இத்தனை சுவாரஸ்யம் சேர்த்து சொல்லமுடியுமா!!! கிரேஸின் ஆகச்சிறந்த கவிதைகளை அழகாய் தொடுத்திருக்கிறீர்கள். மீதியை படிக்கும் ஆவலாய் தூண்டியிருகிரீர்கள்:) அருமை அண்ணா! இருவருக்கும் வாழ்த்துகள்:)

    ReplyDelete
  5. அருமையாய் செதுக்கிக் கொடுத்துள்ள அவர்களின் கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளன. ரசித்துப்படித்தேன்.

    அதைத் தாங்கள் இவ்விடம் அலசிச்சொல்லியுள்ளது அதைவிட சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளன.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள் .... கவிதை நூலின் படைப்பாளிக்கும், விமர்சனதாரர் ஆகிய தங்களுக்கும்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  6. சிறப்பான விமர்சனம் நண்பரே,,,, நானும் இந்த நாலை விமர்சனப்பதிவு இட்டு இருக்கிறேன் வருகை தரவும்
    த.ம 4

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா!
    எனக்கு சிறப்பான அறிமுகம் கொடுத்து என் நூலையும் உங்களுக்குப் பிடித்த கவிதைகளைச் சுட்டி அறிமுகம் செய்திருப்பது கண்டு உள்ளம் நெகிழ நன்றி கூறுகிறேன். என் ஆங்கிலத் தளங்களையும் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி...ஆங்கிலத்திலும் வெளியிடுவேன் ஐயா, உங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி.
    'பாட்டு வரும்' பாடல் இணைத்தது அருமை ஐயா, பார்க்கிறேன்.
    மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  8. ரசித்துப் படித்தேன் என்று சொல்லியிருப்பது கண்டு மகிழ்ச்சி VGK ஐயா, உளமார்ந்த நன்றி!

    ReplyDelete
  9. //தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...
    ரசித்துப் படித்தேன் என்று சொல்லியிருப்பது கண்டு மகிழ்ச்சி VGK ஐயா, உளமார்ந்த நன்றி!//

    மிகவும் சந்தோஷம், மேடம்.

    “துளிர் விடும் விதைகள்” என்ற தங்கள் நூலின் தலைப்பும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

    அன்புடன் VGK

    ReplyDelete
  10. வணக்கம்
    ஐயா
    தங்களின் இரசனையில் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம 6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. விமர்சனம் புத்தகத்தைப் படிக்கும் ஆவலைத் துர்ண்டுகிறது ஐயா.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. சகோதரி தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் ‘துளிர் விடும் விதைகள் ‘ நூலைப்பற்றிய தங்களின் திறனாய்வு, திருமதி அருணா செல்வம் அவர்கள் சொன்னதுபோல் அந்த நூலைப் படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது. கடல் நுரையை இப்படியும் கற்பனை செய்து பார்க்கமுடியும் என எண்ண வைத்த அவரது கவிதை மிக அருமை. அவரது தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்! அவரது நூலை எங்களுக்கு அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  13. தேன் மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களின் கவிதைகள் அனைத்தும் மிக அருமை.
    தங்கள் தேர்ந்து எடுத்து கொடுத்த கவிதைகள் அனைத்து கவிதைகளையும் படிக்கும் ஆவலை தூண்டுகிறது.
    பகிர்ந்த பாடல் (பாட்டு வரும்) அருமை.

    ReplyDelete
  14. மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...

    // படித்து ரசித்திருந்தாலும், தங்களின் ரசனையை ரசித்தேன்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி> சென்னை பித்தன் said...

    // படிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் நல்ல ரசனைப்பார்வை! //

    அய்யா சென்னை பித்தன் அவர்களுக்கு நன்றி

    ReplyDelete
  16. மறுமொழி> ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  17. மறுமொழி> Mathu S said...

    // தம ++ //

    சகோதரர் எஸ் மது அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  18. மறுமொழி> Mythily kasthuri rengan said...

    சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    // ஒரு நூல் அறிமுகத்தை இத்தனை சுவாரஸ்யம் சேர்த்து சொல்லமுடியுமா!!! கிரேஸின் ஆகச்சிறந்த கவிதைகளை அழகாய் தொடுத்திருக்கிறீர்கள். மீதியை படிக்கும் ஆவலாய் தூண்டியிருகிரீர்கள்:) அருமை அண்ணா! இருவருக்கும் வாழ்த்துகள்:) //

    ஆமாம் சகோதரி. நூல் விமர்சனம் என்றாலே பலர் ஓடி விடுகின்றனர். எனவே சுவாரஸ்யம் கருதி வித்தியாசமாக எழுதினேன். மேலும் எம்ஜிஆர் – சரோஜாதேவி நடித்த பாடல் காட்சியையும் மேற்கோள் செய்தேன்.

