Saturday 20 February 2016

மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான்



பணியில் இருக்கும்போது அடிக்கடி காபி குடிப்பது வழக்கம். விருப்ப ஓய்வில் வீட்டுக்கு வந்த போது அப்படி அடிக்கடி இல்லாவிட்டாலும், இடையில் இரண்டு முறையாவது காபி குடிக்க வேண்டும். இல்லா விட்டால் தலைவலிதான். வீட்டிலேயே அடைந்து கிடந்தால் ஒருவித சலிப்பு வந்துவிடும் என்பதால் அவ்வப்போது வெளியே போய் வருவேன். வெளியூர் பயணமும் இதில் அடக்கம். தினமும் முற்பகல் 11 மணி, மீண்டும் மாலை 4 மணி என்று காபி சாப்பிட எங்கள் ஏரியாவின் அருகில் உள்ள, பழையமில் பக்கம் உள்ள பேக்கரிக்கு செல்வது வழக்கம். அங்கு என்னைப் போலவே ’ரிட்டையர்டு’ ஆன நண்பர்களும் வருவார்கள். ரியல் எஸ்ட்டேட் ஆசாமிகளும் கூடி தங்களுக்குள் வியாபாரம் பற்றி பேசிக் கொள்ளுவார்கள். கடையின் முன் விசாலமான இடம், பெரிய அடர்ந்த வேப்பமரம், பக்கத்திலேயே டவுன் பஸ் ஸ்டாப் என்று எல்லோருக்கும் வசதியான இடம்.

மீண்டும் அம்மாதான்

அன்றைக்கும் அப்படித்தான். மாலைநேரம். காபி சாப்பிடப் போனபோது அங்கே எதிரில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி ஒருவர். ஒரு காலத்தில் கலைஞரின் தீவிர அனுதாபியாக இருந்தவர்., என்னைப் போல. வழக்கம்போல நலன் விசாரிப்பிற்குப் பின், அவர் என்னைப் பார்த்து கேட்ட கேள்வி “ வரும் தேர்தலில் ஆட்சிக்கு யார் வருவார்கள் என்று நினைக்கிறீர்கள்?” என்பதுதான். நான் உடனே “எனக்குத் தெரிந்தவரை, கூட்டிக் கழித்துப் பார்த்தால் அம்மாதான்” என்று சிரித்தபடியே சொன்னேன். “என்ன நான் நினைப்பதையே நீங்களும் சொல்லுகிறீர்கள்” என்றார். மேலும், இங்கு பலரும் அவரிடம் இதேபோல் சொன்னதாகச் சொன்னார். இதுதான் இங்குள்ள எதார்த்தமும் கூட.

கலைஞர் செய்தால் … :

அண்மையில் மறைந்த வலைப்பதிவர் ராஜ நடராஜன் அவர்களது பதிவினில் நான் எழுதிய கருத்துரை இது.

// எம்ஜிஆர் காலத்திலிருந்தே மக்கள் மத்தியில் ஒரு பார்வை கலைஞர் மீது விழுந்து விட்டது. அது என்னவென்றால், கருணாநிதி எது செய்தாலும் தப்பு; கருணாநிதி செய்தால் ஊழல்; அதே காரியத்தை எம்ஜிஆரோ, ஜெயாவோ செய்தால் தப்பு இல்லை; ஊழல் இல்லை. கருணாநிதி ஆட்சியில் பால் விலையில், பஸ் கட்டணத்தில் கொஞ்சம் ஏற்றினாலும் போதும் எல்லோரும் குதிகுதியென்று ஆகாயத்திற்கும் பூமிக்கும் குதிப்பார்கள். அதே சமயம் அம்மா ஆட்சியில் எவ்வளவு ஏற்றினாலும் தாங்கிக் கொள்வார்கள். அது என்னவோ அவர் ராசி அப்படி; இவர் ராசி இப்படி.//

எனவே தேர்தல் திருவிழாவில் எதிர்க்கட்சிகளின் ’செம்பரம்பாக்கம்’ போன்ற பேச்சுக்கள் எடுபடாமல் போகவே வாய்ப்புகள் அதிகம்.  

கலைஞரும் தமிழும் தமிழ்நாடும்:

திராவிட இனம், தமிழ் மொழி என்ற உணர்ச்சி பூர்வமான அடித்தளத்தில் எழுந்ததுதான் தி.மு.க.வின் வரலாறு. அறிஞர் அண்ணாவின் மறைவிற்குப் பிறகு, கலைஞர் கருணாநிதியை தமிழையும் தமிழர்களையும் உய்விக்க வந்த ஒரு மாமன்னர் போன்று சித்தரித்துக் காட்டினார்கள். அவரும் மேடை தோறும் தமிழ், தமிழ் இனம் என்று வாளை சுழற்றி வந்தார். இன்னும் சிலர் அவர்தான் போனபிறவியில் மனுநீதிச்சோழன் என்றுகூட தட்டினார்கள். இதில் அந்தக்கால தமிழாசிரியர்களின் பங்கு அதிகம். இவ்வாறு நம்பியவர்களை, நட்டாற்றில் விட்டு விட்டு தனது குடும்பநலனே தன் அரசியல் என்று ஆன பிறகு, அவரை விட்டு பலரும் விலகி விட்டனர். ஒவ்வொரு மாவட்டமும், வட்டமும் குறுநில மன்னர்களாகவும், குட்டி ஜமீன்தார்களாகவும் வலம் வந்தது கண்கூடு. கைக்காசைப் போட்டு ஒரு சிங்கிள் டீ குடித்துவிட்டு  கட்சிக்கு வேலைசெய்த, அந்நாளைய தொண்டர்கள் இன்று கட்சியில் இல்லை. தேர்தல் நேரத்தில் விலைபோகும் ஆட்களை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்.

பிற கட்சிகள்:

தமிழ்நாட்டில் பிற கட்சிகள் என்று எடுத்துக் கொண்டால் எதுவுமே வலுவானவை அல்ல. அந்தந்த பகுதியில் குறிப்பிட்ட சமூகத்தின் செல்வாக்கை வைத்தே கொடிகட்டி பறக்கின்றன. ஆனாலும் தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் உதயசூரியன் அல்லது இரட்டை இலை என்றுதான் பார்க்கிறார்கள்.

1967 இற்குப் பிறகு காங்கிரஸ், இடது வலது கம்யூனிஸ்டுகள் திராவிடக் கட்சிகளின் சார்புக் கட்சிகளாகி விட்டன. தமிழ்நாட்டு மக்கள் இலங்கைப் பிரச்சினையை மையமாக வைத்து தேர்தலில் வாக்களிப்பதில்லை. அந்த வகையில், குதிரையில் ஏறியவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல என்பது போல,  வை.கோபால்சாமி அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு (இந்த செல்வாக்கு கருணாநிதி எதிர்ப்பு அரசியலால் உருவானது) இப்போது கிடையாது. நடிகர்கள் ரஜினிகாந்த், விஜயகாந்த் இருவருக்கும் மக்கள் கொடுத்த வாய்ப்பை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. எனவே மீண்டும் இந்த தமிழகம் இன்னொருமுறை அவர்களுக்கு தங்க தாம்பாளத்தில் ஆரத்தி எடுக்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் தலித் கட்சிகள் எப்போதுமே தங்களுக்குள் ஒன்றுபடாதவர்கள்: ஒருவர் இருக்கும் இடத்தில் இன்னொருவர் இருப்பதில்லை. பாரதீய ஜனதா என்பது தமிழ்நாட்டில் இன்னொரு நாடார் அமைப்பாக மாறி வருகிறது.

இதனால்தான் பா.ம.க, நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள், வன்னியர் இல்லாத இடங்களில், தலித்துகளைத் தவிர்த்து பிற ஜாதியினரோடு கைகோர்த்துக் கொள்ள விரும்புகிறார். இதற்காக அடிக்கடி தலித்துகள் மீது தாக்குதல் அரசியல் செய்கிறார். இதனால் தலித் அல்லாதவர்கள் தங்களை ஆதரிப்பார்கள் என்பது அவர் நினைப்பு. (உண்மையில் தமிழ்நாட்டில் சமூக நிலைமை என்பது, தலித்துகள் பிற மக்களைச் சார்ந்தும், மற்றவர்கள் தலித்துகளின் உழைப்பைச் சார்ந்தும்தான் இருக்க வேண்டி உள்ளது. எனவே இவர் பேச்சு அதிகம் எடுபடுவதில்லை. திராவிட இயக்கங்கள் இந்த சமூக நிலைமையை நன்கு பயன்படுத்திக் கொண்டன) இதற்குப் பதிலாக இவர் தலித்துகளோடு சேர்ந்து மற்றவர்களையும் அனுசரித்து இருந்தால், அவர் தமிழ்நாட்டில் ஒரு தமிழர் தலைவராக உருவெடுத்து இருப்பார். திராவிட கட்சிகளுக்கு இணையாக அவரது கட்சியும் வளர்ந்து இருக்கும். ஆனால் இப்போதைய சூழ்நிலையில், எக்காலத்தும் பா.ம.க என்பது ஒரு பிராந்திய கட்சியாகவே இருக்கும் நிலைமைக்கு போய் விட்டது என்பதே உண்மை.

