Thursday 3 October 2013

ஆசைக்கோர் அளவில்லை




எனது ஆரம்பப் பள்ளி வாழ்க்கை (1 5) கிறிஸ்தவ மெஷினரி நடத்திய ஆர்.சி நடுநிலைப் பள்ளியில். அப்புறம் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை (6 11) இந்து கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில். அங்கு வகுப்புகள் துவங்கும் முன்னர் எல்லோரும் ஓரிடத்தில் கூடி   காலை இறைவணக்கமாக சமஸ்கிருத துதியோடு “ அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய் “ என்ற தாயுமானவர் முதல் பாடலையும் பாடுவோம். தாயுமானவர் பாடலை உரை இல்லாது புரிந்து கொள்வது கடினம். பின்னர் PUC படிப்பு திருச்சி நேஷனல் கல்லூரியில்.  பின்னர் பிஏ (தமிழ்)படிப்பை திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் முடித்துவிட்டு  மீண்டும் நேஷனல் கல்லூரியில் எம் ஏ (தமிழ் இலக்கியம்) சேர்ந்தேன்.அப்போது  “சைவசித்தாந்தம் எங்களுக்கு  ஒரு பாடமாக இருந்தது.அப்போது . தாயுமானவரின் பாடல்களைப் பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்டேன்.    





மனித வாழ்க்கை விசித்திரமானது. “ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். ஆனால் உற்று நோக்கினால் இந்த உலகில் நிகழந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகம் இயங்குவது எல்லாம் ஆசையினால்தான். ஆனால் மனிதனின் ஆசைக்கு அளவு உண்டா? நமது தாயுமானவர் ஆசைக்கோர் அளவில்லை “ என்கிறார். பட்டினத்தாரும் தாயுமானவரும் துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம் காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும்  இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  
 


மண்ணாசை:

ஒரு மன்னன். இந்த மண்ணுலகமே அவன் ஆட்சியின் கீழ்தான் இருக்கிறது. இருந்தாலும் கடல் மீதும் தன் அதிகாரத்தைப் பரப்ப வேண்டும் என்ற பேராசை வருகிறது. தனது எல்லையை விரிவுபடுத்த அண்டை நாடுகள் மீது போர் தொடுக்கிறான். அவனது ஆசைக்கு அளவே இல்லை. இந்த உலகமே அவன் கீழ் இருந்தாலும் அவன் இறுதியில் ஆடி அடங்குவது ஆறடி மண்ணுக்குள் தான்.

நாம் வாழும்பொழுது உலகம் முழுவதையும் வளைத்து கட்டிக் கொள்ள விரும்புகிறோம்.ஆனால் இறந்த பிறகு எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகின்றது.   -         மாசிடோனியா மன்னர் பிலிப்


பொன்னாசை:

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே போகிறது. ஆனாலும் மக்களுக்கு தங்கத்தின் மீது உள்ள மோகம் குறையவில்லை. வடக்கு திசையில் இருப்பவன் குபேரன். செல்வத்தின் அதிபதி. இதனால்தான் நிறைய கடைக்காரர்கள் தங்கள் கல்லாப் பெட்டி உள்ள இடத்தை வடக்கு நோக்கியே வைத்து இருப்பார்கள். அந்த குபேரன் போன்று சிலரிடம் பொன் இருக்கும். ஆனாலும் அவர்களிடம் ரசவாதம் செய்தால் பொன் கிடைக்கும் என்றால் அதற்கும் காடு மேடு என்று பொன்னுக்கு அலைவார்கள். மிடாஸ் (KING MIDAS) என்ற மன்னன் தான் தொட்டதெல்லாம் பொன்னாக வேண்டும் என்று தேவதையிடம் வரம் வாங்குவான். கடைசியில் அவன் தனது ஒரே மகளை அன்புடன் தொடும்போது அவளும் தங்கப் பதுமையாகி விடுகிறாள். பேராசை பெரு நஷ்டம்.

இளமை மீண்டும் வருமா?


மனிதனின் வாழ்வில் இளமை முக்கியமானது. சந்தோஷமானது. அதே சமயம் இளமை நில்லாதது. சிலர் போன இளமை மீண்டும் வரவேண்டும் என் ஆசையினால் காயகல்பம் என்னும் மருந்தினைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டு நெஞ்செரிச்சல் வந்து துன்பம் அடைகிறார்கள். காயகல்பம் என்பது சில மூலிகைகளைக் கொண்டு செய்யும் மருந்து. உண்மையில் இவர்கள் அந்த மருந்தை வாழ்நாள் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். இளமை மீண்டும் கிடைக்காது. சாப்பிடுவது  உறங்குவது என்றே முடியும். 

