Monday 13 July 2015

கவிஞர் அ. மருதகாசி பாடல்கள்




நம்மில் பலருக்கு பழைய சினிமா பாடல்கள் என்றாலே கவிஞர் கண்ணதாசன்தான் நினைவுக்கு வருவார். ஏதாவது நல்ல தத்துவ சினிமாப் பாடல் என்றால் அவர் எழுதியதாகத் தான் இருக்கும் என்று நினைப்பார்கள். வாலி எழுதிய பாடலையே கண்ணதாசன் எழுதியது என்று நினைத்ததும் உண்டு. ஆனால் எம்.ஜி.ஆர், சிவாஜி, எம்.ஆர்.ராதா போன்ற பிரபல நடிகர்களின் படங்களுக்கு கருத்தமைந்த இனிமையான பாடல்கள் எழுதிய கவிஞர் ஒருவர் உண்டு. அவர் திரைக்கவி திலகம் என்று பெயர் பெற்றவர். கவிஞர் . மருதகாசி அவர்கள். இவர் எழுதிய பாடல்கள் பலவற்றையும் கண்ணதாசன் எழுதியது என்று மாற்றிச் சொல்பவர்களும் உண்டு

பழைய பிரிக்கப்படாத (ஒன்றுபட்ட) திருச்சி மாவட்டத்தில்  மேலக்குடிகாடு என்ற கிராமத்தில்  அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள் என்ற விவசாய தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் நமது கவிஞர் . மருதகாசி அவர்கள்.   நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்களில் இவரதுதிரைக்கவி திலகம் கவிஞர் . மருதகாசி  பாடல்கள்என்ற தொகுப்பும் ஒன்று. இந்த நூலை நாம் இணையம் வழியே தரவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். சுட்டி கீழே உள்ளது.

வாழ்வளித்த எம்ஜிஆர்:

தமிழ் சினிமா உலகில் பாட்டுக்கு தகுந்த மெட்டு, மெட்டுக்கு தகுந்த பாட்டு என்று இரண்டு வகையாக எழுதுவார்கள். இதில் மெட்டுக்கு தகுந்த பாட்டு எழுதுவது என்பது சற்று சிரமமான விஷயம்தான். இதில் வல்லவர் நமது கவிஞர். சேலம் மாடர்ன் தியேட்டர்ஸின் ஆஸ்தான கவிஞராக இருந்த கவிஞருக்கு, சினிமா உலகில் இருக்கும் எல்லோருக்கும் உண்டாகும் ஆசை வந்தது. சொந்தமாக படம் ஒன்றை எடுத்தார். கையைச் சுட்டுக் கொண்டார். கடனாளி ஆனார். இதுகுறித்து மருதகாசியின் தம்பி பேராசிரியர் .முத்தையன் கூறியதாவது:- 

“1950-ம் ஆண்டில் என் அண்ணன்மந்திரிகுமாரிக்கு பாட்டு எழுதியதில் இருந்தே, எம்.ஜி.ஆருடன் நட்பு கொண்டிருந்தார்.  அந்தக் காலக் கட்டங்களில் எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.

கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.  கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்

இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை. ”
( நன்றி: http://sudarcinema.net/7674 )

மறக்க முடியாத படங்கள்:


தமிழ் சினிமாவில் இன்றும் ஐம்பதுஅறுபதுகளில் வெளியான பழைய படங்களுக்கும் , பழைய பாடல்களுக்கும் என்று மவுசு உண்டு. அந்த வகையில் பல படங்களுக்கு கவிஞர் .மருதகாசி அவர்கள் பாடல்கள் இயற்றி இருப்பதைக் காணலாம்.

தூக்கு தூக்கி, மக்களைப் பெற்ற மகராசி,  அறிவாளி, விவசாயி,  தை பிறந்தால் வழி பிறக்கும்,  சுகம் எங்கே,  வண்ணக்கிளி, சபாஷ் மாப்பிள்ளே, பங்காளிகள்,  அல்லி பெற்ற பிள்ளை,  சாரங்கதாரா,  பாவை விளக்கு,  மந்திரி குமாரி,  குமுதம்,  பெற்ற மகனை விற்ற அன்னை,  கைதி கண்ணாயிரம்,  பாகப் பிரிவினை, நினைத்ததை முடிப்பவன்,  பாசவலை,  நீலமலைத் திருடன், யார் பையன்,  சாரங்கதாரா, உத்தம புத்திரன், மருதநாட்டு வீரன்    என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

மறக்க முடியாத பாடல்கள்:

கீழே மறக்க முடியாத, அந்தக் கால இலங்கை வானொலியில் நான் கேட்ட கவிஞர் மருதகாசி அவர்களது சில பாடல்களின் முதல் வரிகளை மட்டும் தந்துள்ளேன். அடைப்புக் குறிக்குள் படங்களின் பெயர்கள்.

ஒற்றுமையாய் வாழ்வதாலே உண்டு நன்மையே (பாகப்பிரிவினை)                     
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி (மக்களைப் பெற்ற
மகராசி)
விவசாயி விவசாயி (விவசாயி)                                                                
தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம் (தை பிறந்தால் வழி பிறக்கும்)                                                                                                                                   
சின்ன பாப்பா எங்க சின்ன பாப்பா (வண்ணக்கிளி)
சின்ன அரும்பு மலரும் (பங்காளிகள்)
எஜமான் பெற்ற செல்வமே (அல்லி பெற்ற பிள்ளை)
மாமா மாமா மாமா (குமுதம்)
வசந்த முல்லை போலே (சாரங்கதாரா)
ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே (பாவை விளக்கு)
வண்ணத் தமிழ் பெண்ணொருத்தி (பாவை விளக்கு)
வாராய் நீவாராய் போகுமிடம் வெகு தூரமில்லை  (மந்திரி குமாரி)
வண்டி உருண்டோட அச்சாணி தேவை (வண்ணக்கிளி)
தென்றல் உறங்கிய போதும் ( பெற்ற மகனை விற்ற அன்னை)
என்னை விட்டு ஓடிப்போக முடியுமா (குமுதம்)
எத்தனை எத்தனை இன்பமடா (யாருக்குச் சொந்தம்)
காட்டு மல்லி பூத்திருக்கமாட்டுக்கார வேலா ( வண்ணக்கிளி)
கொஞ்சி கொஞ்சிப் பேசி  மதி மயக்கும் (கைதி கண்ணாயிரம்)
கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும். (நினைத்ததை முடிப்பவன்)
இதுதான் உலகமடா மனிதா ( பாசவலை)
சமரசம் உலாவும் இடமே (ரம்பையின் காதல்)
ஆத்திலே தண்ணி வர ( வண்ணக்கிளி)
அடிக்கிற கைதான்  அணைக்கும் ( வண்ணக்கிளி)
இன்பம் எங்கே இன்பம் எங்கே (மனமுள்ள மறுதாரம்)
சத்தியமே லட்சியமாய் கொள்ளடா ( நீலமலைத் திருடன்)

நூலைப் பற்றி:

இவரது திரைக்கவி திலகம் கவிஞர் . மருதகாசி  பாடல்கள் என்ற தொகுப்பு நூலை நாம் இணையம் வழியே தரவிறக்கம் (DOWNLOAD) செய்து கொள்ளலாம். சுட்டி இங்கே:

தமிழ் இணையக் கல்விக் கழகம் > நூலகம் > நூல்கள் > நாட்டுடமை நூல்கள் >  நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் (உருப்பட வடிவில்) >  கவிஞர் அ.மருதகாசி    ( < இங்கே க்ளிக் செய்யவும் )                                                                                                                                                                                                                                            
                 
                            (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
  


31 comments:

  1. கவிஞர் மருதகாசி பற்றி அறியாத தகவல்கள் பல அறிந்தேன் ஐயா
    அவரின் பல பாடல்களைக் கேட்டு ரசித்தது உண்டு
    ஆனால் அவரது வாழ்வியல் நிகழ்வுகளைத் தங்களால்தான் அறிந்தேன்
    நன்றிஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஆசிரியர் கரந்தைஜெயகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.! இன்னும் பல சுவையான செய்திகள் இந்த தொகுப்பு நூலில் உண்டு. வலைப்பதிவர் என்ற முறையிலும், ஆசிரியர் என்ற முறையிலும் உங்களுக்கு இந்நூல் பயன் தரும்.

      Delete
  2. அவர் பெயர் கேட்டதுமே, “மணப்பாறை மாடு கட்டி” பாடல் தான் எனக்கும் நினைவுக்கு வந்தது...... நல்ல கவிஞர். படம் எடுக்க முயன்று பலரும் கையைச் சுட்டுக் கொள்வது வழக்கமாகி விட்டது.....

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு உடனே அவருடைய பெயரும் அந்த பாடலும் நினைவுக்கு வந்தன. ஆனால் ரொம்பநாளாக , நான் இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியது என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். எனது வலைத்தளத்திலும் எழுதி விட்டேன். அப்புறம் வலைப்பதிவு நண்பர்கள்தான் எனது தவறைச் சுட்டிக் காட்டி திருத்தினார்கள். சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. பல இடங்களில் இவரின் பாடல் வரிகளை பயன்படுத்தி உள்ளேன்... ஒவ்வொரு பாடலின் முழு வரிகளும் மிகவும் கருத்தாழம் கொண்டவை... இணைப்பிற்கு மிக்க நன்றி ஐயா... 316 பக்கங்கள் கொண்ட pdf file-யை தரவிறக்கம் செய்து கொண்டேன்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  4. கவிஞர் மருதகாசி அவர்களின் பாடல்களிலேயே எனக்குப் பிடித்தது ‘நீலமலைத் திருடன்’ திரிரைப்படத்தில் வரும் ‘சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா’ என்ற பாடல் தான். இதை கேட்பவர் எவருக்கும் ஒரு உற்சாகம் பொங்கும் என்பது என் கருத்து. மறக்கமுடியாத கவிஞரை அவரை தெரியாதவர்கள் அறிந்துகொள்ள உதவியமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. பழைய காலத்தில் சிலர் சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவிலேயே இழந்திருக்கின்றனர் . அதில் இவரும் ஒருவர் மாதிரித் தெரிகிறது

    ReplyDelete
    Replies
    1. திரைவுலகில், ” அண்ணே சொந்தமா ஒரு படம் எடுங்க. உங்க திறமைக்கு நீங்க எங்கோ போய்விடுவீங்க ” என்று உசுப்பி விடுபவர்கள் அதிகம். சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  6. அனைத்து பாடல்களும் அற்புதமானவை கவிஞரைப் பற்றிய கூடுதல் தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. இன்றும் முரசு தொலைக்காட்சியில் பழைய பாடல்கள் ஒளிபரப்பாகின்றன. கேட்டு மகிழலாம்

    ReplyDelete
  8. வணக்கம் அய்யா,
    கவிஞரைப் பற்றிய கூடுதல் செய்திகள் அறிந்தேன்,
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. மருதகாசி அவர்களின் பாடல்களில் நாட்டுப்புறத் தாக்கம் மிகுந்திருக்கும்! கேட்டு ரசித்திருக்கிறேன்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  10. //எஜமான் பெற்ற செல்வமே, என் சின்ன எஜமானே பசும்பொன்னே என் கண்ணே அழாதே அழாதே//
    ஒரு குதிரை தன் எஜமான் இறந்துவிட, தொட்டிலில் அழும் குழந்தையை தாலாட்டி, வாயால் கயிற்றை இழுத்துக் கொண்டே தன் எண்ணங்களை பாட்டாக வெளிப்படுத்தும். கே.வி.மகாதேவன் இசையில் ஜி.ராமநாதன் உருக்கமாக பாடும் நல்ல பாட்டு.
    கேளுங்கள் : youtube.com/watch?v=kxOkkyxSBrl

    ReplyDelete
    Replies
    1. நான் சின்ன பையனாக இருந்தபோது எங்கள் வீட்டுக்கு அருகில் (அப்போது டவுனுக்குள் குடியிருந்தோம்; இப்போது புறநகர்) இருந்த ஆசாரி ஒருவர் தனது தனது தச்சு வேலைகளை முடித்த பின்னர், இரவு தூங்கப் போகும் போது இந்த பாடலை அடிக்கடி பாடுவார். அப்புறம் நம்ப மறக்க முடியாத இலங்கை வானொலியில் முன்பு அடிக்கடி கேட்டதுதான். நீங்கள் கொடுத்த சுட்டியில் “ இந்த வீடியோ கிடைக்கவில்லை ” என்று தகவல் வருகிறது. அனானிமஸ் (1) அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  11. ஒரு டைம் ட்ராவல் செய்த திருப்தியைத் தந்தது பதிவு
    வாழ்த்துக்கள்
    அய்யா
    தம +

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  12. மருதகாசியைப் பற்றிய ஒரு விரிவான அலசல். அவரது பாடலுக்குத் தனி ரசனை உண்டு. அவ்வாறு விரும்பிக்கேட்பவர்கள் பலர். நல்ல ஒரு கலைஞனைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  13. மருதகாசியைப் பற்றிய ஒரு விரிவான வரலாற்றை அறிந்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. பல அருமையான பாடல்களை எழுதியவர். அவரைப் பற்றி படிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு நன்றி

      Delete
  15. பட்டுக் கோட்டையார் வகையறா கவிஞர்!!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  16. சகோதரர் இளங்கோ, வணக்கம். நான் அனானிமஸ் இல்லை. சகாதேவன் பெயரில் வலைப்பதிவு எழூதுபவன் தான். என் கடவுச்சொல் எப்படியோ மாறி என்னால் இப்போ தமிழ்மணத்தில் நுழையமுடிவில்லை. முகநூலில் எழுதுகிறேன். வலைக்கு வர முயல்கிறேன். ஜி.ராமநாதன் எனக்கு பிடித்த இசை அமைப்பாளர். அவர் பாடிய இதுவும், ஐந்தெழுத்தான் பற்ற ஆறெழுத்தண்னலை.." நாட்டியதாரா - தெலுங்கு டப்பிங் படத்தின் டைட்டில் பாட்டும் ரொம்ப பிடிகும்.
    யு ட்யூபிலிருந்து என் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன் பாருங்கள்

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் சகாதேவன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் FACEBOOK முகவரியைக் கொடுத்தால் நீங்கள் குறிப்பிட்ட பாடலை ரசிக்க இயலும்.

      Delete