இந்நாளைய வாக்காளர்கள்:

இன்றைய சூழ்நிலையில் நாட்டில் பலபேருக்கு வாக்களிப்பதில் ஆர்வம் இல்லை என்பதே உண்மை. ஒரு வார்டு கவுன்சிலரிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, அவர் என்னிடம் சொன்னது இது. “சார் எனது வார்டு முழுவதும் எனக்கு வாக்களிப்பார்கள் என்று சொல்ல முடியாது; குறிப்பிட்ட ஒரு சில ஏரியாக்களை மட்டும் வளைத்து விட்டால் போதும்; மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை.” இதுதான் நாடு முழுக்க நடக்கும் அரசியல். நாளைய தேர்தலில் கடைசிநேரத்தில், வாக்காளர்களைக் கவரக்கூடிய விஷயங்களில் பண பலம், அதிகார பலம், ஆள்பலம் எல்லாம் உள்ள ஒரே கட்சி அம்மா கட்சிதான். மேலும் குமாரஸ்வாமி போன்ற கடவுளர்களின் அருளாசியும் உண்டு. இவற்றை எதிர் கொள்வதில் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை. எனவே மீண்டும் அம்மாவே வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.  

எல்லாம் சரிதான். ஆனால் நாம் நினைப்பது எல்லாமே நடந்து விடுகிறதா என்ன? நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கிறது என்பார்கள். பார்ப்போம்.

58 comments:

  1. Replies
    1. அய்யா! உங்கள் கேள்விக் குறிக்கு ’YOU TOO’ என்ற காரணம் புரிகின்றது. நான் பார்த்த, கேட்ட அனுபவத்தை வைத்து எழுதி இருக்கிறேன்.

      Delete
  2. //மீண்டும் ஆட்சியில் ‘அம்மா’தான்//

    இது எதிர்கட்சிகள் உள்பட எல்லோருக்குமே மனதுக்குள் தெரிந்ததோர் உண்மையான விஷயம்தான்.

    அதைத்தாங்கள் தங்கள் பாணியில் மிகச்சிறப்பாக துணிச்சலுடன் இந்தப்பதிவினில் சொல்லியுள்ளீர்கள்.

    ’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்ற பாடல் வரிகள்தான் என் நினைவுக்கு வருகிறது.

    பார்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. திரு V.G.K. அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. எதிர்கட்சிகளின் ஒற்றுமை இன்மையால் இந்த நிலை நீடிக்கிறது ,பலமான எதிர்கட்சி கூட்டணி உருவாகுமா ?பொறுத்திருந்து பார்ப்போம் !

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

      Delete
  4. Replies
    1. வினோத் சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. உங்கள் பாணியில் சொல்வதானால் ‘ஆகட்டும் பார்க்கலாம். ஆட்டத்தின் முடிவிலே’

      Delete
  6. உங்க நண்பருக்கு பலரும் இதேபோல் சொன்னதும் தமிழக மக்களின் அறிவுஜீவிதனம் மீதுள்ள உறுதியான நம்பிக்கையில் தான்.

    ReplyDelete
    Replies
    1. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தமிழக மக்கள் விவரமானவர்கள் என்பதில் ஐயமில்லை.

      Delete
  7. ஒன்று நிச்சயமாக தெரிகிறது. எல்லா வலைப் பதிவர்களும் அம்மாவின் ஜால்ராக்கள் ஆகிவிட்டார்கள் என்பது உண்மை. (பயம் தான் காரணம்).இப்படி ஜால்ரா போட்டால் இந்த தடவை செம்பரம்பாக்கம் ஏரி. அடுத்த தடவை மதுராந்தகம் ஏரி நிச்சயம்.

    மு.க. வின் வயது 92 தி.மு.க. வெற்றி பெற்று மு.க முதலமைச்சர் ஆனால் கூட, நிச்சயமாக அதிக பட்சம் ஒரு வருடம் தான் முதலமைச்சராக இருப்பார். (இந்த நாட்களில் கூட ஸ்டாலின் தான் முதலமைச்சருக்கு வலது கை போலிருந்து ஆட்சியை நடத்துவார்). பிறகு ஸ்டாலின் இடம் பதவியை கொடுத்துவிட்டு தான் கட்சிக்கு தலைவராக மட்டும் இருக்கிறேன் என்று சொல்லி சந்நியாசம் வாங்கி விடுவார். ஆகவே மு.க. பற்றி பேசுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. பேச வேண்டியது ஸ்டாலினைப் பற்றியே. தி.மு.க வெற்றி பெற்றால் அவர் எப்படி ஆட்சி புரிவார் என்பதை மட்டும் தான் பார்க்க வேண்டும்.

    ஆகையால் இப்போது பார்க்க வேண்டியது ஜெயாவா இல்லை ஸ்டாலினா என்றுதான். You have to select /elect best out of the worst.
    மு.க வாரிசுகள் என்று தான் பேசுகிறோமே தவிர, ஜெயாவின் வாரிசுகளைப் பற்றி (சசிகலா, சுதாகரன், நடராசன், இளவரசி போன்றவர்களைப் பற்றி) யாரும் இப்போது பேசுவதில்லை. இந்த முதலைகள் தமிழ் நாட்டு சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக முழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி யாரும் சிந்திப்பதாகத் தெரிவதில்லை
    நம் பதிவர்கள் ஆக்க பூர்வமான (அரசியலுக்கு) உகந்த கருத்துக்களை கூறாமல் எல்லோரையும் குழப்புவது வேதனைக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. திரு. ராமராவ் அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      // ஒன்று நிச்சயமாக தெரிகிறது. எல்லா வலைப் பதிவர்களும் அம்மாவின் ஜால்ராக்கள் ஆகிவிட்டார்கள் என்பது உண்மை. (பயம் தான் காரணம்) //

      இப்படி ஒரு கருத்துரை வரும் என்று எதிர்பார்த்ததுதான். மற்றவர்கள் எப்படியோ? நான் ஜால்ரா போடுவதற்காகவோ அல்லது பயம் காரணமாகவோ இந்த கட்டுரையை எழுதவில்லை என்பது கட்டுரையை முழுமையாகப் படித்தாலே விளங்கும்.

