Wednesday 28 September 2011

நீங்கள் என்ன ஜாதி?


நீங்கள் என்ன ஜாதி?..........
தெரிந்தோ தெரியாமலோ தமிழ் நாட்டில் எந்த விஷயத்திற்கும் ஜாதிதான் அளவு கோலாக உள்ளது.ஒரு இடத்திற்கு ஒரு அதிகாரியை நியமனம் செய்தால் போதும், பலர் விசாரித்து வைத்துகொள்வது அந்த மனிதர் நம்ம ஆள்தானேஎன்பதுதான்.வெளியே மட்டும் தமிழ் தமிழன் என்று பீற்றிக் கொள்வார்கள்.அதே போல உள்ளூர் பள்ளி, வங்கி, தபால் அலுவலகம், போலிஸ் ஸ்டேஷன் என்று எதனையும் விட்டு வைக்க மாட்டார்கள்.இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் லஞசம் வாங்கும் ஆசாமிகள் ஜாதி பார்த்து தள்ளுபடி ஏதும் செய்யப் போவதில்லை.
நீங்கள் ஒரு இடத்திற்கு குடி போனாலோ அல்லது புதிதாக வேலைக்கு போனாலோ அங்கிருப்பவர்களுக்கு உங்கள் ஜாதியை
தெரிந்து கொள்ளாவிடில் தலையே வெடித்து விடும்.சிலர் நேரிடையாகவே நீங்கள் என்ன ஜாதி என்று கேட்டு விடுவார்கள்.சிலர் சுற்றி வளைத்து உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டுவிட்டு, கடைசியாக அந்த ஊரில் இவருக்கு தெரிந்த சிலரைப் பற்றி கேள்விகேட்டு நம்மை கிண்டுவார்கள்.
ஒவ்வொரு ஜாதியிலும அழகும் படிப்பும் குணமும் இருந்தும் பணவசதி இல்லாத காரணத்தால் மணமாகாத பெண்கள் உண்டு. அதே போல இளம் விதவைகளும் உண்டு.சரி நம்ம ஜாதிப் பெண்ணாயிற்றே என்று இவர்களுக்கு இந்த ஜாதி அபிமானிகள் வாழ்க்கை கொடுக்க வருவதில்லை.கவலைப் படுவதும் கிடையாது.அதேபோல எந்த ஜாதி தலைவரும் தன்னுடைய சொந்த ஜாதியிலேயே தன் வீட்டு பிள்ளைகள் ஏழைப் பெண்ணை மணந்து கொள்வார்கள் என்றோ அல்லது விதவை மறுமணம் செய்வார்கள் என்றோ சொல்லமாட்டார்கள்.அப்போது ஜாதிக்குள் ஜாதி.பணக்கார ஜாதி.

ஆனாலும் எல்லோரும் சொல்லிக்கொள்வது தமிழ் – தமிழன்.

(குறிப்பு:வேறு ஒரு வலைப் பதிவில் புனை பெயரில் என்னால் எழுதப்பட்டது.)




6 comments:

  1. தங்கள் மீது அமைதி நிலவட்டுமாக சகோ.இளங்கோ.

    உங்கள் ஆதங்கத்தை சிந்திக்கத்தூண்டும் விதத்தில் வெளிப்படுத்தி உள்ளீர்கள்.

    ஏனோ... திருமணம், கல்வி, வேலைவாய்ப்பு, உழைப்பு, விருந்து, வீடு கொடுத்தல், ஓட்டு போடுதல், யாரையேனும் நற்பணிக்கு தேர்ந்தெடுத்தல், போன்ற நன்மையான விஷயத்தில் மட்டுமே சாதிப்பிரிவினை பார்க்கின்றனர்.

    கூட்டாக... பலர் சேர்ந்து சிகரெட் பிடிப்பது, தண்ணி அடிப்பது, சினிமா பார்ப்பது, விபச்சாம் புரிவது, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், ஊழல் இவற்றில் ஈடுபடுவது, ஓட்டு போட பணம் தருவது, பிறரை கவிழ்ப்பது போன்ற தீய விஷயங்கள் எதிலும் சாதி பார்ப்பது கிடையவே கிடையாது.

    எப்போது தீயவற்றுடன் சாதி பிண்ணிபிணைந்து கிடக்கிறதோ... சாதி தீங்கானதே. அதை பிடித்துக்கொண்டு தொங்குபவர்களும் தீயவர்களே.

    நல்ல தொரு பதிவுக்கு மிக்க நன்றி சகோ.இளங்கோ.

    ReplyDelete
  2. வணக்கம்!எனது வலைப் பதிவிற்கு வந்து கருத்துரை சொன்ன சகோதரர் முஹம்மத் ஆஷிக் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  3. REPLY TO … … .. Seeni said...

    கருத்துரை சொன்ன சகோதரர் கவிஞர் சீனி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete