Tuesday 11 December 2012

எனது விகடன் நினைவுகள்!



அப்போது எனக்கு பள்ளி பருவம். வெளி உலகை கொஞ்சம் கொஞ்சமாக எட்டிப் பார்க்கும் நேரம். அப்போது ஒரு திருமணத்தை முன்னிட்டு  திருச்சியிலிருந்து பூதலூருக்கு ரெயிலில் சென்றோம். திருச்சி ரெயில்வே ஜங்ஷன். டிக்கெட் கொடுக்கும் இடத்தில் ஒரு விளம்பரப் பலகை. முழுக்க கருநீல வண்ணத்தில் வெள்ளை எழுத்துக்களில் “இந்த வார ஆனந்த விகடன் வாசித்து விட்டீர்களா?என்ற வாசகத்தோடு காணப்பட்டது. கூடவே சோடா பாட்டில் கண்ணாடி போட்டுக் கொண்டு நீண்ட மூக்குடன் விகடன் தாத்தா. ரெயில் ஏறப் போகும்போதும் பிளாட்பாரத்திலும் அதே விளம்பரம் தலைக்கு மேலே தொங்கிக் கொண்டு இருந்தது. நாங்கள் பூதலூர்  சென்று ரெயிலை விட்டு இறங்கியதும் ரெயில்வே ஸ்டேஷனிலும் இந்த விகடன் விளம்பர பலகையைப் பார்த்தேன். இந்த வாரம் அந்த ஆனந்தவிகடனில் அப்படி என்னதான் எழுதி இருக்கிறார்கள் என்று எப்போது பார்த்தாலும்  நினைக்கும்படி விளம்பரம் செய்து இருந்தார்கள்.  இதுதான் எனது முதல் ஆனந்த விகடன் நினைவு. அதன் பிறகு பல ரெயில்வே நிலையங்களிலும் இந்த விளம்பரப் பலகைய பார்த்து இருக்கிறேன். 

நான் பள்ளி படித்த நாட்களில் வார இதழ்களை மாணவர்களுக்கு
தர மாட்டார்கள். கல்லூரி நாட்களிலும் நூலகங்களில் அந்த வார விகடனை ஊழியர்களும் ஆசிரியர்களும் எடுத்துச் சென்று விடுவார்கள். இருக்கும்  விகடனைப் படிப்பேன். அப்போது நான் பெரும்பாலும் விகடனில் அதிகம் படிப்பது நகைச்சுவை துணுக்குகள், அரசியல் பேட்டிகள், கட்டுரைகள்தான். பிற்பாடு நான் வேலைக்கு சென்றதும் ஆபிஸ் ஊழியர்கள் தங்களுக்குள் நடத்தும் புத்தக கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. புதிதாக வரும் அந்த வார ஆனந்த விகடனை வீட்டுக்கு கொண்டு செல்வதில் உறுப்பினர்களிடையே  அதிக போட்டி இருக்கும். எனவே வாரம் தோறும்  இரண்டு விகடன்களை வாங்கும் வழக்கத்தை கொண்டு வந்தேன்.

விகடன் குழுமத்திலிருந்து ஜூனியர் விகடன் வந்த நேரம். புதுமையாகவும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை அலசியும் கட்டுரைகளை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் நியூஸ் பேப்பர் வடிவத்தில் வந்து பின்னர் இப்போதைய வடிவம் வந்தது. கடைகளில் வந்தவுடனேயே தீர்ந்துவிடும். எனவே ஜூனியர் விகடன் வரும் நாளன்று முதல் ஆளாக போய் வாங்கி வந்து படித்து விடுவேன். திருச்சிக்கு மாறுதலாகி வந்தேன். இங்கும் நண்பர்கள் புத்தக கிளப் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள்.. இங்கும் வாரம் தோறும் இரண்டு ஆனந்த விகடனோடு ஜூனியர் விகடனையும் இரண்டாக வாங்கச் செய்தேன். 

நான் கையில் யாஷிகா FX-3 கேமராவை வைத்துக் கொண்டு இருந்த நேரம். ஜூனியர் விகடனில் விஷுவல் டேஸ்ட் என்று ஒரு பகுதியைத் தொடங்கினார்கள். வாசகர்கள் அனுப்பும் புகைப் படங்களை ஜூனியர் விகடனின் பின்பக்க அட்டையில் வெளியிட்டார்கள். நான் எனது கேமராவில் எடுத்து அனுப்பிய வண்ண புகைப் படங்கள் இரண்டு அப்போதைய ஜூனியர் விகடனில் வெளிவந்தன. அதற்கு சன்மானமும் தந்தார்கள்.



இப்போது விகடன் குழுமத்திலிருந்து பல நூல்கள் வெளியிடப் படுகின்றன. வாசிப்பு பழக்கம் உள்ள நான் அவர்களது நூல்கள் பலவற்றை வாங்கியுள்ளேன். விலை குறைவாகவும் நேர்த்தியான முறையிலும் அவை வெளியிடப்பட்டு வருகின்றன.

வாரா வாரம் ஆனந்த விகடனில் இணைப்பு இதழாக "என் விகடன்"
என்ற இணைப்பு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித் தனியே கொடுத்து வந்தார்கள். இப்போது தனி இதழ் கிடையாது. இணைய இதழாக 
( http://en.vikatan.com ) மட்டுமே வந்தது. இதனையும் படித்து வந்தேன். இதிலும் சில மாற்றங்கள் செய்ய இருக்கிறார்கள். இனி “என் விகடன்” என்ற இணைய இதழ் “உங்க விகடன்” என்ற பெயரில் வரும் என்று அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். 

இப்போது ஆனந்த விகடனை எங்களோடு, எங்கள் வீட்டு பிள்ளைகளும் படித்து வருகிறார்கள்.



( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )
 















48 comments:

  1. உங்களின் விகடன் நினைவுகள் என்னுடைய விகடன் நினைவுகளை ஞாபகப்படுத்தியது. என் ஏழாம் வகுப்பில் சித்தி வீட்டில் வாங்கிய விகடனை எப்போது தருவார்கள் எனக் காத்திருந்து படித்தது நிழலாடுகிறது. அனுப்பினால் விகடனுக்குத்தான் என் படைப்புகளை அனுப்புவேன் என பிடிவாதமாக கொஞ்ச வருடங்கள் இருந்தது, இன்னமும் ஜீ-வீ மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தின் இறுதிகட்ட அழைப்புக் கடிதத்தை பத்திரமாக வைத்திருப்பது, ஒரு நேரத்தில் நம் படைப்பு ஆ.வியில் தேர்ந்தெடுக்கவில்லை நமக்கு எழுத தகுதியில்லை என முடிவெடுத்தது ,இப்போதும் 15 வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்தும் இன்னம் ஆனந்தவிகடன் ஆசை போகவில்லை...பார்ப்போம் ...நன்றிகள் ஞாபகத்திற்கு, வாழ்த்துக்கள் உங்கள் படைப்பு விகடனில் வெளியானமைக்கு

    ReplyDelete
  2. இரண்டு படங்களுமே கவிதைக்களம்.

    ReplyDelete
  3. மிகவும் அருமையான பதிவு. சிறு வயது முதலே ஆனந்த விகடன் என்றாலே அதை வாங்கிப் பார்ப்பதிலும் படிப்பதிலும் ஓர் தனி ஆனந்தம் தான்.

    நீங்கள் சொல்வது போல அப்போதெல்லாம் நம்மால் காசு கொடுத்து வாங்கிப்படிப்பது என்பது கஷ்டமே. பழைய புத்தகமாக இருப்பினும், கையில் கிடைக்கும் விகடனை ஆவலுடன் படிப்பது உண்டு.

    >>>>>>

    ReplyDelete
  4. தாங்கள் எடுத்து அனுப்பிய புகைப்படங்கள் இரண்டு பின்புற அட்டையில் வெளியாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    இரண்டு படமுமே ஜோராக எடுத்துள்ளீர்கள், ஐயா.

    >>>>>>>

    ReplyDelete
  5. //இனி “என் விகடன்” என்ற இணைய இதழ் “உங்க விகடன்” என்ற பெயரில் வரும் என்று அறிவிப்பு செய்து இருக்கிறார்கள். //

    புதிய தகவலுக்கு நன்றிகள்.

    என் கையில் விகடன் மட்டுமல்ல, வேறு எந்தப்புத்தகம் கிடைத்தாலும் அதில் உள்ள ஜோக்குகளையும், ஜோக்குகளுக்கு வரையப்பட்டுள்ள படங்களையும் முதலில் மிகவும் ரஸித்துப்பார்த்து மகிழ்வேன்.

    அதுவும் ஆனந்த விகடனில் கோபுலு போன்றவர்கள் வரையும் படங்கள் மிகவும் அருமையாக நம்மைச் சிரிக்க வைக்கும்.

    ஒரு பக்கம் முழுவதுமே தொடர்கதைபோல வெறும் படங்கள் மட்டுமே வரைந்திருப்பார்கள். அதைப்பார்த்து புரிந்து கொண்டு சிரிக்க வேண்டும். தனியே நகைச்சுவைத்துணுக்கு எதுவும் எழுதப்பட்டு இருக்காது. அவையெல்லாம் பேசும் சித்திரங்கள்.

    அது ஒரு பொற்காலம். இன்று வருபவை பெரும்பாலும் அறுவை ஜோக்குகளாகவே உள்ளன.

    >>>>>>>

    ReplyDelete
  6. அன்றைய ஆனந்த விகடனையும், அதன் பிறகு வந்துகொண்டிருக்கும் விகடனின் மேலும் பல உப வெளியீடுகளையும், அன்றே அவர்கள் மேற்கொண்ட விளம்பர யுக்திகளையும் வெகு அழகாக இந்தப்பதிவினில் எடுத்துச்சொல்லியுள்ளீர்கள், ஐயா.

    மனமார்ந்த பாராட்டுக்கள். அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    அன்புடன்
    VGK

    ReplyDelete
  7. ஆனந்தம் மலரும் நினைவுகள் !

    ReplyDelete
  8. கவித்துவமான புகைப்படங்கள்
    ரசித்து மகிழ்ந்தேன்
    என்னைப் பொருத்தவரை
    தீவீர ஆனந்த விகடன் ரசிகன் என்கிற தொடர்பு மட்டும்
    எனது 15 ஆம் வயதில் இருந்து இன்றுவரை
    குறையாது தொடர்கிறது
    என் விகடன் குறித்த தகவல் தங்கள் மூலம்தான் அறிந்தேன்
    பயனுள்ள சுவாரஸ்யமான பதிவுக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  9. நினைவுகளை அழகாக செதுக்கியிருக்கிறீர்கள் ஐயா...
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. ஆனந்தமான மலரும் நினைவுகள்.

    ReplyDelete
  11. சூப்பர் ஐயா. ஆனந்தவிகடன் புத்தகம் படிக்க நாங்களும் தவம் கிடந்த காலமெல்லாம் நினைவுக்கு வந்து சென்றது. அருமையான பகிர்வு.

    ReplyDelete
  12. மறுமொழி> ezhil said...
    //உங்களின் விகடன் நினைவுகள் என்னுடைய விகடன் நினைவுகளை ஞாபகப்படுத்தியது. …….. …… வாழ்த்துக்கள் உங்கள் படைப்பு விகடனில் வெளியானமைக்கு //
    விகடன் என்றாலே புதுமைதான். என்னுடைய கட்டுரை உங்களது விகடன் நினைவுகளை ஞாபகப் படுத்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி! சகோதரியின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி> அப்பாதுரை said...
    நசிகேத வெண்பா தந்த அப்பாதுரை அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2, 3 )
    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
    // நீங்கள் சொல்வது போல அப்போதெல்லாம் நம்மால் காசு கொடுத்து வாங்கிப்படிப்பது என்பது கஷ்டமே. பழைய புத்தகமாக இருப்பினும், கையில் கிடைக்கும் விகடனை ஆவலுடன் படிப்பது உண்டு. //
    அன்றைய சூழ்நிலை எனக்கும் அப்படித்தான் இருந்தது.
    // இரண்டு படமுமே ஜோராக எடுத்துள்ளீர்கள், ஐயா.//
    நன்றி! இப்போதும் போட்டோகிராபி என்பது எனக்கு பிடித்தமான ஒன்றுதான்.
    //ஒரு பக்கம் முழுவதுமே தொடர்கதைபோல வெறும் படங்கள் மட்டுமே வரைந்திருப்பார்கள். அதைப்பார்த்து புரிந்து கொண்டு சிரிக்க வேண்டும். தனியே நகைச்சுவைத்துணுக்கு எதுவும் எழுதப்பட்டு இருக்காது. அவையெல்லாம் பேசும் சித்திரங்கள்.//
    அன்றைய நகைச்சுவைகளை இன்று நினைத்தாலும் சிரிப்புத்தான் வரும். எந்த காலத்திற்கும் பொருந்தி வரும்.

    //அது ஒரு பொற்காலம். இன்று வருபவை பெரும்பாலும் அறுவை ஜோக்குகளாகவே உள்ளன.//
    நான் சொல்ல நினைத்ததை சொல்லி விட்டீர்கள்.
    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  15. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said... (4 )
    //அன்றைய ஆனந்த விகடனையும், அதன் பிறகு வந்து கொண்டிருக்கும் விகடனின் மேலும் பல உப வெளியீடுகளையும், அன்றே அவர்கள் மேற்கொண்ட விளம்பர யுக்திகளையும் வெகு அழகாக இந்தப்பதிவினில் எடுத்துச்சொல்லியுள்ளீர்கள், ஐயா.//
    பத்திரிகை உலகில் விகடன் என்றைக்குமே ஒரு ஜாம்பவான்தான்.

    ReplyDelete
  16. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said..
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!.

    ReplyDelete
  17. மறுமொழி> Ramani said...(1, 2)
    // என் விகடன் குறித்த தகவல் தங்கள் மூலம்தான் அறிந்தேன்
    பயனுள்ள சுவாரஸ்யமான பதிவுக்கு மனமார்ந்த நன்றி //
    கவிஞர் ரமணி அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி! புதிதாக வரவிருக்கும் ”உங்க விகடன்“ இணைய இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பி வையுங்கள்.


    ReplyDelete
  18. மறுமொழி> ஆத்மா said...
    ஆத்மா அவர்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி> Sasi Kala said...
    சகோதரி கவிஞர் ‘தென்றல்’ சசிகலா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி> semmalai akash said...
    சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  21. ஆனந்த விகடனைப் பற்றி எழுதி எனது பள்ளிப்பருவத்தை நினைவூட்டியுள்ளீர்கள். அப்போதெல்லாம் ஆனந்த விகடனின் மேல் அட்டையில் ஒரு படம் நகைச்சுவை துணுக்குடன் வரும். முதலில் விகடனைக் கையில் எடுக்கும்போது இந்த வாரம் என்ன ‘ஜோக்’ என்று படித்துவிட்டுதான் உள்ளே செல்வது வழக்கம். ம்.ம் அதெல்லாம் பழங்கதை! இப்போதைய விகடன் தனது வழக்கமான பாணியை விட்டு சென்று எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது எனது கருத்து. தாங்கள் வங்கியில் இருக்கும்போது எடுத்த வித்தியாசமான புகைப்படங்கள் விகடனில் வெளியிடப்பட்டன என அறிந்து மகிழ்ச்சி.

    ReplyDelete
  22. சுவாரசியமாக இருக்கிறது படிக்க.

    ReplyDelete
  23. மறுமொழி> வே.நடனசபாபதி said..

    அந்தக்கால ஆனந்தவிகடனின் ”இந்தவார ஜோக்” பற்றி நன்றாகச் சொன்னீர்கள் தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  24. மறுமொழி> கே. பி. ஜனா... said...
    //சுவாரசியமாக இருக்கிறது படிக்க.//

    ஆனந்தவிகடனே ஒரு சுவாரசியமான பத்திரிக்கைதானே!

    ReplyDelete
  25. உங்களுக்கும் ஆனந்த விகடனுக்கும் உண்டான தொடர்பு பற்றிய பழைய நினைவுகள் அருமை.

    சாவியின் விசிறி வாழை, மணியனின் இதயம் பேசுகிறது என்ற பயணக் கட்டுரை, பரணீதரனின் யாத்திரை அனுபவங்கள், சிவசங்கரியின் கதைகள் எல்லாம் படித்தது நினைவுக்குக் வருகிறது.

    சமீபகாலமாக வெறும் சினிமா செய்திகள் தான் முக்கால்வாசிப் பக்கங்களை நிரப்புகின்றன என்ற ஆதங்கம் எனக்கு.

    ReplyDelete
  26. சுவாரசியமான பகிர்வு. இனிய நினைவுகள்.

    ReplyDelete
  27. மறுமொழி> Ranjani Narayanan said...

    //சமீபகாலமாக வெறும் சினிமா செய்திகள் தான் முக்கால்வாசிப் பக்கங்களை நிரப்புகின்றன என்ற ஆதங்கம் எனக்கு. //

    உங்களுக்கு மட்டுமல்ல ஆனந்த விகடனை, ஆரம்பகாலத்தில் இருந்து படித்து வரும் வாசகர்களுக்கு (குறிப்பாக – பெரியவர்களுக்கு) இந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது.
    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  28. மறுமொழி> வெங்கட் நாகராஜ் said...

    தங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > பழனி.கந்தசாமி said...
    அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  30. ஐயா! தங்களின் படைப்பொன்றை வலைச்சரத்தில் இன்று பகிர்ந்துள்ளேன்! வாருங்கள் http://blogintamil.blogspot.in/2012/12/blog-post_21.html
    நன்றி!
    -காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
  31. மலரும் நினைவுகள் சிறப்பு.

    ReplyDelete
  32. ஐயா, நாளைய வலைச்சரத்தில் தங்கள் பதிவுகளை பகிந்துள்ளேன்! வருகை புரிந்து கருத்திடுங்கள்!

    ReplyDelete
  33. மறுமொழி> சென்னை பித்தன் said...
    // மலரும் நினைவுகள் சிறப்பு.//

    தங்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி1

    ReplyDelete
  34. மறுமொழி> உஷா அன்பரசு said...
    இந்த வாரம் வலைச்சரத்தில் எனது பதி்வை அறிமுகம் செய்த சகோதரி உஷா அன்பரசு, வேலூர்
    http://tamilmayil.blogspot.com அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  35. உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013
    நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete

  36. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


    அன்புடன்
    மதுரைத்தமிழன்

    ReplyDelete
  37. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    சகோதரிக்கு நன்றி! மீண்டும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  38. மறுமொழி > Avargal Unmaigal said...
    சகோதரர் மதுரைத் தமிழனுக்கு நன்றி! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  39. ஐயா,
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்

    ReplyDelete
  40. மறுமொழி > ezhil said...
    சகோதரியின் வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்களுக்கு எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  41. விகடனுடனான உங்கள் அனுபவங்கள் படிக்க சுவையாயிருந்தது.
    எனது பதிவிலும் விகடன் பற்றிய எனது அனுபவங்களை எழுதியுள்ளேன்.
    படித்துப் பாருங்கள்...

    ReplyDelete
  42. //ஜூனியர் விகடன் வந்த நேரம். புதுமையாகவும் மக்களின் அன்றாட பிரச்சினைகளை அலசியும் கட்டுரைகளை வெளியிட்டார்கள். ஆரம்பத்தில் நியூஸ் பேப்பர் வடிவத்தில் வந்து பின்னர் இப்போதைய வடிவம் வந்தது. //

    அல்ல, ஜூ.வி. இப்போதுள்ள வடிவிலேயேதான் வந்தது.
    ஒவ்வொரு தாளும் பசையிட்டு ஒட்டப்பட்டிருக்கும்.

    ஜூனியர் போஸ்ட் என்ற வார இதழ் ஜு.வி.யின் இரு
    மடங்கு அளவில் வந்தது. பின் நின்று விட்டது.

    விகடன் பேப்பர் தினயிதழாக (மாலை நாளிதழ்)
    வந்தது. பின் அதுவும் நின்று விட்டது.

    ReplyDelete
  43. மறுமொழி > NIZAMUDEEN said... (1, 2 )
    விகடன் பற்றிய உங்கள் அனுபவங்களைப் படித்தேன். நன்றாக எழுதி இருந்தீர்கள்.
    ஜூனியர் விகடன், ஜூனியர் போஸ்ட், விகடன் பேப்பர் பற்றி நீங்கள் சொன்னதும் அவற்றின் முதல் இதழ் வடிவங்கள் நினைவுக்கு வந்தன. நினைவூட்டலுக்கு நன்றி!
    வலைச்சரம் பணி முடிந்ததும் உங்கள் பதிவுகள் பக்கம் வரவேண்டும்.

    ReplyDelete
  44. அவசியம் வாங்க சார்.

    எதிர்பார்க்கிறேன்.
    .

    ReplyDelete
  45. மறுமொழி > NIZAMUDEEN said...
    தங்கள் வரவேற்பிற்கு நன்றி!

    ReplyDelete