இதோ ஒரு திரைப்படப் பாடலின் வரிகள் இந்த பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ கீழே உள்ள முகவரியில் “க்ளிக்செய்யுங்கள். https://www.youtube.com/watch?v=f1RMPVcUzIs 


ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே
ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

பருவமென்னும் காத்திலே பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார் சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்
நாளைய உலகின் பாதையை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா மனம் பெறுமா முதுமையே சுகமா
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
சூறை காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு சுகம் செலவு இருப்பது கனவு
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்

ஆசையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே
ஓடம் போலே ஆடிடுவோமே வாழ்நாளிலே

                      - பாடல்: கண்ணதாசன் (படம்: தை பிறந்தால் வழி பிறக்கும்)
 


தாயுமானவர் பாடல்:

இப்படி மண்ணுலகில் மனிதர்கள் ஆசையினால் படும் துன்பங்களைக் கண்ட தாயுமான சுவாமிகள் “ தெய்வமே! எனக்கு உள்ளதே போதும். நான் நான் “ என்னும் அகங்காரத்தினால் பாசக் கடலுக்குள் விழாமல் காப்பாற்றி, எனக்கு பரிசுத்த நிலையை அருள்வாய். “ என்று வேண்டுகிறார்.

ஆசைக்கோ ரளவில்லை அகிலமெல் லாங்கட்டி
       ஆளினுங் கடல்மீதிலே
    ஆனைசெல வேநினைவர் அளகேசன் நிகராக
       அம்பொன்மிக வைத்தபேரும்
நேசித்து ரசவாத வித்தைக் கலைந்திடுவர்
        நெடுநா ளிருந்தபேரும் 
     நிலையாக வேயினுங் காயகற் பந்தேடி
        நெஞ்சுபுண் ணாவர்எல்லாம்
யோசிக்கும் வேளையிற் பசிதீர உண்பதும்
       உறங்குவது மாகமுடியும்
   உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
      ஒன்றைவிட் டொன்றுபற்றிப்
பாசக் கடற்க்குளே வீழாமல் மனதற்ற
       பரிசுத்த நிலையை அருள்வாய்
    பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
       பரிபூர ணானந்தமே. 
                     - தாயுமானவர் ( பரிபூரணானந்தம். பாடல் எண் 10) 



பாடலுக்கு எனது  உரை:

ஆசைக்கு ஓர் அளவே கிடையாது. ஒரு மன்னன் இந்த உலகம் முழுவதையும் கட்டி ஆண்டால் கூட, அவன் மனம் கடல் மீதும் தனது அதிகாரத்தை செலுத்தவே விரும்பும். குபேரனுக்கு நிகராக பொன் வைத்து இருப்பவர்கள் கூட இன்னும் பொன் வேண்டும் என்னும் ஆசையில் ரசவாதம் செய்ய அலைவார்கள். 

இவ்வுலகில் வய்தானவர்கள் மீண்டும் பழைய  இளமையுடன் வாழ வேண்டும் என்ற ஆசையினால் காயகல்பம் என்னும் மருந்தினைத் தேடி அலைந்து வாங்கிச் சாப்பிட்டு நெஞ்சு புண்ணாகி வருந்துவார்கள். எல்லாவற்றையும் யோசிக்கும் போது அவர்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்செரிச்சல் தீர சாப்பிடுவது உறங்குவது என்றே முடியும்.

பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற பரிபூரண ஆனந்தத் தெய்வமே! எனக்கு உள்ளதே போதும். நான் நான் “ என்னும் அகங்காரத்தினால் ஒன்றை விட்டால் இன்னொரு ஆசை என்ற பாசக் கடலுக்குள் விழாமல் இருக்கும் பரிசுத்த நிலையை அருள்வாய். “

முடிவுரை:

சில தினங்களுக்கு முன்னர் நான் தாயுமானவர் பாடல் ஒன்றுக்கு பதிவு ஒன்றினை எழுதி இருந்தேன். எனது பதிவினைப் படித்த முன்னாள் வங்கி வேளாண் அதிகாரியும் “நினைத்துப் பார்க்கிறேன் என்ற பெயரில் வலைப்பதிவு http://puthur-vns.blogspot.com  எழுதி வருபவருமான  திரு வே நடனசபாபதி அவர்கள் மேலே சொன்ன தாயுமானவர் பாடலை நினைவு படுத்தி இருந்தார். அதன் எதிரொலிதான் இந்த பதிவு. அன்னாருக்கு எனது நன்றி!



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )  

 

32 comments:

  1. எனது வேண்டுகோளை ஏற்று, தாயுமானவரின் ‘ஆசைக்கோ ரளவில்லை’ என்ற பாடலையும், அதனுடைய கருத்தையும், விரிவாகத் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  2. ஒவ்வொன்றும் விளக்கம் மிகவும் நன்றாகச் சொல்லி உள்ளீர்கள் ஐயா...

    முதல் பத்தியில் இருந்து இரண்டாவது பத்தி வரை சில வரிகள் வாசிக்க முடியவில்லை... அதனால் :

    // தாயுமானவர் பாடலை உரை இல்லாது புரிந்து கொள்வது கடினம். பின்னர் PUC படிப்பு திருச்சி நேஷனல் கல்லூரியில். பின்னர் பிஏ (தமிழ்)படிப்பை திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் முடித்துவிட்டு மீண்டும் நேஷனல் கல்லூரியில் எம் ஏ (தமிழ் இலக்கியம்) சேர்ந்தேன்.அப்போது “சைவசித்தாந்தம் ’ எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது.அப்போது . தாயுமானவரின் பாடல்களைப் பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்டேன்.

    மனித வாழ்க்கை விசித்திரமானது. “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்றார் புத்தர். ஆனால் உற்று நோக்கினால் இந்த உலகில் நிகழந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகம் இயங்குவது எல்லாம் ஆசையால்தான். ஆனால் மனிதனின் ஆசைக்கு அளவு உண்டா? நமது தாயுமானவர் ” ஆசைக்கோர் அளவில்லை “ என்கிறார் பட்டினத்தாரும் தாயுமானவரும் துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம் காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். //

    ReplyDelete
  3. தங்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன் :

    அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!

    லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html

    நன்றி ஐயா...

    ReplyDelete
  4. அருமையான பாடல் மற்றும் சிறந்த விளக்கம்.....

    ஆசை இல்லாத மனிதன் ஏது.... எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என தற்காலத்தில் சொல்கிறார்கள்... :)

    ReplyDelete
  5. ஈ .வே.ரா. கல்லூரியில் எனது நண்பர் என்னுடன் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த திரு பிச்சை முகமது அவர்கள் தமிழ் பிரிவில் பேராசிரியராக பணி ஆற்றி இருக்கிறார்.

    நீங்கள் படித்த வருடம் எப்பொழுது ?

    தாயுமானவர் பாடல்களை இப்பொழுதும் ஒவ்வொன்றாக நிதானமாக படித்திட புதுப்புது தெளிவுகள் தோன்றுகின்றன.

    தமிழ் இலக்கியத்தில் சமய பிரிவில் தாயுமானவர் ஒரு மைல் கல் .

    சுப்பு ரத்தினம்.
    www.wallposterwallposter.blogspot.in
    www.vazhvuneri.blogspot.in
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  6. பார்க்கும் இடம் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்ற பரிபூரண ஆனந்தத் தெய்வமே! ” எனக்கு உள்ளதே போதும். ” நான் நான் “ என்னும் அகங்காரத்தினால் ஒன்றை விட்டால் இன்னொரு ஆசை என்ற பாசக் கடலுக்குள் விழாமல் இருக்கும் பரிசுத்த நிலையை அருள்வாய். “

    ஆசைக் கடலில் அகப்பட்டு திணறாமல் இருக்கத்தான்
    இறைவன் திருவடிகள் பற்ற அறிவுறுத்துகிறார்கள் சமயச்சான்றோர்..!

    ReplyDelete
  7. அற்புதமான பாடல் வரிகள்.. தாயுமானவரின் வரிகளும் தங்கள் விளக்கமும் வெகு சிறப்புங்க. இது போன்ற பகிர்வுகள் தொடர வேண்டுகிறேன்.