      Delete
    2. I also doubt that a team is working in creating an image for AMMAS'S Party.

      Delete
    3. சகோதரர் இமயவரம்பன் அவர்களுக்கு இதுமாதிரி சந்தேகம் வந்ததில் ஆச்சரியம் இல்லை. நான் அதுமாதிரி எந்த குழுவிலும் சாராதவன் என்பதனை, மேலே நான் குறிப்பிட்ட, மறைந்த பதிவர் ராஜ நடராஜன் அவர்களது பதிவினில் நான் இட்ட கருத்துரையிலிருந்தே புரிந்து கொள்ளலாம். ஒரு வலைப்பதிவர் என்ற முறையில் நான் எனது எண்ணங்களைச் சொல்லியுள்ளேன். அவ்வளவுதான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  8. ஜெயாவின் தலை எழுத்தை உச்ச நீதிமன்றம்தான் தீர்மானிக்கும்

    ReplyDelete
    Replies
    1. அய்யா G.M.B. அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. ஐயா தாங்கள் கேட்டதை எழுதியதைக் குறித்தும் அதற்கு பிறர் அளித்த கருத்துக்களை குறித்தும் என்னுள் ஒரு வினா எழும்பி உள்ளது ஐயா.அது என்னவென்றால் மக்கள் நலன் கருதி தான் மக்களாட்சி நடைபெறுகிறது ஆனால் அந்த மக்களே தங்களின் விலைமதிப்பற்ற ஓட்டுகளை 500,1000 என்று விற்கிறார்கள்.அதற்கு ஏன் தேர்தல் ..??தேர்தல் பிரசாரத்தின் போது இதை செய்கிறேன் அது செய்கிறேன் என்று போட்டிப் போட்டு பொய் சொல்லும் உதடுகள் தான் உள்ளன நம் தமிழ்நாட்டில் ஐயா.இவர்கள் ஆட்சி செய்தால் மட்டும் நாடு மாறி போகுமா..??யாரும் யாரையும் குறைச் சொல்லுவதால் பயனில்லை.இன்றைய இளைஞர்கள் கையில் நாட்டை ஒப்படைக்க விரும்பினால் நன்றாக இருக்கும் ,காரணம் அவர்களில் பலர் சிந்தனை திறமையும் அறிவாற்றலும் கொண்டுள்ளன.சரி அது போகட்டும் சாதரணமாக காவல் துறை,மாவட்ட ஆட்சி துறை மற்றும் பல துறைகளுக்கு எத்தனை கஷ்சமா தேர்வுகளை கடந்து அவர்கள் தேர்வாகிறார்கள்.ஆனால் நாடு என்ற இரண்டு எழுத்துக் கொண்ட ஒரு பெருங்கடலை எப்படி படிப்பறிவு குறைந்த மற்றும் படிப்பறிவு இல்லாதவர்களிம் ஒப்படைக்க இத்தனை ஆர்வமும் போராட்டமும் ..??? படிப்பறிவு இல்லனா என்ன பட்டறிவு உள்ளது என்று சிலர் கூறலாம்.சீனா மற்றும் கியூபா நாடு ஒரு கட்சி ஆட்சி மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறது.ஆனால் நம் நாட்டில் தடுக்கி விழுந்தால் கட்சி கட்சி கட்சி.தேர்தலின் போது பணத்தைக் கொடுத்து மக்களும் அதைப் பெற்றுக் கொண்டு ஓட்டு போடுவதால் என்ன பயன்..??

    ஆகையால் சிந்தியுங்கள் நம் நாட்டை சரியான ஒருவரிடம் ஒப்படைக்க மட்டும் ஓட்டு போடுங்கள் இல்லை என்றால் வேண்டாம் அப்படி பணத்தை பெற்று போடும் ஓட்டு ஒரு நாளைக்கு 0.2555 பைசா இன்றைய பிச்சைக் காரன் கூட ஒரு நாளைக்கு 100 ரூபாய் பெறுகிறான்.

    வாழ்த்துகள் ஐயா.காத்திருப்போம் நல்ல விடியலுக்கு.என் கருத்தில் தவறுகள் இருந்தால் மன்னியுங்கள் ஐயா..

    ReplyDelete
    Replies
    1. சகோதரி செ.வைசாலி அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      நம்மைப் போன்றவர்கள் எல்லாம் ஜனநாயகம் என்றால் இப்படித்தான் ஒரு நியதியோடு இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் வேண்டுமானால், இந்த பாராளுமன்ற ஜனநாயக முறையை எதிர்பார்க்கலாம். ஆனால் ஜாதி, மதம் கண்ணோட்டம் நிறைந்த இந்திய ஜனநாயகத்தில் இதனை எதிர்பார்க்க முடியாது.

      ஓட்டுக்கு பணம் வாங்குபவர்கள், எல்லோரிடமும் பணம் வாங்கிக் கொள்கிறார்கள். ஆனால் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்குத்தான் வாக்களிக்கிறார்கள். மேலெழுந்தவாரியாக பணம் மற்றும் இல்வசங்கள் கொடுத்துதான் ஜெயிக்கிறார்கள் என்பதுபோல தோன்றினாலும், உண்மையில் இதையும் தாண்டி பல காரணிகள் இருப்பது எல்லோருக்குமே தெரியும். என்ன, யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

      Delete
    2. உண்மை தான் ஐயா யாராலும் எதையும் செய்ய இயலாது.நன்றி ஐயா.

      Delete
  10. தங்களின் கூற்று மெய்தான்.. இங்கேயும் இப்படித்தான் பேசிக் கொள்கின்றார்கள்.. என்ன ஆகின்றது என்று பார்ப்போம்!..

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. ’அம்மையப்பன் என்றால் என்ன? உலகம் என்றால் என்ன? இரண்டும் ஒன்றுதானே” என்ற ‘டெக்னிக்கை’ பயன்படுத்தி ஜெயித்த திருவிளையாடல் வசனத்தை நினைவுபடுத்திக் கொள்ளவும்.

      Delete
  11. பார்க்கலாம் நண்பரே தங்களின் கணிப்பை...
    தமிழ் மணம் 4

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. யாருக்கும் பெரும்பான்மை இல்லாத, குறைந்த பட்சம் மூன்று குறிப்பிடத் தக்க கட்சிகள் இணைந்து தான் ஆட்சி அளிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டால் நல்லது. ஒரு பக்கம், யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை என்ற வேட்பாளர். மறு பக்கம், வார்த்தை விளையாட்டுகளிலேயே எந்தப் பொய்யையும் மறைத்து விடலாம் என்ற வேட்பாளர். வெற்றிடம் பெரிதாகத் தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் Bandhu அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. உங்கள் வலைத்தளத்தில், அரசியல் பதிவு ஒன்றிலும் நீங்கள் இந்த ‘வெற்றிடம்’ பற்றி எழுதி இருப்பதைப் படித்தேன்.நன்றி.

      Delete
  13. நிலைமையை பார்க்கும்போது அப்படிதான் தெரிகிறது. பார்ப்போம். மாற்றம் ஏற்பட்டால் நல்லது.

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கைத்துறை நண்பர் எஸ்.பி.எஸ். அவர்களுக்கு நன்றி. மாற்றம் ஒன்றே மாறாதது. அதுவும் தன்னாலே நடக்கும்.

      Delete
  14. வரவிருக்கும் தமிழ்நாடு தேர்தலைப்பற்றிய உங்கள் பதிவில் விஷயம் இருக்கிறது. தமிழக தேர்தல் அரசியல் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.
    அகிலமே இதுவரை காணாத அளவுக்கு விதவிதமான விஞ்ஞான ஊழலெல்லாம் செய்துவிட்டு, ஒன்றுமே நடக்காததுபோல் நான் தான் இம்முறை ஜெயிப்பேன் என்று ஒரு கட்சி மார்தட்டித் திரிவது, அதற்கு ஆளும்கட்சி அளவுக்கு சமபலம் இருப்பதுபோன்ற கருத்துக்கணிப்பு/தோற்றம் -கிட்டத்தட்ட வென்றுவிடலாம் என்கிற possibility -இவையெல்லாம் இந்தியாவில்தான் நடக்கும். நமது மக்கள் அப்படி. அரசியல், சமூக சூழல் அப்படி. மேலைநாட்டு ஜனநாயகங்களில் இந்த மாதிரி அபத்த சீன்களுக்கு சான்ஸே இல்லை. ஜப்பான் போன்ற நாடுகளில், கருணா & கோ. அளவிற்கு ஊழலில் பி.ஹெச்டி வாங்கியவர்கள் அடையாளம் காணப்பட்டால், அத்தோடு அவர்களது அரசியல் அஸ்தமனத்துக்கு வரும். ஜெயிலில் இருந்து வெளிவந்த பின்னும் அங்கு குற்ற-அரசியல்வாதிகள் பொது இடங்களில் காணப்படுவதைத் தவிர்ப்பர். அத்தகைய அவமான உணர்ச்சி உடைய சமூகம் அது. நமது நாட்டில் இவர்கள் மீண்டும் வெற்றிபெறுவது மட்டுமல்ல, இவர்களுக்கு வெண்கல சிலையும் வைப்பார்கள் நமது ஜனங்கள்.

