Wednesday 30 November 2016

புதுக்கோட்டை – புத்தகத் திருவிழா 2016




புதுக்கோட்டைக்கு எத்தனையோ முறை சென்று வந்து இருக்கிறேன்; பணியில் இருந்தபோது, டெபுடேஷன் பணிக்காக, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஒருமாதம் சென்று வந்தும் இருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து புதுக்கோட்டையில் பெரிதாக புத்தகத் திருவிழா ஏதும் நடந்ததாக நினைவில் இல்லை. இத்தனைக்கும் இங்கு நூல்வாசிக்கும் ஆர்வலர்கள் அதிகம் என்பதனை, இங்கு சொல்ல வேண்டியதில்லை. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பாக வழக்கம் போல அவர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை மட்டும் அடிக்கடி நடைபெறும். ஆண்டுதோறும் சென்னையிலும் நெய்வேலியிலும் நடக்கும் பிரமாண்டமான புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டையிலும் நடத்த முயற்சி செய்யுங்கள் என்று, ஆசிரியர் முத்துநிலவன் அய்யாவிடம் நான் சொல்லியதாக நினைவு. இப்போது புதுக்கோட்டை புத்தக வாசிப்பு ஆர்வலர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம், சென்ற சனிக்கிழமை (26.11.16) முதல் 04.12.16 முடிய, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் புத்தகத் திருவிழா, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் விழாக்குழு சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் வரச் சொல்லி குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தார்.

சென்று வந்தேன்:

எனவே நேற்று (29.11.16 – செவ்வாய்) மாலை திருச்சியிலிருந்து இந்த புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்தேன். பஸ்சில் செல்லும்போது, வறட்சியான காட்சிகளையே (இந்த வருட மழை பொய்த்து விட்டதால்) பார்க்க முடிந்தது. இரவு திரும்பி வரும்போது நல்ல குளிர். நேற்று அங்கே எடுத்த படங்கள் இவை (கீழே)

(படம் மேலே) புதுக்கோட்டை நகர்மன்ற நுழைவு வாயிலில் அழைப்பு. 

(படம் மேலே) நேற்றைய நிகழ்ச்சிக்கான ப்ளக்ஸ் பேனர்.
 
(படம் மேலே) பங்கேற்ற ஸ்டால்கள் விவரம்

(படம் மேலே) புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்கள் பற்றிய குறிப்புரைகள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர்கள்.

(படம் மேலே) புதுக்கோட்டை நகர்மன்றம் நூறாண்டு பாரம்பரிய பெருமை உடையது. இந்த மன்றத்தையே முழுமையாக மறைத்த வண்ணம் ப்ளக்ஸ் பேனர்கள். இதனை தவிர்த்து இருக்கலாம்.

(படம் மேலே) ஒரு புத்தக ஸ்டாலில் எடுத்த படம்

புதுக்கோட்டைக்கு தனி ஸ்டால்:

புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களின் நூல்களுக்கென்று தனியாக ஒரு ஸ்டால் வைத்து இருந்தார்கள். நான் போனபோது, தம்பி மாணவக்கவிஞர் நடராஜ் என்பவர் ஸ்டால் பொறுப்பாளராக இருந்தார்.

(படங்கள் மேலே) மாணவக்கவிஞர் நடராஜ்

(படம் மேலே) புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்ததன் அடையாளமாக நானும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

(படம் மேலே) அப்போது அங்கே வந்த கவிஞர் சோலச்சி மற்றும் எழுத்தாளர் அண்டனூர் சுரா. இருவரும் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்: வலைப்பதிவாளர்களும் கூட.

மாலை நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும் என்பதால் உடனே திரும்பி விட்டேன். 

வாங்கிய நூல்கள்:

’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இராது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நூல்கள் வாசிக்கும் வழக்கம் உள்ள, என்னைப் போன்ற புத்தக ஆர்வலர்களுக்கு, புத்தகம் வாங்காமல், படிக்காமல் இருக்க இயலாது. அந்த வகையில் எங்கள் வீட்டு நூலகத்திற்கு என்று வாங்கிய நூல்கள் இவை.

1.வீடில்லாப் புத்தகங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து)
2.மகாத்மா காந்தி கொலை வழக்கு – என்.சொக்கன் (கிழக்கு பதிப்பகம்)
3.சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் (அகரம்)
4.சாதிகளின் உடலரசியல் – உதயசங்கர் (நூல் வளம்)
5.என்கதை - சார்லி சாப்ளின் – தமிழில்: யூமா வாசுகி (NCBH)
6.சாதியும் நானும் – பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன் (காலச்சுவடு)
7.எது நிற்கும்? – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு)
8.சுவிசேஷங்களின் சுருக்கம் – லியோ டால்ஸ்டாய் – தமிழில்: வழிப்போக்கன் (பாரதி புத்தகாலயம்)
9.சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை – வெ.பெருமாள் சாமி (பாரதி புத்தகாலயம்)
10.சாதி, வர்க்கம், மரபணு – ப.கு.ராஜன் (பாரதி புத்தகாலயம்)

11.ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை – அண்டனூர் சுரா (இருவாட்சி)


 

42 comments:

  1. முடிந்தால் சனி அல்லது ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டைக்குச் சென்று வர எண்ணியுள்ளேன் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கு நன்றி. புத்தகத் திருவிழாவின் கடைசி இரண்டு நாளும் கூட்டம் அதிகம் இருக்கும். ஆனால் புதுக்கோட்டை வலைப்பதிவு நண்பர்களில் பலரைச் சந்திக்கலாம்.

      Delete
  2. படங்கள் அருமை... அடுத்த மாதம் புதுக்கோட்டையில் சந்திப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  3. புத்தகத் திருவிழாவில் கலந்துகொண்ட உணர்வை தங்கள் பதிவும் படங்களும் தந்தன. அருமை. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
    த ம 2

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எஸ்.பி.எஸ் அவர்களுக்கு நன்றி. தினத்தந்தி ஸ்டாலில் நீங்கள் எழுதிய 'நம்ப முடியாத ரகசியங்லள்' பார்த்தேன். ஏற்கனவெ வாங்கி விட்டேன்.

      Delete
  4. ஆஹா....நன்றி அய்யா...உங்கள் வருகை எப்போதும் எங்கள் ஆனந்தம்..

    ReplyDelete
  5. உங்கள் புத்தகத் திருவிழாப்பதிவினை
    எதிர்பார்த்திருந்தேன்
    அற்புதமான படங்களுடன் பகிர்ந்தது அருமை
    புத்தகப் பட்டியலைப் பார்த்தேன்
    தொடர்ந்துவிமர்சனப்பதிவுகளை எதிர்பார்த்திருக்கிறேன்
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
    Replies
    1. அன்புக் கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் பாராட்டினுக்கு நன்றி. நூல் விமர்சனம் முடிந்த வரை செய்கிறேன் அய்யா.

      Delete

  6. உங்கள் தளத்திற்கு வந்தால் அந்த நிகழ்வை நேரில் பார்க்கிற மாதிரி ஒரு உணர்வுதான் எப்போதும் எனக்கு ஏற்படுகிறது அழகிய படங்களுடன் எளிமையாக சொல்லி செல்லும் உங்கள் பாங்கு பாராட்டுகுரியது

    ReplyDelete
    Replies
    1. மதுரைத் தமிழன் அவர்களின் அன்பான பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  7. இந்த சண்டே திருச்சியிலிருந்து புதுகைக்கு புத்தகத்திருவிழாவிற்கு வரப்போறாம் குடும்பத்தோட....

    சிவபார்கவி.. துரை. தியாகராஜ்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள். சென்று வாருங்கள்.

      Delete
  8. புதுமை மண்ணின் மைந்தர்கள் குறிப்புகளில் என் நண்பர் அறந்தை நாராயணனின் புகைப்படம் பார்த்த பொழுது மனம் கனத்தது. எழுத்தாளர் அகிலனின் புகைப்படம் பல பழைய நினைவுகளைக் கிளர்த்தியது.

    வாசிப்பதற்காகத் தானே புத்தகங்களை வாங்குகிறோம்? வாசிப்பதைப் பிறரிடம் பகிர்வதற்காகத்தானே வாசிக்கிறோம்?.. தாங்கள் வாங்கிய புத்தகப் பட்டியலைப் பார்த்தேன். பகிர்ந்து கொள்ள நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது. நண்பர் ரமணி குறிப்பிட்டிருப்பதைப் போல தங்கள் வாசிப்பு அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    ReplyDelete
  9. புதுகை புதுமையாகி விட்டது. தட்டச்சு பிழைக்கு வருந்துகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான நீண்ட கருத்துரைக்கு நன்றி. இறைவன் சித்தம், எனது வாசிப்பு அனுபவங்களை முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறேன் அய்யா.

      Delete
  10. நேர்முக வர்ணனை. அருமை. தங்களின் வாசிப்பு ஆர்வத்தை பதிவில் நன்கு காண முடிந்தது.

    ReplyDelete
  11. படம் வரைந்து பாகம் குறிக்க என்பது போல பதிவு தெளிவாக உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வித்தியாசமான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. புத்தகப் பிரியருக்கு நல்ல வேட்டைதான்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.

      Delete
  13. அதெல்லாம் இருக்கட்டும். இந்தமாதிரி புத்தகத் திருவிழாவில் எத்தனை டிஸ்கவுண்ட் கொடுக்கிறார்கள்? அதைச் சொல்லாமல் விட்டுவிட்டீர்களே...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் வருகைக்கும் வினாவிற்கும் நன்றி. பொதுவாகவே புத்தகக் கண்காட்சி அல்லது திருவிழா என்றாலே 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு. இந்த புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு அனைத்து புத்தகங்களுக்கும் 10% மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு 20% சிறப்புத் தள்ளுபடி உண்டு என்று துண்டு பிரசுரம் மூலம் தெரிந்து கொண்டேன். ( தமிழைப் பொறுத்தவரை புத்தக பதிப்புத் தொழில் என்பது லாபகரமானதாக இல்லை. எனவே நான் எப்போதும், எங்கேயும் புத்தகம் வாங்கினாலும் தள்ளுபடி எதனையும் எதிர் பார்ப்பதில்லை. அவர்களாகவே கொடுத்தால் மறுப்பதில்லை. இதன் காரணமாகவே இந்த பதிவினில் புத்தகங்களுக்கான சிறப்புத் தள்ளுபடி பற்றி, இயல்பாகவே எழுதாமல் விட்டுப் போயிற்று என்று நினைக்கிறேன். இனிமேல் கவனத்தில் வைப்பேன். சுட்டிக் காட்டிய தங்களுக்கு நன்றி )

      Delete
    2. 'நன்றி சார். எப்போதும், இந்தத் தள்ளுபடி, இன்னும் புத்தகங்களை வாங்கத் தூண்டுகிறது. (என்ன, புத்தகப் பதிப்புத் தொழில் லாபகரமாக இல்லைனு சொல்லிட்டீங்க.. சமயத்துல சில தலைப்புப் புத்தகங்களைப் படிக்கும்போது, இதையெல்லாம் ஏன் பதிப்பிக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். உதாரணமாக, நேரு குடும்ப வரலாறு, விகடன் பதிப்பகம், தமிழில் பொன்னுச்சாமி அவர்கள். எப்படி மொழிபெயர்க்கக்கூடாது என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு உதாரணம்) மற்றபடி புத்தகங்கள்தான் சிறந்த நண்பன் என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை.

      Delete
  14. வாங்கியுள்ள புத்தகங்களைப் படித்து,சொல்ல நினைத்ததை சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன் :)

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் பின்னூட்டத்திற்கு நன்றி. பெரும்பாலும் வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் உடனே படித்து விடுவேன். ஆனால் இப்போதைய இண்டர்நெட் வாசிக்கும் சூழல் காரணமாக புத்தகம் வாசிப்பில் தாமதம்தான். எனவே எனது நூல் விமர்சனங்களும் அவ்வப்போது வரும்.

      Delete
  15. படங்களும் விளக்கங்களும் நாங்களே புத்தகத் திருவிழாவிற்கு சென்றது போல் போன்ற உணர்வைத் தந்துள்ளன. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  16. கடந்த வருடம் பதிவர் விழாவை நடத்திய புதுக்கோட்டை, இந்த வருடம் புத்தகத் திருவிழாவை நடத்துவது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது ஒரு வருடாந்திர நிகழ்வாகத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும். ஆனால், வாசலில் கூட்டம் தென்படவில்லையே!படங்களுடன் பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பரே நலமா? நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வந்த நண்பர் ஏகாந்தன் அவர்களுக்கு நன்றி. கூட்டத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காகவே, அன்று மாலை 5 மணிக்கே புதுக்கோட்டை வந்து விட்டேன். மேலும் அப்போதுதான் மாணவ, மாணவியர் பலர் பள்ளி முடிந்து நேரே புத்தகத் திருவிழா நடைபெறும் நகர்மன்றத்திற்கு வந்து கொண்டு இருந்தனர். எனது புகைப்படத்தில், வாசலில் கூட்டம் இல்லாததற்கு இதுவே காரணம். மற்றபடி மற்ற பதிவர்களின் பதிவுகளையும், ஃபேஸ்புக் தகவல்களையும் பார்த்தால் எவ்வளவு கூட்டம் என்று தெரிந்த் கொள்ளலாம்.

      Delete
  17. வழக்கமான தங்கள் பாணியில், இதற்காகவே நீண்ட பயணம் மேற்கொண்டு, புத்தகத் திருவிழாவுக்குப்போய், அழகிய புகைப்படங்களுடன், அருமையான செய்திகளைக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    மேலும் தங்கள் வீட்டுக்குள் இப்போது புதிய புதையலாக பதினோரு பொக்கிஷங்கள் வந்து சேர்ந்துள்ளன. :) :) :) :) :) :) :) :) :) :) :)

    ஆனந்தமளிக்கும் பகிர்வுக்கு என் பாராட்டுகள், வாழ்த்துகள் + நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  18. சென்னையில் நடந்த இந்தத் திருவிழாவுக்கு நான் செல்லவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் Blog ஸ்ரீராம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  19. நல்ல பகிர்வு. தமிழகத்தில் இச்சமயத்தில் இருந்திருந்தால் சென்றிருப்பேன். உங்கள் பதிவு மூலம் புத்தகத் திருவிழா கண்ட உணர்வு. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  20. அருமை படங்கள் மூலம் ஒரு அறிவிப்பு மடல் நன்றி ஐயா.

    ReplyDelete
  21. சிறந்த பகிர்வு
    அருமையான பதிவு

    ReplyDelete
  22. அழகான படங்களுடன் விவரணங்களும் அருமை ஐயா

    ReplyDelete