    ReplyDelete
  8. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    // எனது வேண்டுகோளை ஏற்று, தாயுமானவரின் ‘ஆசைக்கோ ரளவில்லை’ என்ற பாடலையும், அதனுடைய கருத்தையும், விரிவாகத் தந்தமைக்கு நன்றி! //

    மீண்டும் ஒருமுறை தாயுமானவரின் பாடலை வலைப்பதிவில் எழுதுவதற்கு எனக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கித் தந்த தங்களுக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said... ( 1 & 2 )
    // ஒவ்வொன்றும் விளக்கம் மிகவும் நன்றாகச் சொல்லி உள்ளீர்கள் ஐயா...//
    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கு நன்றி!

    // முதல் பத்தியில் இருந்து இரண்டாவது பத்தி வரை சில வரிகள் வாசிக்க முடியவில்லை... அதனால் ://
    தனபாலன் சார்! தாங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள் என்று எனக்கு புரியவில்லை. எனது பதிவில் உள்ள எழுத்துக்கள் உங்கள் கம்ப்யூட்டர் திரையில் சரியாகத் தெரியவில்லையா? அல்லது நான் எழுதிய வாக்கியங்கள் குழப்பமா? எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.

    // தாயுமானவர் பாடலை உரை இல்லாது புரிந்து கொள்வது கடினம். பின்னர் PUC படிப்பு திருச்சி நேஷனல் கல்லூரியில். பின்னர் பிஏ (தமிழ்)படிப்பை திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் முடித்துவிட்டு மீண்டும் நேஷனல் கல்லூரியில் எம் ஏ (தமிழ் இலக்கியம்) சேர்ந்தேன்.அப்போது “சைவசித்தாந்தம் ’ எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது.அப்போது . தாயுமானவரின் பாடல்களைப் பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்டேன். //
    மேலே உள்ள வரிகளுக்கு விளக்கம். .. பொதுவாக சித்தர்கள், பட்டினத்தார்,தாயுமானவர் போன்றோரது பாடல்களை சாதாரணமாக புரிந்து கொள்வது கடினம். நான் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது தாயுமானவர் பாடலை புரிந்து கொண்டதைவிட பிற்பாடு கல்லூரி மாணவனாக அது சம்பந்தமான (சைவசித்தாந்தம்) பாடங்களையும் படித்ததால் புரிந்து கொண்டவை அதிகம். ஒன்றுமே தெரியாமல் தாயுமானவர் பாடலுக்கு நான் உரை சொல்லவில்லை என்பதற்காக எனது படிப்பைப் பற்றியும் இங்கு சொல்ல வேண்சியதாயிற்று.

    //மனித வாழ்க்கை விசித்திரமானது. “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்றார் புத்தர். ஆனால் உற்று நோக்கினால் இந்த உலகில் நிகழந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகம் இயங்குவது எல்லாம் ஆசையால்தான். ஆனால் மனிதனின் ஆசைக்கு அளவு உண்டா? நமது தாயுமானவர் ” ஆசைக்கோர் அளவில்லை “ என்கிறார் பட்டினத்தாரும் தாயுமானவரும் துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம் காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். //
    மேலே உள்ள வரிகளுக்கு விளக்கம். பொதுவாக அறம் எனப்படுவது இல்லறம், துறவறம். என்று இரண்டு வகைப்படும். நம்மைப் போன்ற குடும்பஸ்தர்கள் செய்ய வேண்டியது இல்லறக் கடமைகள். இல்லறத்தில் இருந்து கொண்டு, துறவிகளுக்குரிய நிலையாமை தத்துவத்தை பேசிக் கொண்டு குடும்பத்தை கவனிக்காமல் இருக்கக் கூடாது. மேலும் இல்லறத்தான் ஆசை வைத்தால்தான் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். எனவே துறவிகள் சொல்லும் நிலையாமையை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது.



    மறுமொழி > திண்டுக்கல் தனபாலன்
    // தங்களின் கருத்தை எதிர்ப்பார்க்கிறேன் : அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...! லிங்க் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/09/Desire-Greedy.html
    நன்றி ஐயா... //

    உங்கள் வலைப்பக்கம் விரைவில் வருகிறேன்!

    ReplyDelete
  10. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
    //அருமையான பாடல் மற்றும் சிறந்த விளக்கம்.....
    ஆசை இல்லாத மனிதன் ஏது.... எல்லாவற்றிற்கும் ஆசைப்படு என தற்காலத்தில் சொல்கிறார்கள்... :)//

    தாயுமானவர் ஒரு துறவியாக இருந்து பாடலைப் பாடி இருக்கிறார். எனவே இல்லறத்தாராகிய நாம் அவரைப் போன்று முற்றிலும் ஆசையை விட்டொழிக்க இயலாது. சகோதர வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. தாயுமானவர் பாடலை உரை இல்லாது புரிந்து கொள்வது கடினம். பின்னர் PUC படிப்பு திருச்சி நேஷனல் கல்லூரியில். பின்னர் பிஏ (தமிழ்)படிப்பை திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் முடித்துவிட்டு மீண்டும் நேஷனல் கல்லூரியில் எம் ஏ (தமிழ் இலக்கியம்) சேர்ந்தேன்.அப்போது “சைவசித்தாந்தம் ’ எங்களுக்கு ஒரு பாடமாக இருந்தது.அப்போது . தாயுமானவரின் பாடல்களைப் பற்றி ஓரளவு படித்து தெரிந்து கொண்டேன்.

    மனித வாழ்க்கை விசித்திரமானது. “ஆசையே துன்பத்திற்கு காரணம்” என்றார் புத்தர். ஆனால் உற்று நோக்கினால் இந்த உலகில் நிகழந்த கண்டுபிடிப்புகள் மற்றும் உலகம் இயங்குவது எல்லாம் ஆசையால்தான். ஆனால் மனிதனின் ஆசைக்கு அளவு உண்டா? நமது தாயுமானவர் ” ஆசைக்கோர் அளவில்லை “ என்கிறார் பட்டினத்தாரும் தாயுமானவரும் துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம் காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்... ///



    Chrome உட்பட வேறு browser-ல் பார்க்கவும்... நன்றி ஐயா...இதை யாரும் சரியாக வாசிக்க முடியாது...

    ReplyDelete
  12. அருமையான பாடலும், விளக்கங்களும், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete
  13. மறுமொழி > sury Siva said...
    // ஈ .வே.ரா. கல்லூரியில் எனது நண்பர் என்னுடன் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்த திரு பிச்சை முகமது அவர்கள் தமிழ் பிரிவில் பேராசிரியராக பணி ஆற்றி இருக்கிறார். நீங்கள் படித்த வருடம் எப்பொழுது ? //

    சூரி சுப்பு தாத்தா அவர்களுக்கு வணக்கம். நீங்கள் என்னைவிட மூத்தவர். எனக்கு வய்து இப்போது 58. எனவே உங்களோடு படித்த உங்கள் நண்பர் திரு பிச்சை முகமது அவர்களைப் பற்றி எனக்கு தெரியவில்லை. நான் திருச்சி பெரியார் ஈவெரா கல்லூரியில் பி.ஏ (தமிழ் இலக்கியம்) 1972 -75 ஆம் ஆண்டுகளிலும், திருச்சி நேஷனல் கல்லூரியில் எம்.ஏ (தமிழ் இலக்கியம்) 1975 – 77 ஆம் ஆண்டுகளிலும் படித்து முடித்தேன்.

    // தாயுமானவர் பாடல்களை இப்பொழுதும் ஒவ்வொன்றாக நிதானமாக படித்திட புதுப்புது தெளிவுகள் தோன்றுகின்றன.
    தமிழ் இலக்கியத்தில் சமய பிரிவில் தாயுமானவர் ஒரு மைல் கல் . //

    தாங்கள் கூறுவது சரிதான். வாழ்க்கையில் நாம் நாளும் பெறும் ஒவ்வொரு பாடமும் நமக்கு பாடல்களைப் படிக்கும் போதும் ஒவ்வொரு முறையும் ஒரு அர்த்தத்தைத் தருகின்றன.

    தங்கள் பொன்னான நேரத்திலும் எனது வலைப் பதிவிற்கு வந்து கருத்துரை தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // ஆசைக் கடலில் அகப்பட்டு திணறாமல் இருக்கத்தான்
    இறைவன் திருவடிகள் பற்ற அறிவுறுத்துகிறார்கள் சமயச்சான்றோர்..! //

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி > Sasi Kala said...
    // அற்புதமான பாடல் வரிகள்.. தாயுமானவரின் வரிகளும் தங்கள் விளக்கமும் வெகு சிறப்புங்க. இது போன்ற பகிர்வுகள் தொடர வேண்டுகிறேன். //

    சகோதரி தென்றல் சசிகலா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    இலக்கியம் சம்பந்தமாகவே நிறைய எழுத வேண்டும் என்பதே எனது ஆசை.