    ReplyDelete
  19. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    // அருமையாய் செதுக்கிக் கொடுத்துள்ள அவர்களின் கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளன. ரசித்துப்படித்தேன். //

    தாங்கள் ரசித்துப் படித்ததற்கு மிக்க மகிழ்ச்சி. உங்கள் ரசிப்பினை நூலாசிரியரும் ரசித்து இருப்பதாகவே தெரிய வருகிறது.

    // அதைத் தாங்கள் இவ்விடம் அலசிச்சொல்லியுள்ளது அதைவிட சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளன. பாராட்டுக்கள் + வாழ்த்துகள் .... கவிதை நூலின் படைப்பாளிக்கும், விமர்சனதாரர் ஆகிய தங்களுக்கும். //

    மூத்த பதிவரான தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  20. மறுமொழி> KILLERGEE Devakottai said...

    // சிறப்பான விமர்சனம் நண்பரே,,,, நானும் இந்த நாலை விமர்சனப்பதிவு இட்டு இருக்கிறேன் வருகை தரவும்
    த.ம 4 //

    நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி. உங்களின் நூல் விமர்சனக் கட்டுரைக்கு கருத்துரை தந்தேனா இல்லையா என்று தெரியவில்லை. உங்கள் பதிவினை வந்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  21. அருமையான விமர்சனம். அவரின் நூலை வாசிக்க ஆவல் மேலிடுகிறது. கவிதைகள் படித்து ரசிக்கின்ற மனம் இப்போது இல்லை என்றாலும் இவரின் தமிழார்வத்திற்காக வாசிக்கத்தோன்றுகிறது. ஐங்குறு நூற்றிற்கு உரை எழுதியிருக்கிறாரா? ஆச்சர்யமாயிருக்கிறது. படிக்கின்ற ஆசையும் துளிர்விடுகிறது.

    ReplyDelete
  22. அருமையான விமர்சனம்.தங்களின் பார்வையில் பாடலுடன் தந்திருப்பது மேலும் சிறப்பு.

    ReplyDelete
  23. மறுமொழி> தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

    நூலாசிரியர் சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கும், இந்த பதிவினில் மற்றவர்கள் கருத்துக்களுக்கு பதில் அளித்தமைக்கும் நன்றி.

    // வணக்கம் ஐயா! எனக்கு சிறப்பான அறிமுகம் கொடுத்து என் நூலையும் உங்களுக்குப் பிடித்த கவிதைகளைச் சுட்டி அறிமுகம் செய்திருப்பது கண்டு உள்ளம் நெகிழ நன்றி கூறுகிறேன். //

    உங்கள் நூல் வெளியீட்டு விழா அன்று வாங்கிய இந்த கவிதை நூலை அடுத்த நாளே படித்து விட்டேன். நூல் அறிமுகம் செய்ய அப்போதே குறிப்புகளும் எடுத்து விட்டேன். ஆனால் தொடர்ந்து, பல நண்பர்கள் இந்த நூலினைtத் தொடர்ந்து அறிமுகம் செய்து கொண்டே இருந்த படியினால்,உடனே வெளியிடவில்லை.

    உங்கள் கவிதை நூலில் பிடித்த கவிதைகள் இன்னும் உண்டு. கட்டுரையின் சுருக்கம் மற்றும் வாசகரின் மனநிலை கருதி, எல்லாவற்றையும் இங்கு தந்து யாருக்கும் சலிப்பினை தர வேண்டாம் என்பதனால் கட்டுரையை சுருக்கி விட்டேன்.

    // என் ஆங்கிலத் தளங்களையும் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சி...ஆங்கிலத்திலும் வெளியிடுவேன் ஐயா, உங்கள் வாழ்த்திற்கு உளமார்ந்த நன்றி. //

    தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவிடச் செய்யும் உங்கள் தமிழ்ப் பணிக்கு நன்றி.

    // 'பாட்டு வரும்' பாடல் இணைத்தது அருமை ஐயா, பார்க்கிறேன்.
    மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா! //

    மேலே சகோதரி மைதிலி கஸ்தூரி ரெங்கன் அவர்களுக்கு தந்த மறுமொழி வரிகளையே இங்கும் தருகிறேன். > ” ஆமாம் சகோதரி. நூல் விமர்சனம் என்றாலே பலர் ஓடி விடுகின்றனர். எனவே சுவாரஸ்யம் கருதி வித்தியாசமாக எழுதினேன். மேலும் எம்ஜிஆர் – சரோஜாதேவி நடித்த பாடல் காட்சியையும் மேற்கோள் செய்தேன்.”

    இனிமேல் எனக்கும், இந்த பதிவினில் ”பாட்டு வரும்” என்ற பாடலைக் கேட்ட நண்பர்களுக்கும், இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம் இந்த நூலும் கூடவே நினைவுக்கு வரும். நன்றி.




    ReplyDelete
  24. விமர்சனம் அருமை நூலைப் படிக்கத் தூண்டுகிறது! கவிதைகள் நன்று!

    ReplyDelete
  25. மறுமொழி> ரூபன் said...

    கவிஞர் அவர்களுக்கு வணக்கம்> எனது இலக்கிய ரசனையை பாராட்டியமைக்கு நன்றி.

    ReplyDelete
  26. மறுமொழி> அருணா செல்வம் said...

    சகோதரி கவிஞர் அருணா செல்வம் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

    ReplyDelete
  27. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    அய்யா V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. கடற்கரையில் நாம் நிற்கும் போது, அலைகள் நம் கால்களைத் தொட்டுவிட்டு செல்லும் போது, நுரைகள் காலில் சிக்கிக் கொள்ளும். நமது கவிஞருக்கு அவை காலில் கொலுசுகளாக தோன்றி இருக்கிறது. அழகான உவமை.

    ReplyDelete
  28. மறுமொழி> கோமதி அரசு said...

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

    ReplyDelete
  29. மறுமொழி> கவிப்ரியன் கலிங்கநகர் said...

    சகோதரர் கவிப்ரியன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

    // அருமையான விமர்சனம். அவரின் நூலை வாசிக்க ஆவல் மேலிடுகிறது. கவிதைகள் படித்து ரசிக்கின்ற மனம் இப்போது இல்லை என்றாலும் இவரின் தமிழார்வத்திற்காக வாசிக்கத்தோன்றுகிறது. ஐங்குறு நூற்றிற்கு உரை எழுதியிருக்கிறாரா? ஆச்சர்யமாயிருக்கிறது. படிக்கின்ற ஆசையும் துளிர்விடுகிறது.//

    சகோதரி அவர்களைப் பாராட்டியதற்கு நன்றி. அவர் எழுதிய ஐங்குறுநூறு பாடல்களுக்கான எளிமையான உரையை அவரது பதிவுகளில் காணலாம். சென்று பார்க்கலாம். நன்றி.

    ReplyDelete
  30. மறுமொழி> Sasi Kala said...

    // அருமையான விமர்சனம்.தங்களின் பார்வையில் பாடலுடன் தந்திருப்பது மேலும் சிறப்பு. //

    சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete

  31. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...

    // விமர்சனம் அருமை நூலைப் படிக்கத் தூண்டுகிறது! கவிதைகள் நன்று! //

    புலவர் அய்யாவின் பாராட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  32. வணக்கம் ஐயா
    சகோதரி கிரேஸ் அவர்களின் கவிதை நூலை மிக சிறப்பாக அறிமுகம் செய்து மதிப்புரையும் தந்திருக்கிறீர்கள் ஐயா. பார்ப்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. இடையில் பாட்டு வரும் பாடலையும் இணைத்தது ரசனை. சகோதரிக்கு வாழ்த்துகள். பகிர்ந்த தங்களுக்கு என் நன்றிகள். இருவரின் தமிழ்ப்பணியும் தொடரட்டும். நன்றி..

    ReplyDelete
  33. அருமையான அற்புதமான நூல் அறிமுகம்
    எடுத்துக் கொண்ட கவிதையும் அதற்கான
    விளக்கமும் கவித்துவமாய் இருந்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. மறுமொழி> அ. பாண்டியன் said...

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைத்தளம் வந்து கருத்துரையும், பாராட்டும் தந்த மணவை ஆசிரியர் அ பாண்டியன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

  35. மறுமொழி> Ramani S said...

    ஒரு அருமையான கவிஞரின் பாராட்டுரைக்கு நன்றி.

    ReplyDelete
  36. துளிர் விடும் விதைகள் கவிதைத் தொகுதியை பலரும் பாராட்டியுள்ளனர் .தங்கள் பாராட்டையும் பெற்றுள்ள நூலின் ஆசிர்யர் கிரேசி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    கருத்துரையோடு பாராட்டும் தந்திட்ட கல்வி அதிகாரி, மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  38. ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு விதமான நோக்கு. மதிப்புரையை படித்தேன், ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
  39. மறுமொழி> Dr B Jambulingam said...

    // ஒவ்வொருவர் பார்வையிலும் ஒவ்வொரு விதமான நோக்கு. மதிப்புரையை படித்தேன், ரசித்தேன். நன்றி. //

    முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  40. நூல் பற்றிய சிறப்பான அறிமுகம். நன்றி ஐயா.

    ReplyDelete
  41. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

    // நூல் பற்றிய சிறப்பான அறிமுகம். நன்றி ஐயா. //

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  42. மிக்க நன்று ஐயா

    ReplyDelete