    நமது தேர்தல்களில் ஒரு கட்சியின் செல்வாக்கு மட்டுமல்லாமல் அது மற்ற கட்சிகளோடு அமைக்கப்போகும் கூட்டணி ஒரு பெரும் காரணியாக அமைந்துவிடுகிறது. அப்படிப் பார்த்தால், தேமுதிக , ஜெயாவைப் பழிவாங்கவேண்டும் என்கிற ஒரே லட்சியத்துக்காக, கருணாவின் காலில் விழுந்தால், அதிமுக தோற்பதற்கான வாய்ப்பு அதிகம் எனத் தோன்றுகிறது. 1%-லிருந்து 3% வரை வைத்திருக்கும் ஜாதிக்கட்சிகள்/தேசியக் கட்சிளின் பங்கையும் இங்கு மறப்பதற்கில்லை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஏகாந்தன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி. அரசியல்வாதிகள் சொல்லும் கொள்கைக் கூட்டணி, சீட்டுக்காக கூட்டணி, ஓட்டுக்காக கூட்டணி, காசுக்காக கூட்டணி என்பதெல்லாம் அவர்களின் வார்த்தை ஜாலங்கள் அன்றி ஏதும் இல்லை.

      Delete
  15. 'ஆனாலும் தேர்தல் என்று வந்து விட்டால் மக்கள் உதயசூரியன் அல்லது இரட்டை இலை என்றுதான் பார்க்கிறார்கள்' - இது எதார்த்தம் இல்லை, என்றாலும் என் கேள்வி. மக்களின் கருத்தாகச் சொல்கிறீர்களா? உங்கள் கருத்து எதுவும் இல்லையா? இது நல்லது, இது கெட்டது என்று பகுத்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வந்தீர்களா? மக்கள் சொல்கிறார்கள் என்றால், “ஜெயிக்கிற கட்சிக்கு வாக்களிக்கும்” மனநிலையில் இருக்கிறீர்களா இது நல்லதா அய்யா? இவ்வளவு கேள்விகளையும் ஒன்றிணைத்து ”?”இட்டேன். இப்போது சொல்லுங்கள். மக்கள் தாமாக நல்ல முடிவுக்கு வரமாட்டார்கள். அப்படி வராமல் பார்த்துக்கொள்வது தான் ஏமாற்றும் கட்சிகளின் முயற்சி, பயிற்சி வெற்றி. ஊடகங்களையும் அப்படியே வளைத்திருக்கிறார்கள். யார் வருவார்? என்னும் ஊகத்தைவிட யார் வந்தால் நல்ல்து என்று துணிவாகச் சொல்லுங்கள் அதுதான் இன்றைய தேவை

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் யாருடைய சார்பாகவும் கருத்தினைச் சொல்லவில்லை. நல்லதோ கெட்டதோ, நான் பார்த்த, பேசிய கிராமப்புற, நகர்ப்புற மக்களின் பேச்சுக்களையும், நாட்டு நடப்பையும் வைத்து, இன்றைய அரசியல் நிலவரம் இதுதான் என்று இந்த பதிவினை எழுதியுள்ளேன். யாருமே சரியில்லை என்னும்போது, இன்னார் வந்தால் நல்லது என்று சொல்வதால் எந்த மாற்றமும் நடந்துவிடப் போவதில்லை. நல்ல மேய்ப்பன்’ இல்லாத நாடு இந்த நாடு.

      Delete
  16. சில கருத்துக்களில் வேறு படுகிறேன். இருந்தாலும் இது நல்ல ஒரு ஆய்வு; நாள் கட்டுரை! உண்மையான ஜனநாயகம் என்று நம் நாட்டில் சொல்லும் வேற்றுமையில் ஒற்றுமை என்றுமே எனக்கு உடன்பாடு இல்லை! அப்ப?

    உண்மையான ஜனநாயகம் என்றால் ஒற்றுமையில் வேற்றுமை இருக்கும்; அதை மதிக்க வேண்டும்; அந்த வேற்றுமையை மதிக்கவேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகையிலும் மனம் உண்டு என்று வேற்றுமையை மதிக்கணும்.

    கமல் மாதிரி குழப்பாமல்...குழப்பி!
    நான் சொல்வது என்ன வென்றால்...
    உங்கள் கட்டுரை நன்றாக இருக்கிறது சில கருத்துக்களில் நான் வேறு பட்டாலும்!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. திமுகவோ அதிமுகாவோ யார் வந்தாலும் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சிதான் தமிழ் நாட்டின் தலையெழுத்தை தீர்மாணிக்கும். இவ்விரு கட்சிகளும் அல்லது மற்ற எந்த கொசுரு கட்சியும் ஆட்சிக்கு வ்ந்த பின் மத்தியில் ஆளும் கட்சிக்கு என்ன காரணத்தாலோ சல்யூட் அடிக்கின்றன. கூடங்குளம், கெயில், இலங்கை தமிழர், கடசத்தீவு, மீனவர் பிரச்னை, காவிரி தண்ணீர் பிரச்னை முல்லைபெறியாறு என்று தமிழ் நாட்டின் அனைத்துப் பிரச்னைகளும் ம்த்தியில் ஆளும் கட்சியினால் தான் சரி பண்ண முடியுமே ஒழிய திமுகாவினாலோ அல்லது அதிமுகாவினாலோ வேறு எந்த தமிழக கட்சியினாலும் சரிபண்ண முடியாது. யார் வந்தாலும் அனைத்து கஷ்டங்களும் அப்படியேதான் இருக்கும். காங்கிரஸோ அல்லது பிஜேபியோ இந்த பிரச்னைகளை தீர்க்க ஆவலாய் இல்லை. மாறாக, இவைகளை ஊதி பெரிதாக்க என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்வார்கள். இப்போதிருக்கிற நிலையில் தமிழ் நாடு இலங்கையால் தாக்கப்பட்டாலும் இவர்கள் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அனுவுலை வெடித்தாலும் ஒன்றும் செய்ய மாட்டார்கள். மின்ப்ற்றாக்குறையை இவர்கள் நினைத்தால் முற்றிலும் நீக்க வெளி மானிலத்திலிருந்து கொண்டுவர முடியும். இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை நமக்கு கொடுத்தால் போதும். ஆனால் செய்ய மாட்டார்கள். கடந்த டிசம்பர் மழை பேரழிவின்போது இராணுவத்தில் உள்ள பேரிடர் மீட்பு பிரிவு சென்னையில் இரண்டு நாடகள் சுற்றி திரிந்துவிட்டு திரும்பி சென்றுவிட்டாகள். ஹெலிகாப்டர் ஒரு சில இடளிகளில் மட்டும் உணவு விணியோகித்து விட்டு முழு பட்டணத்தையும் கைவிட்டார்கள். கடலூர் மற்றும் சுற்று வட்டார் பகுதிகளுக்கு, மிக அதிமகாக பாதிக்கப்பட்ட பகுதிகள் இவை, போகவே இல்லை. ,இதுதான் தமிழ் நாட்டின் நிலமை. நேப்பாளில் பூகம்ப்ம் வந்தபோது உடனிடியாக ஆயிரக்கண்க்காக பலவிதங்க்ளில் உதவிய மத்திய அரசு இங்கு ஆபத்திற்கு உதவ காலம் எடுத்துக்கோள்கிறது. இந்த நிலையில் போனால் தமிழ் நாடு மற்றோரு ஈழமாகும் என்பதில் ஈயமில்லை. இதை திமுகாவோ அதிமுகாவோ தடுக்க திராணியற்றவர்கள். காங்கிரஸோ அல்லது பிஜேபியோ வந்தால் ஒருவேளை நல்லது நடக்கும். அம், ஒருவேளை! நிச்சயமில்லை. ஆனால் அதற்கு வாய்ப்பில்லை. நிலத்தடி நீர் கொக்கே கோலாவுக்கு விற்கப்படும். மண்ல்கோள்ளை அமோகமாக இனி எப்போதும்போல நடக்கும். டாஸ்மாக் இன்னும் பெருகி நாட்டை குட்டிச்சுவராக்கும். இந்த எலக்ஷனால் எவ்வித பயனுமில்லை. யாருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா பழனிவேலு அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி.

      Delete
  18. சுற்றுவட்டாரத்தில் நாம் சந்திக்கும்குறைந்த அளவு மக்களை வைத்து எடை போட முடியாது என்பது ஒருபுறம், பெரிய பெரிய ஊடகங்கள் நடத்தும் கருத்துக் கணிப்பே தவறிப் போவது ஒருபுறம்!

    மக்களின் எண்ணங்கள் கடைசி நிமிட (அனுதாப) அலைகளையும் பொறுத்தது. அல்லது கடைசி நேர சம்பவங்கள்/உணர்ச்சிகளைப் பொறுத்ததும் கூட!

    உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் அனுதாபத்துக்கு வழி செய்வது(ம்) ஒரு சோகம்!

    இரண்டு திராவிடக் கட்சிகளை விட்டால் தமிழ் நாட்டுக்கு வேறு கதி கிடையாது என்பது மிகப்பெரிய சோகம். நம் வலைப்பதிவர்கள் கூட ஒண்டு இது, அல்லது அது என்று இரு ஊழல் கட்சிகளுக்கும்தான் வக்காலத்து வாங்குகிறார்கள்!

    தம +1

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ‘எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. நான் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே அம்மா"தான் அடுத்த முதல்வர்ன்னு பதிவு செஞ்சிருக்கேன் !

    என்ன இப்போ...கொஞ்சம் ஒட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் அம்புட்டுதேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரருக்கு நன்றி. உங்களுடைய அந்த பதிவினை நான் படித்த ஞாபகம் இருக்கிறது. அந்த பதிவினை மீள் பதிவாக மீண்டும் வெளியிடவும்.

      Delete
  20. இன்னும் ஆழமாக அலசி இருக்கலாமோ
    பதிவின் நீளம் கருதி விட்டுவிட்டீர்களா?
    முன்பு போல் இல்லாமல் எதிர் கருத்தானாலும் கூட
    பதிவர்கள் இப்போதெல்லாம் நாகரீகமாக
    மறுப்பது மகிழ்வாக இருக்கிறது
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எனது கருத்துரைப் பெட்டியில் ‘அனானிமஸ்’ தேர்வு இப்போது இல்லை. எனவே அவர்கள் தொல்லை இல்லை.

      Delete
  21. Replies
    1. சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

      Delete
  22. உங்கள் பதிவைப் படித்துவிட்டு என்னுடைய கருத்தை எழுத நினைத்தேன். சரி, பின்னூட்டங்களையும் படித்துவிட்டு எழுதலாமே என்று வந்தால் நான் என்ன எழுத நினைத்தேனோ கிட்டத்தட்ட அதனை வேறு வார்த்தைகளில் எழுதியிருக்கிறார் திரு முத்துநிலவன். என்னுடைய கருத்தும் அதுவேதான்.
    \\இன்னார் வந்தால் நல்லது என்று சொல்வதால் எந்த மாற்றமும் நடந்துவிடப் போவதில்லை. நல்ல மேய்ப்பன்’ இல்லாத நாடு இந்த நாடு.\\
    - என்று நீங்கள் அவருக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள். எனக்கு இதில் உடன்பாடு இல்லை. நம் கடமையை நாம் செய்யவேண்டும் என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  23. அன்புள்ள அய்யா அமுதவன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் இருவரது அன்பான கருத்தினை மனதில் இருத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  24. இல்லை ஐயா, இம்முறை தொங்கு சட்டமன்றம் அமையவே அதிக வாய்ப்பு இருக்கிறது என்பது என் எண்ணம்..

    ReplyDelete
  25. புதுகை சீலன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நான் எழுதியது நாட்டு நடப்புதானே ஒழிய, கருத்துக் கணிப்பு அல்ல.

    ReplyDelete
  26. வலைபதிவில் கருத்துக் கணிப்பா ? நன்று!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் பிரதீப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நாட்டு நடப்பை எனது பார்வையில் எழுதி உள்ளேன். மற்றபடி ஒன்றும் இல்லை.

      Delete
  27. இம்முறை மீண்டும் அம்மாவா...ஐயகோ..ஆனால் இம்முறை ஓட்டுகள் சிதறிட வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.மட்டுமல்ல அம்மாவே வந்தாலும் முழுமையாக வெற்றி பெறாமல் பல கைமாற்றல்கள் இருக்கலாம். ஆனால் அப்படிக் கைகொடுக்க வரும் கட்சிகள் பாவம்...மக்கள் நல்ல ஒரு ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் அந்தக் கடமை இருப்பதாக நினைக்கிறேன் ஐயா. நம் ஓட்டுகள் விலை போவது கேவலமானதுதான். நாம் தேர்ந்தெடுக்க நினைக்கும் தலைவர் இருக்கலாம். ஒன்று அவர் கட்சி சாராத நல்ல மனிதராக இருக்கலாம். அவர் கட்சியே இல்லாத போது வாய்ப்பில்லை. அடுத்து நாம் நினைக்கும் தலைவர் ஒருவர் கட்சி இருக்கலாம் ஆனால் அவர் வெற்றி பெறும் அதாவது ஆட்சி அமைக்கும் அளவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருக்காமல் போகலாம். இதுதான் இப்போதைய நிலைமை...பார்ப்போம் பொறுத்திருந்து மக்களின் தீர்ப்பை. அவர்களில் நாமும் அடக்கம்தானே ஐயா..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களே, இன்றைய அரசியல் நிலைமையை சரியாகவே கணித்துச் சொன்னீர்கள். நாம் என்னதான் ஜனநாயக கடமை, அது, இது என்றாலும், நம்மைப் போன்ற ஒத்த கருத்துடையவர்களிடம், சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதே உண்மை. தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  28. சரத்குமாரின் கட்சியையே இப்போ அம்மா மறுபடியும் தன்னுடன் சேர்த்திருக்கும் நிலைமையை பார்த்தா, அம்மா வெற்றி சிறிது சந்தேகமாகவே தோன்றுகிறது!

    ReplyDelete
    Replies
    1. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இப்போதும் சொல்கிறேன், நாட்டு நடப்பையும், அதிகார வர்க்கத்தில் ‘கண்டிப்பு’ என்ற பெயரில் நடக்கும் தோரணைகளையும் பார்க்கும் போது மீண்டும் அவரே வர வாய்ப்பு அதிகம்.

      Delete