    ReplyDelete
  16. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // Chrome உட்பட வேறு browser-ல் பார்க்கவும்... நன்றி ஐயா...இதை யாரும் சரியாக வாசிக்க முடியாது... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் அன்பான வழிகாட்டலுக்கு நன்றி! தாங்கள் சொல்லும் தொழில்நுட்ப விஷயம் எப்படி என்று எனக்கு தெரியவில்லை. உங்களோடு மறுபடியும் தனியே தொடர்பு கொள்கிறேன். தகவலுக்கு நன்றி1

    ReplyDelete
  17. மறுமொழி > கோவை2தில்லி said...
    // அருமையான பாடலும், விளக்கங்களும், பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. //

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  18. மிகவும் அழகாக ஆசையுடன் எழுதியுள்ளீர்கள் ஐயா.

    நானும் மிகுந்த ஆசையுடன் தான் படித்தேன். ;)))))

    >>>>>

    ReplyDelete
  19. //அப்புறம் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை (6 – 11) இந்து கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில்.அங்கு வகுப்புகள் துவங்கும் முன்னர் எல்லோரும் ஓரிடத்தில் கூடி காலை இறைவணக்கமாக சமஸ்கிருத துதியோடு“அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்“ என்ற தாயுமானவர் முதல் பாடலையும் பாடுவோம். //

    நீங்காத நினைவலைகள் நாம் திருச்சி NATIONAL COLLEGE HIGH SCHOOL இல் படித்ததும், இந்தப்பாடலைப் பாடியதும். 1960 ஏப்ரல் முதல் முதல் 1966 மார்ச் வரை நானும் அதே பள்ளியில் படித்தவன் தானே. ;)))))

    >>>>>

    ReplyDelete
  20. சில இடங்களில் உள்ள வரிகள் சரியான முறையில் படிக்கும் படியாக இல்லை ஐயா.

    இதோ:

    //பட்டினத்தாரும் தாயுமானவரும் துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம் காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும். //

    //பட்டினத்தாரும் தாயுமானவரும் துறவிகள். அவர்கள் பாடல்களில் வாழ்க்கை நிலையாமை போன்ற கருத்துக்களை மட்டுமே அதிகம் காணலாம் நாமோ குடும்பஸ்தர்கள். நமக்குத் தேவையான கருத்துக்களை மட்டும் இவர்கள் பாடல்களில் எடுத்துக் கொள்ள வேண்டும்.//

    Copy & Paste போட்டுள்ளதில் அவை சரியாக இங்கு வந்துள்ளன. ஆனால் உங்களின் பதிவினில் அவைகள் ஏதேதோ எழுத்துக்களில் தோன்றுகின்றன.

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே

    >>>>>

    ReplyDelete
  21. உங்களின் உரையை மிகவும் ரஸித்தேன்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  22. மண்ணாசை, பொன்னாசை, இளமை மீண்டும் வருமா? என்ற தலைப்புகளும், கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அருமையான பாடலும் மிகச்சிறப்பாக உள்ளன. ;)

    ReplyDelete
  23. ஆசைக்கு எதிர்பதம் திருப்தி என்று எடுத்துக் கொள்ளலாமா.?திருப்தி முன்னேற்றத்துக்குத் தடையாகலாம் ஆசை தேவை . பேராசை பெருநஷ்டம்.தாயுமானவர் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 )
    // மிகவும் அழகாக ஆசையுடன் எழுதியுள்ளீர்கள் ஐயா.
    நானும் மிகுந்த ஆசையுடன் தான் படித்தேன். //

    அன்புள்ள திரு VGK அவர்களின் ஆசையான வாசிப்புக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 2 )
    //அப்புறம் உயர்நிலைப் பள்ளி வாழ்க்கை (6 – 11) இந்து கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட திருச்சி நேஷனல் உயர்நிலைப் பள்ளியில்.அங்கு வகுப்புகள் துவங்கும் முன்னர் எல்லோரும் ஓரிடத்தில் கூடி காலை இறைவணக்கமாக சமஸ்கிருத துதியோடு“அங்கிங் கெனாதபடி யெங்கும் ப்ரகாசமாய்“ என்ற தாயுமானவர் முதல் பாடலையும் பாடுவோம். //

    // நீங்காத நினைவலைகள் நாம் திருச்சி NATIONAL COLLEGE HIGH SCHOOL இல் படித்ததும், இந்தப்பாடலைப் பாடியதும். 1960 ஏப்ரல் முதல் முதல் 1966 மார்ச் வரை நானும் அதே பள்ளியில் படித்தவன் தானே. //
    திருச்சி NATIONAL COLLEGE HIGH SCHOOL இல் படித்ததும், இந்தப்பாடலைப் பாடியதும் என்றென்றும் மறக்க இயலாது.


    ReplyDelete
  26. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )
    // சில இடங்களில் உள்ள வரிகள் சரியான முறையில் படிக்கும் படியாக இல்லை ஐயா.//

    // Copy & Paste போட்டுள்ளதில் அவை சரியாக இங்கு வந்துள்ளன. ஆனால் உங்களின் பதிவினில் அவைகள் ஏதேதோ எழுத்துக்களில் தோன்றுகின்றன . இது தங்கள் தகவலுக்காக மட்டுமே //

    இப்போது அந்தக் குறைகளை சரி செய்து விட்டேன்.

    ReplyDelete
  27. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 4 & 5 )

    // உங்களின் உரையை மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள். வாழ்த்துகள், நன்றிகள் ஐயா. //
    // மண்ணாசை, பொன்னாசை, இளமை மீண்டும் வருமா? என்ற தலைப்புகளும், கவிஞர் கண்ணதாசன் அவர்களின் அருமையான பாடலும் மிகச்சிறப்பாக உள்ளன. //

    தங்கள் பாராட்டிற்கு நன்றி! மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  28. மறுமொழி > G.M Balasubramaniam said...
    // ஆசைக்கு எதிர்பதம் திருப்தி என்று எடுத்துக் கொள்ளலாமா.?திருப்தி முன்னேற்றத்துக்குத் தடையாகலாம் ஆசை தேவை . பேராசை பெருநஷ்டம்.தாயுமானவர் பாடல்கள் எனக்கும் பிடிக்கும். //
    GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி

    ReplyDelete
  29. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 3 )

    // சில இடங்களில் உள்ள வரிகள் சரியான முறையில் படிக்கும் படியாக இல்லை ஐயா.//

    // Copy & Paste போட்டுள்ளதில் அவை சரியாக இங்கு வந்துள்ளன. ஆனால் உங்களின் பதிவினில் அவைகள் ஏதேதோ எழுத்துக்களில் தோன்றுகின்றன . இது தங்கள் தகவலுக்காக மட்டுமே //

    //இப்போது அந்தக் குறைகளை சரி செய்து விட்டேன். //

    மிக்க நன்றி ஐயா. இப்போது அவை சரியாகவே தெரிகின்றன. தாமதமான இந்த என் பதிலுக்கு என்னை மன்னிக்கவும். இன்று வேலை அதிகம். ஓர் சிறிய பதிவர் மாநாடு வேறு எங்கள் வீட்டில் நடைபெற்றது. எதிர்பாராத சந்திப்பாக அமைந்து போனதால் தங்களை என்னால் அழைக்க முடியவில்லை. அதுபற்றிய செய்திகள் என் அடுத்த பதிவினில் வெளியிட உள்ளேன். நாம் பேசிக்கொண்டபடி வரும் ஞாயிறு மாலை மிகச்சரியாக 5 மணிக்கு ஹோட்டல் ஃபெமினாவில் சந்திப்போம்.

    அன்புடன் VGK

    ReplyDelete
  30. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    // சிறப்பான பதிவு! //
    எழுத்தாளர் கே பி ஜனா அவர்களது பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    // மிக்க நன்றி ஐயா. இப்போது அவை சரியாகவே தெரிகின்றன. தாமதமான இந்த என் பதிலுக்கு என்னை மன்னிக்கவும். //

    அன்பின் VGK அவர்களுக்கு நன்றி! தாமதம் ஒன்றும் இல்லை. நானும் வீட்டில் இல்லை. வெளியே சென்று இருந்தேன்.
    // இன்று வேலை அதிகம். ஓர் சிறிய பதிவர் மாநாடு வேறு எங்கள் வீட்டில் நடைபெற்றது. எதிர்பாராத சந்திப்பாக அமைந்து போனதால் தங்களை என்னால் அழைக்க முடியவில்லை. அதுபற்றிய செய்திகள் என் அடுத்த பதிவினில் வெளியிட உள்ளேன். //
    இதுபற்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!


    ReplyDelete