Sunday 7 January 2018

ஜீ.எம்.பி எழுதிய ‘நினைவில் நீ‘



பெங்களூரில் வசிக்கும் மூத்த வலைப்பதிவர் G.M.B எனப்படும் திரு G.M. பாலசுப்ரமண்யம் அவர்கள் சிறந்த வலைப்பதிவர். தனது அனுபவங்களை  ‘gmb writes’ என்ற தனது வலைத்தளத்தில்  (http://gmbat1649.blogspot.com ) வாழ்வியல் சிந்தனைகளாக எழுதுபவர். தனது தன்விவரத்தில் (Profile} இவ்வாறு “ 77 years young and vibrant,particular about values in life, love all, always try to do better the next time, am an open book.” – என்று தன்னம்பிக்கையோடு குறிப்பிடுகிறார். 

நினைவில் நீ – என்ற நாவல்

அண்மையில் மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்கள் எழுதிய ‘நினைவில் நீ‘ என்னும் நாவலைப் படித்து முடித்தேன். அந்த நாவல் மீதான எனது பார்வையே இந்த கட்டுரை. 

இந்த நாவலைப் படிக்கும்போது, அவர் எழுதிய ‘வாழ்வின் விளிம்பில்’ என்ற நூலில் உள்ள ‘விளிம்புகளில் தொடரும் கதை’ யில் வரும் ரங்கசாமி என்ற பாத்திரப் படைப்பும் நினைவில் வந்தது. அந்தக் கதையின் தொடர்ச்சி தானோ, இந்த நாவல்?

நாவலின் கதை

இந்த நாவலின் கதை என்று எடுத்துக் கொண்டால், பாபு என்ற லட்சியவாதியின் சோகமான வரலாறு என்றே சொல்லலாம். பாபுவின் தந்தை ரங்கசாமிக்கு மூன்று ஆண் மற்றும் ஒரு பெண். தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு பிராமணரான ரங்கசாமி வேறொரு ஜாதிப் பெண்ணை மணந்து கொள்கிறார். இது அவரது மாமியாருக்கு  பிடிக்கவில்லை. பேரப் பிள்ளைகளையும் சேர விடவில்லை. இதில் கடைக்குட்டி பாபு மட்டும் அப்பா கட்சி.. இரண்டாம் தாரமும் அவளது நான்கு சிறு வயது பிள்ளைகளும் தனிக் குடித்தனமாக இருக்கிறார்கள்.

 மரணத் தறுவாயில் இருந்த ரங்கசாமி தனது மூன்றாவது மகன்  பாபுவிடம் சித்தியின் குடும்பத்தை தனக்குப் பின், அவன்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி வாங்கிக் கொள்கிறார். அப்பாவின் மறைவுக்குப் பிறகு அவனும் அவ்வாறே செய்கிறான். அதேசமயம் பாபு தனது அம்மா வயிற்றில் தன்னோடு பிறந்தவர்களையும், சித்தி குடும்பத்தையும் ஒன்றாக சமாதானமாக வாழ முயற்சி எடுக்கிறான். இந்த கடமைகளுக்கு இடையே, அவனுக்குள்ளும் ஒரு டீச்சர் பெண்ணோடு காதல். குடும்ப பாரத்தை சுமப்பதில், தனது முயற்சியில், கொண்ட காதலில்,  பாபு வெற்றி அடைந்தானா என்பது தான் நாவலின் மையம் 

கதா பாத்திரங்கள்

பிராமணரான ரங்கசாமிக்கு  மொத்தம் எட்டு பிள்ளைகள் என்றதுமே இது ஒரு அந்தகாலத்து குடும்பக்கதை என்று புரிந்து விடுகிறது
.
தனது கணவன் ரங்கசாமியின் மரணத்திற்குப் பிறகு நான்கு குழந்தைகளை வைத்துக் கொண்டு அல்லாடும் சித்தி கல்யாணி. இந்த சித்தியிடமிருந்து தனது பேரன் பாபுவை பிரிக்க நினைக்கும் பாட்டி (ரங்கசாமியின் மூத்த மனைவியின் அம்மா; மாமியார்); இதற்கு என்னென்னவெல்லாம் செய்கிறாள் (ஒரு கட்டத்தில் பாபுவின் அக்காளிடம் பாபு – சித்தி உறவையும் கொச்சைப் படுத்துவாள்) என்பதை அறியும்போது இப்படியும் ஒரு பெண்ணா? என்று எண்ணத் தோன்றுகிறது. 

அவன் அண்ணன் கண்ணனுக்கு தான் பிறந்த பிராமண ஜாதிதான் உயர்ந்தது என்ற எண்ணம். இன்னும் பாபுவுக்காக  ஏங்கும், பாபுவுக்காக, சமூக சேவையின் பொருட்டு, சம்பளம் வாங்காமல் பாடம் சொல்லித் தரும், மராத்தியப் பெண் சியாமளா டீச்சர். –  என்று பல கதா பாத்திரங்கள். நாவலின் பல அத்தியாயங்களைப் படித்த பிறகுதான் யார் யாருக்கு உறவு, கதை எங்கே நகர்கிறது என்பதே தெரிய வருகிறது. எத்தனை பேர் இருந்தாலும், நாவலின் நாயகன் பாபுவைச் சுற்றியே கதை என்பதால் குழப்பம் இல்லை.  
  
லட்சியக் கனவுகள்

முன்பெல்லாம் எழுத்தாளர்கள் சமுதாயத்திற்குப் பயன் தரும் கருத்துகளை, ஒரு லட்சியத்தோடு எழுதினார்கள். அவர்களது கட்டுரைகளிலும், கதைகளிலும், நாவல்களிலும் இது எதிரொலித்தது. உதாரணத்திற்கு மணிக்கொடி எழுத்தாளர்கள் என்ற வரிசையைச் சொல்லலாம். இதே போன்று இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எம்.பி அவர்களும் சமுதாயத்திற்கு தேவையான கருத்துகளை இந்நாவலின் இடையிடையே சொல்லி இருக்கிறார். 

ஒரு கட்டத்தில்  அண்ணன் தம்பி வாக்கு வாதத்தில் யார் உண்மையான பிராமணர், எது சுயநலம் இல்லாத சமூக தொண்டு போன்ற கருத்துகள் முன் வைக்கப் படுகின்றன.(இந்நூல் அத்தியாயம்.10)

அண்ணனின் கேள்வி
 பாபு நீ மேடை ஏறி பிரசங்கம் பண்ணுவதில் கை தேர்ந்தவன் என்று எனக்குத் தெரியும். அதை இங்கே ஸ்தாபிக்க வேண்டாம். மேடையிலே பேசினா நாலு பேர் பொழுது போச்சேன்னு கை தட்டுவா. அதுதான் பெருமைன்னு தவறா நெனச்சிட்டு இருக்கே. பேசற பேச்செல்லாம் வாழ்க்கை நடைமுறைக்கு ஒத்து வராதுனு உனக்குப் புரியலை. புரியவும் புரியாது. … …. ….. 

நீ என்னடான்னா செயல்ல மட்டுமில்லாம வாக்கிலயும் சூத்திரனா மாறிட்டே. எனக்கு அப்படி வாழ முடியாது. நம்ம முன்னோர்கள் வகுத்த வழிமுறைகளெல்லாம்  சுத்த ஹம்பக் என்று நீ சொல்ற மாதிரி என்னால் நினக்க முடியாது. அப்படியானா நமக்கு முன்னாலே பிறந்து இந்த நாட்டிலே வளர்ந்த எல்லோரும் ஒண்ணுமே தெரியாத முட்டாள்களா.?நீ ஒருத்தன் மட்டும்தான் எல்லாம் தெரிஞ்ச புத்திசாலியா.? இல்லை எனக்குத் தெரியாமல் தான் கேட்கிறேன்

தம்பி பாபுவின் பதில்
 அண்ணா நான் சொல்றத நீங்க சரியாப் புரிஞ்சுக்கலை வாழ்க்கையிலே குலம் கோத்திரம் எல்லாம் மனசைப் பொறுத்தவரை சரியா இருந்தா நல்லதண்ணா. ஆனால் அதுவே ஒரு சில வகுப்பாளுங்க தரமில்லாமலேயே உயர்த்தப் படறதும், மத்தவங்க நசுக்கப் படற்துக்கு ஒரு கருவியா, எண்ணமா சமுதாயத்துலே ஒரு நிலை அடைஞ்சிருக்கிறது தப்புன்னுதான் நான் சொல்ல வரேன்

நீங்க வணங்கற தெய்வத்தைதான் நானும் வணங்குகிறேன்.மற்ற சாதிக்காரங்களும்--. ஹிந்துக்கள் வணங்கறாங்க. இதுலே உயர்வு தாழ்வுக்கு இடம் எங்கேன்னுதான் புரியலை. இதையெல்லாம்தான் விவேகாநந்தர் முதல் பாரதி வரை சொல்லி இருக்காங்க. அவங்க சொன்னதைக் கேட்டு அந்த சமயம் கைதட்டிப் பொழுது போக்கின கூட்டம் இருக்கலாம். ஆனால் எனக்கு அதுதான் சரின்னு ஒரு உறுதி பிறந்திருக்கு. என்னைப் போல எவ்வளவோ பேருக்கும் பிறந்திருக்கலாம். அது நன்மையாய்தான் முடியும்.//
                                                                        
இதேபோல பாபுவின் புரட்சிகரமான உரையாடல்களும், பாரதி குறித்தான இலட்சிய மேடைப் பேச்சும்இருக்கின்றன. (இந்நூல் அத்தியாயம்.7)

// மனித குல உணர்வும் நாட்டுப் பற்றும் பாரதியின் பாடல்களில் இரண்டறக் கலந்து விளங்குகிறது.நிலை கெட்ட மனிதரைக் கண்டு நெஞ்சு பொறுக்காத பாரதிதனி மனிதனுக்குணவிலை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்று வஞ்சினம் எடுக்கிறார். ஆற்றல் நிரம்பப் பெற்ற சமுதாயத்தை சிருஷ்டிக்க விரும்புபவன் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் கேடுகெட்ட இந்த ஜகத்தையே அழிப்போம் என்கிறான்.இந்த அழிவு குஞ்சு வெளிவர முட்டை ஓடு அழிக்கப்படும் தன்மையுடைத்தாய் தான் இருக்கும்.  பயிர் செழுமையாக வளர கள்ளியும் காளானும் வேரோடு ஒழிக்கப் படத்தான் வெண்டும்

ஆள்பவன் ஆளப் படுபவன் என்ற பேதமற்ற சமுதாயத்தில் பெயரளவுக்கு இந்நாட்டு மன்னர் என்றில்லாமல் உண்மையிலேயே மனிதனுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது ஒவ்வொருவருடைய கடமையாகும்.கடமையை செவ்வனே செய்ய இடம் தராத இன்றைய சமுதாயம் கடந்த கால பழக்க வழக்க சட்ட திட்ட கோட்பாடுகளிலிருந்து மீட்சி பெற வேண்டும் மீட்சி பெற சாதி பேதமற்ற சமுதாயம் வளர வேண்டும். மூட நம்பிக்கைகளின் நிலைகளன் இந்தியா என்ற சொல்லுக்கு இழுக்கு வர வேண்டும்.

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக,உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்து வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்ய வேண்டும் அப்போதுதான் புதிய சமுதாயம் பிறக்கும் அப்போதுதான் நாம் பழம் பெரும் பாரத நாட்டின் புதல்வர் என்ற சொல்லுக்கு அருகதையாவோம்.பெருமை தருவோம் வாழ்க பாரத தேசம். வளர்க பாரதிகண்ட சமுதாயம்.” என்று கூறி பாபு பேச்சை முடித்ததும் கைதட்டல் //

நூலில் உள்ள, மேலே சொன்ன கருத்துகள் போன்றவை, இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எம்.பி அவர்களின் நேரடிக் கருத்தோ என்று எண்ண வைக்கிறது.

ஏனெனில் நாவலைப் படிக்கும் போது, கூடவே எனக்கு புரட்சிகரமான எண்ணம் கொண்ட இவரது வலைப்பதிவுகளும் நினைவில் வந்தன. 

என்னதான் புரட்சி அது, இது என்று நாவலின் நாயகன் பேசினாலும், அவனது முடிவு என்பது அந்த நாவலாசிரியரின் கையில்தான் என்பதனை இந்த நாவல் காட்டி விடுகிறது.

இந்த நாவலில் காணப்படும் தத்துவ விசாரணைகள் எனது மனத்தைக் கவர்ந்த படியினால், நேரம் கிடைக்கும் போது,  மீண்டும் இந்த நூலை படிக்கலாம் என்று இருக்கிறேன்.

நூல் விவரம்

இந்த அருமையான நாவலை Pustaka Digital Media ( http://www.pustaka.co.in )  மின் நூலாக வெளியிட்டுள்ளது. விலை ரூ 88/= . நூலாசிரியர் G.M.B அவர்கள் பற்றி பதிப்பகத்தார் தந்த குறிப்புரை இது … 

 // 78 வயதுடைய ஜீ.எம். பாலசுப்பிரமணியம், திருச்சி பாரத மிகுமின் கொதிகலத் தொழிற்சாலையில் தர உறுதி மற்றும் கட்டுப்பாட்டுப் பிரிவில் பொறுப்பான பதவியில் இருந்து பணி விருப்ப ஓய்வு பெற்றவர். இளவயதில் இருந்தே எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். நாளும் காணும் வாழ்வின் பல நிகழ்வுகளைதன் கதைகளிலும் கவிதைகளிலும் வெளிப்படுத்த முயற்சிப்பவர். // 

அய்யா ஜீ.எம்.பி அவர்களை திருச்சியில் PLA.Krishna Inn ஹோட்டலில் (03.07.13) ஒரு முறையும், மதுரை வலைப்பதிவர் சந்திப்பு (26.10.14) நிகழ்ச்சியிலும், மற்றும் அவர் புதுக்கோட்டை போகும் வழியில் திருச்சியில் Breeze Residency (10.10.15) இலும் மற்றும் மறுநாள் (11.10.15) புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிலும் சந்தித்து இருக்கிறேன்.

தொடர்புடைய எனது பிற பதிவு

வாழ்வின் விளிம்பில்ஆசிரியர் G.M.B https://tthamizhelango.blogspot.com/2014/11/gmb.html

24 comments:

  1. ஐயாவின் எழுத்து நடை அனைவரையும் ஈர்க்கச் செய்யும். நூலைப் பற்றிய உங்களின் மதிப்புரை நூலைப் படிக்கும் ஆவலை உண்டாக்கிவிட்டது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் முதற் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  2. ஜி.எம்.பி. ஐயா அவர்களில் நூல் பற்றியதோர் நல்ல பார்வை. ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. நூலைப் பற்றிய உங்கள் மதிப்புரையைப் படித்தேன். நன்றாக எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  4. ஜிஎம்பீ சாரின் நூலை அனுபவித்துப் பகிர்ந்திருக்கிறீர்கள்.. நூலைப் படைத்தவருக்கு இதான் மேலும் பல நூற்களைப் படைப்பதற்கான உற்சாக டானிக். நம் பதிவுல நண்பரின் படைப்பு என்பதில் அந்த நூலுக்கான உங்கள் பகிர்தல் மேலும் பெருமை பெருகிறது. இந்த 'நினைவில் நீ' நூல் எங்கே கிடைக்கும் என்னும் குறிப்பையும் ஜிஎம்பீ சாரிடமிருந்து பெற்று இக்கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டால் அது இன்னும் பலர் இந்த நூலை வாசித்து களிக்க வாய்ப்பாக அமையும். மிக்க நன்றி, நண்பரே.

    ReplyDelete
    Replies
    1. நினைவில் நீ புத்தக வடிவில் இல்லை மின்னுலாக இருக்கிறது விருப்பம் இருந்தால் பரிசால்க தருகிறேன்

      Delete
    2. மூத்த எழுத்தாளர் ஜீவி அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. நூல் பற்றிய வினவுதலுக்கு, அய்யா ஜீ.எம்.பி அவர்கள் தந்த விவரமே போதும் என நினைக்கிறேன்.

      Delete
    3. 'புத்தகா.காம்'--மில் எனது நூல்களும் பிரசுரமாகியிருப்பதால் உங்கள் புத்தகத்தை படிக்க வசதி உண்டு, சார்.

      புத்தகத்தை நாம் பரிசாக அளித்தாலும் அதற்கான பாஸ்வேர்ட் போட்டு படிப்பதற்கு பலரால் முடிவதில்லை என்ற குறைபாடும் இருக்கிறது, சார். நண்பர் தமிழ் இளங்கோவிற்கு என்ன அனுபவம் என்று தெரியவில்லை.

      Delete
    4. எழுத்தாளர் ஜீவி அவர்களின் மறு வருகைக்கு நன்றி. நீங்கள் சொன்ன 'பாஸ்வேர்ட்' சமாச்சாரம் சரிதான். எனது அனுபவம் தனிக் கதை. அதை இங்கு எழுதக் கூடாது என்பதால் சமயம் வரும்போது உங்களிடம் சொல்கிறேன்.

      Delete
  5. இந்த நூலை அச்சுப் பிரதியாகவும் ஜிஎம்பீ சார் போட்டிருக்கிறார் (மணிமேகலை பிரசுரம், சென்னை) என்ற நினைவில் புத்தகத்தை அஞ்சலில் பெறுவதற்கான முகவரி பற்றி எழுதியிருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அது வாழ்வின் விளிம்பில் என்ற சிறு கதைத் தொகுப்பு

      Delete
  6. அருமையான அறிமுகம்!

    ReplyDelete
  7. அறிமுகம் அருமை . இது போன்ற நிகழ்வுகள் முன்பு சர்வ சாதாரணம் . ஆந்திராவில் இருந்தபோதும் இது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கோபி பட்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களுக்கு, உங்கள் கருத்துரையைப் படித்ததும் சற்று குழப்பம். இந்த பின்னூட்டம் இந்த பதிவிற்கானது தானா? அல்லது மாறி வந்து விட்டதா என்பதுதான்

      Delete
  8. ஜி.எம்.பி. ஐயா அவர்களின் நூல் பற்றிய அறிமுகம் மிக சிறப்பு...

    ReplyDelete
  9. உங்கள் புத்தக விமர்சனம், படிக்கும் ஆவலைத்தூண்டுகிறது.

    ReplyDelete
  10. ஜீ.எம். பாலசுப்பிரமணியம் எழுதிய ‘நினைவில் நீ‘ மின்னூல் புஸ்தகா டிஜிட்டல் மீடியா வெளியீடு பற்றிய குறை நிறைகளை சிறப்பாக மதிப்பீடு செய்துள்ளீர்கள். ஒரு மத்தியதர குடும்பத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட நல்ல கதை. .சமுதாயத்திற்கு தேவையான கருத்துகள் இடம்பெற்றமை குறித்து சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கையாளர் திரு ஆர்.முத்துசாமி அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete