Monday, 27 April 2015

பின்னூட்டம் எழுதுவது



கம்ப்யூட்ட்ர், இண்டர்நெட் என்று வீட்டிற்கு வந்தபோது எல்லாமே மகிழ்ச்சியான தருணங்கள்தாம். அதிலும் முதன்முதலில் தமிழில் வலைப்பதிவுகளையும்  வலைப் பதிவாளர்களையும் திரையில் பார்த்தபோது ஏற்பட்ட சந்தோஷம் சொல்லி மாளாது. அவர்களது வலைத்தளங்கள் சென்று நமது கருத்துரைகளையும், ஊக்கம் தரும் பின்னூட்டங்களையும் வெளியிடுவது, அவற்றிற்கு அவர்கள் தரும் மறுமொழிகளை படிப்பது என்பதும் ஒரு வித மகிழ்ச்சியே. அப்புறம் வலைத்தளம் தொடங்கி நானும் ஒரு ப்ளாக்கர் (BLOGGER) என்று சொல்லிக் கொண்டபோது ஏற்பட்ட சந்தோஷத்தை எப்படி சொல்வது?

விமர்சனம் என்பது

எந்த ஒன்றையும் அதனைப்பற்றி ஓரளவேனும் தெரிந்து கொண்ட பிறகே நமது கருத்தினை தெரிவித்தல் முறை. அதே போல ஒரு கட்டுரையையோ அல்லது புத்தகத்தைப் பற்றியோ, அதனைப் படித்த பின்னரே கருத்து தெரிவித்தால் நல்லது. இப்போதெல்லாம் வலையுலகில் உடனுக்குடன் பாராட்டுவதோடு, குறைகளையும் சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனாலும், சிலர் படிக்காமலேயே கருத்துரை சொல்வதில் கில்லாடிகள். அந்த கட்டுரையைப் பற்றி பொத்தாம் பொதுவாக ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்று விமர்சனம் தருகிறார்கள். இன்னும் சிலர் ரைட்டு என்றோ அல்லது சில ஸ்மைலிகளைப் போட்டோ முடித்து விடுவார்கள். இதற்குப் பதில் இவர்கள் தமது கருத்தினை சொல்லாமலே போய் விடுவது நல்லது .

அண்மையில் மறைந்தவர் பட்டாபட்டி ( http://pattapatti.blogspot.in ) என்ற பதிவர் இவற்றையெல்லாம் கண்டு வெறுத்துப் போய் தனது வலைத்தளத்தில் எழுதி வைத்திருந்த வரிகள் இவை.

கீழ்கண்ட பின்னுட்டங்களை, தயவு செய்து.. அன்புகூர்ந்து.... என்னுடைய பதிவில் போட்டுவிட்டு.. பிரச்சனைய சந்திக்கவேண்டாம்..

ஆகா.. சூப்பர்..
வாழ்த்துக்கள்..
அருமை நண்பா..
கலக்குங்க..
எப்படி சார் இப்படி?..
ஹா..ஹா
:-)
:-(
ம்..ம்..
Online...
வடை எனக்கு...
Present..
வடைபோச்சே....

கருத்துரையா? பின்னூட்டமா?

ஒரு வலைப்பதிவில் ஒரு கட்டுரையை வெளிவந்தவுடன் நமது கருத்துக்களை விருப்பு வெறுப்பின்றி சொல்வது கருத்துரைகள். (Comments) அவ்வாறன்றி அந்த கட்டுரையின் ஆசிரியருக்கு உற்சாகம் ஊட்டும் வண்ணம் எழுதுவது பின்னூட்டம் (Feedback). மேலெழுந்த வாரியாக பார்க்கும்போது இரண்டும் ஒன்று போலவே தோன்றும். ஆனால் வலையுலகில் எல்லாவற்றிற்கும் பின்னூட்டம் என்றே சொல்கிறார்கள்.

   
முகமூடிகளும் அனானிகளும்

வலைப்பதிவில் பலபேர் தங்களது உண்மையான பெயரில் எழுதுவதில்லை. இந்த முகமூடிப் பதிவர்கள் (MASKED WRITER) எழுதுவதில் சுய கட்டுப்பாடு எதுவும் இல்லை. வானமே எல்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதுவார்கள். மற்றவர்கள் வலைத்தளம் வந்து இஷ்டத்திற்கு கருத்துரைகளும் தருவார்கள்; சிலர் வம்புக்கு நிற்பார்கள்.  இந்த முகமூடி பதிவர்களிலும் நன்கு சுவாரஸ்யமாக எழுதுபவர்கள் உண்டு. இவர்கள் தரும் புள்ளிவிவரங்கள் சிறப்பாக இருக்கும். சிலர் தரும் பின்னூட்டங்கள் உற்சாகம் தருவதாயும் கருத்துக்கள் நிரம்பியதாகவும் இருக்கும். இவர்கள் என்னதான் சிறப்பாக எழுதினாலும், ஒருநாள் கூட,  நான்தான் அந்த பதிவை எழுதினேன் என்று வெளிப்படையாக, தங்கள் நண்பர்களிடம் கூட சொல்லிக் கொள்ள முடியாது. குந்திதேவி தன்னுடைய மகன் கர்ணனை வெளிப்படையாக , மகன் என்று சொல்லிக் கொள்ள முடியாது போன்ற நிலை. இதனால் என்ன பயன்? எனவே அவர்கள் தங்கள் பெயர் முதலான சுயவிரங்களைத் தந்து விட்டே எழுதலாம்.

அனானிகள் (ANONYMOUS) என்று ஒரு வகையினர். GOOGLE இல் கணக்கு இல்லாத இவர்களால், கருத்துரைகள் மட்டுமே தர இயலும். இவர்கள் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட முகமூடி பதிவர்கள் போன்றே இருக்கும். உற்சாகமான பின்னூட்டங்களையும், கருத்துரையின் முடிவில் பெயர் தருபவர்களும் உண்டு.

இன்னும் சிலர். இவர்களுக்கு GOOGLE இல் கணக்கு இருக்கும். BLOGGER என்று ஒரு பெயரை வைத்துக் கொண்டு உலாவுவார்கள். அவர்களைப் பற்றி அறிந்து கொள்ள,  தன்விவரங்கள் (PROFILE) போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது. ABOUT ME என்று வெறுமனே இருக்கும். இந்த போலி ப்ளாக்கர்கள் சிலர் தேவையற்ற கருத்துரைகளைத் தந்து நம்முடன்  மல்லு கட்டுவார்கள். இவர்களோடு வாதம் செய்வது என்பது காற்றோடு சண்டை போடுவதற்கு சமானம்.

ஜாதி, மதம், அரசியல், ஆன்மீகம் அல்லது இலங்கைத் தமிழர் பிரச்சினைகள் என்று எழுத ஆரம்பித்தால் போதும், இந்த முகமூடிகள், அனானிகள், போலிகள் வந்து குதித்து விடுவார்கள்.

அதிலும் சிலர் கழிப்பறை கிறுக்கல்கள் போன்று எழுதி தங்கள் அரிப்பை தீர்த்துக் கொள்வார்கள்.

மட்டுறுத்தல் (COMMENTS MODERATION):

எனவே பலரும் கருத்துரை பெட்டியில் (COMMENTS BOX) , முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக SETTINGS  வழியே மட்டுறுத்தல் (COMMENTS MODERATION) என்ற ஒன்றை அமைத்துக் கொள்கின்றனர். எனவே மட்டுறுத்தல்  என்பது சில வேண்டாத தொல்லைகளை தவிர்க்க ஒரு வகையில் துணையாக நிற்கிறது. அதேசமயம் இந்த முறையைக் கையாளுவதால் நாம் நமக்கு வரும் கருத்துரைகளை வெளியிடுவதற்கு என்று நேரம் ஒதுக்க வேண்டி உள்ளது. அல்லது அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டர் முன்னே உட்கார வேண்டி உள்ளது. வெளியூர் சென்று விட்டால் இவைகள் அப்படியே நிறைந்து விடுகின்றன.

WORD PRESS  இல் கருத்துரை எழுதுவது என்பதும் கிட்டத்தட்ட ஒருவகை COMMENTS MODERATION வகைதாம். மேலும் இதில் நமது மின்னஞ்சல், நமது பெயர், நமது வலைத்தளத்தின் பெயர் என்று எல்லாவற்றையும் கேட்கிறார்கள். அப்புறம் "Your email address will not be published"  என்றும் சொல்லுகிறார்கள். அவ்வளவு எளிதில் யாருக்கும் நம்பிக்கை வருவதில்லை. இதனாலேயே WORD PRESS  இல் எழுதும் நண்பர்களுக்கு அதிகம் பின்னூட்டங்கள் வருவதில்லை.

வலைப்பதிவில் அனைத்தையும் படிப்பதற்கே நேரம் இல்லாத போது , இவ்வளவு தொல்லைகளையும் தாங்கி வாசகர் அல்லது வலைப்பதிவர் பின்னூட்டம் எழுத பொறுமைதான் வேண்டும். கருத்துரை பெட்டியில் (Comment Box) சிலர் ( தான் ஒரு உஷார் பேர்வழி என்பது போல) ஏதேதோ தடைகள் வைக்கிறார்கள். அதிலும் சிலர் வைத்துள்ள Word verification மற்றும் நீங்கள் ரோபோட்டா என்ற கேள்வி போன்றவை, பெரிய தொல்லை.
அந்த பதிவுகள் பக்கம் கருத்துரை போடும் அளவுக்கு பலருக்கும் பொறுமை கிடையாது. எனவே நிறையபேர் அந்த பதிவிலிருந்து வேறு பதிவிற்கு தாவல் (Skip) செய்துவிடுகிறார்கள்.
COMMENTS MODERATION இல்லாத விடத்து, நமது பதிவினில் வெளியாகிவிட்ட சில வேண்டாத கருத்துரைகளை துணிந்து நீக்குதல் தவறில்லை.

இந்த தொல்லைகளை எல்லாம் தவிர்க்க, கூகிள் நிறுவனம், வலைப்பதிவினில் கருத்துரைப் பெட்டியுடன் (COMMENTS BOX), பேஸ்புக்கில் (FACEBOOK) உள்ளது போல் லைக் (LIKE ) பட்டனையும் வைத்தால் சிறப்பாக இருக்கும். குறிப்பாக தமிழ்மணம் போன்ற திரட்டிகள் இதனை வைத்து வலைப்பதிவர்களையும், வாசகர்களையும் ஊக்குவிக்கலாம்.
                                                                 
சிறப்புச் செய்தி:

மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்கள் எல்லோருடைய வலைத் தளத்திற்கும் சென்று ஊக்கம் அளிப்பவர். தனது வலைத்தளத்திற்கு வந்த, பின்னூட்டங்கள் அனைத்தையும் தொகுத்து பன்னிரண்டு தொடராக வெளியிட்டு ஆவணப் படுத்தி உள்ளார். துவக்க பதிவு இது.

ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - பகுதி-1 http://gopu1949.blogspot.in/2015/03/1.html


                                  ( ALL PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )