Tuesday 19 August 2014

பில்லி சூன்யம் ஏவல்



சொந்தக்காரர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லை. பார்க்கப் போயிருந்தேன் ஆள் இளைத்துப் போயிருந்தார். என்ன பண்ணுகிறது என்று கேட்டபோது , தொழில் போட்டியில் எனக்கு செய்வினை செய்து வைத்து விட்டார்கள் என்றார்.

நான் பணியில் இருந்த சமயம், என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவர் நீண்ட லீவில் இருந்தார். அவர் ஒரு முஸ்லிம். அவரைப் பார்க்க சென்றபோது , அவர் “ பக்கத்து வீட்டுக்காரனுக்கும் எங்களுக்கும் வீட்டு சந்து பிரச்சினை. கேஸ் நடந்து கொண்டு இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் எங்களுக்கு செய்வினை செய்து வைத்து விட்டான். அதில் என் மனைவிக்கு உடம்பு நலமில்லாமல் போய்விட்டது. பையன் வெளிநாட்டில் இருக்கிறான். துணைக்கு யாரும் இல்லாததால் நான் லீவு போடும்படி ஆகி விட்டது.என்றார். இத்தனைக்கும் நம்ம பாயோட பக்கத்து வீட்டுக்காரரும் ஒரு முஸ்லிம். கொஞ்சநாளில் நமது நண்பர் அந்த வீட்டை விற்று விட்டு வேறு இடம் சென்றார்.வேறு இடம் போனதும் அந்த அம்மாள் குணமாகி விட்டார்.

மந்திரவாதிகள்:

எனக்கு என்னோட எதிரிகள் செய்வினை செய்து வைத்து விட்டார்கள். அதுதான் இபபடி ஆகிவிட்டது” -  இதுபோல் செய்வினை,பில்லி சூன்யம் என்று நிறைய பேர் புலம்புவதை நம்மில் பலபேர் கேட்டு இருக்கலாம். அதிலும் ஒரு கால், ஒரு கை ஒருவருக்கு சரியாக இயங்கா விட்டால் (பக்கவாதம்) அதற்கு காரணம் செய்வினை என்றே நம்புகிறார்கள். பில்லி சூன்யம் ஏவல் என்றால் என்ன? தன்னுடைய எதிரிகளை அல்லது தனக்கு வேண்டாதவர்களை நேருக்கு நேர் எதிர்க்க முடியாதவர்கள் சிறு தெய்வங்கள் அல்லது துர் தேவதைகள் மூலம் அவர்களுக்கு கெடுதல் செய்தல் அல்லது அவர்களை அழித்தல். இதற்கு மாந்திரீகம் தெரிந்த மந்திரவாதி ஒருவன் இடையில் இருந்து காரியம் செய்வான். காசையும் பிடுங்குவான். செய்வினையை எடுப்பதற்கும் மந்திரவாதிகளை நாடுவார்கள். இதுமாதிரியான காரியங்களுக்கு மலையாள மந்திரவாதிகளுக்கு மவுசு அதிகம். இதற்கு எதிராளியின் தலை முடி. காலடி மண், உபயோகப் படுத்தும் எதேனும் ஒரு பொருள் அல்லது எதிராளியின் புகைப்படம் கேட்பார்கள் நடு ராத்திரியில் அல்லது அதிகாலை வேளைகளில் முச்சந்தியில் அல்லது நாற்சந்தியில் கறுப்புக் கயிறு, முட்டை, மிளகாய் போன்றவற்றை மந்திரித்து வைத்து விடுவார்கள். நான் இவறறை  அடிக்கடி அதிகாலையில் ஆற்றுக்கு போகும் வழியில் கண்டதுண்டு. அவற்றை பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. (அப்போது மந்திரித்த தாயத்து, கறுப்புக் கயிறு, தகடு ஏதேனும் ஒன்றை எதிராளி இருக்கும் இடத்தில் அவனுக்குத் தெரியாமல் வைத்து விடுவார்கள்.)

இதில் வேடிக்கை என்னவென்றால், ஊர்ப் பெரிய மனிதர்கள், தன்னை பெரிய பலசாலியாக காட்டிக் கொள்பவர்கள் என்று பெரும்பாலானோர் பயத்தின் காரணமாக கழுத்து ,கைகள், இடுப்பு ஆகியவற்றில் மாந்திரீக கயிறுகள், தாயத்துகள் கட்டிக் கொள்வதைக் காணலாம். ஆக ஒரு பெரிய முரட்டு ஆசாமியை மடக்க ஒரு வதந்தியே போதும்.

ஒருநாள் இரவு:

நாங்கள் திருச்சி  டவுனில் (சுமார் 30 வருடங்களுக்கு முன்னர்) குடியிருக்கும்போது எங்கள் பகுதியில் இருக்கும் ஒரு பையனுக்கு பேய் பிடித்து விட்டதாகச் சொன்னார்கள். எப்படி பேய் பிடித்தது என்றால், முருகன் டாக்கீசில்  இரவு சினிமா பார்த்து விட்டு காந்தி பூங்கா வழியாக வந்து இருக்கிறான். அப்போதெல்லாம் அந்த பகுதியில் வீடுகள் அதிகம் இல்லை; ஆள் நடமாட்டமும் அதிகம் இருக்காது. அப்போது அந்த பூங்காவின் அருகில் இருந்த முச்சந்தியில் சிலர் மந்திர வேலைகள் செய்து கொண்டு இருந்திருக்கிறார்கள். இவன் பேசாமல் வந்து இருந்தால் பிரச்சினை இல்லை. அங்கு நின்று வேடிக்கை பார்த்து இருக்கிறான். அவர்கள் மந்திரவேலை முடிந்ததும் ஏதோ ஒன்றை ஊத இவன் மீது பட்டு இருக்கிறது. இவன் பயந்து போய் விட்டான். அன்றிலிருந்து அந்த பையனுக்கு ஏதோ ஆகிவிட்டது. கடுமையான குளிர் சுரம். கண்டபடி உளறினான். ஒருநாள் இரவு அவனுக்கு பேய் ஓட்டப் போவதாகச் சொன்னார்கள். ஒரு பூசாரி அந்த பையனின் தலையில் உள்ள முடியை பிடித்துக் கொண்டு நடந்தார். அவனது குடும்பத்தை சேர்ந்த சிலர் உடன் சென்றனர். நானும் என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்ப்பதற்காக கூடவே சென்றேன். அவன் பயந்ததாகச் சொல்லப்படும் முச்சந்தியில் அந்த பூசாரி அவனை வைத்து ஏதேதோ முணுமுணுத்து அவன் மீது திருநீற்றை வீசினார். பின்னர் வீட்டிலிருந்து கொண்டு சென்ற சொம்புத் தண்ணீரை அவன் முகத்தில் பளிச் பளிச் என்று அடித்தார்.தலை முடியில் இரண்டை வெட்டி எடுத்து காந்தி பூங்காவிற்குள் (PARK) இருந்த புதருக்குள் வீசினார். பின்னர் அவனது ஒரு கையில் மணிக்கட்டில்  ஒரு கருப்புக் கயிறு கட்டினார். அப்புறம் கொஞ்சநாளில் சரியாகி விட்டான்.

இது மாதிரி நிறைய கேள்விப் பட்டு இருக்கிறேன். பார்த்தும் இருக்கிறேன். இவ்ற்றை நான் உளவியல் மருத்துவம் என்ற அடிப்படையிலேயே பார்க்கிறேன்.

துளசிதளம்:

எண்டமூரி வீரேந்திரநாத் என்ற தெலுங்கு நாவலாசிரியர் எழுதிய “துளசிதளம்என்ற நாவல் இந்த பில்லி சூன்யத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல் . இதனை நான் தமிழில் (தமிழாக்கம்: சுசீலா கனக துர்கா) படித்து இருக்கிறேன். ந்ன்கு விறுவிறுப்பான நாவல். சாவி - வாரப் பத்திரிகையில் தொடராக வந்து வாசகர்களின் வயிற்றைக் கலக்கியது. துளசி என்ற  குழந்தைக்கு வைக்கப்படும் ஏவலை எப்படி எடுக்கிறார்கள் என்பது கதை. மேலும் இந்த நாவலில் பில்லி சூன்யம் பற்றிய விவரங்களையும் நாவலாசிரியர் சொல்கிறார். இந்த நாவலில் வரும் காத்ரா என்ற மந்திரவாதியையும் காஷ்மோரா என்ற சூன்யமான ஏவலையும் மறக்க முடியாது

காளி கோயில்கள்:

நம்நாட்டில் பில்லி சூன்யம் விலகுவதற்காக வேண்டிக் கொள்வதற்காக விசேடமான கோயில்கள் நிறைய உண்டு. குறிப்பாக துர்க்கை எனப்படும் காளி கோயில்கள் இதற்கு பிரசித்தி பெற்றவை. நமது தமிழ்நாட்டில் இந்துக்கள் மட்டுமன்றி கிறிஸ்தவர்களிலும் முஸ்லிம்களிலும் இந்த பில்லி,சூன்யம்,ஏவலை நம்புபவர்கள் இருக்கிறார்கள்.

திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது சிறுவாச்சூர் என்ற ஊர். அந்த ஊரிலுள்ள அம்மனைப் பற்றிய ஒரு தகவல்.

மதுரையை விட்டு வெளியேறிய கண்ணகி மேற்கு தொடர்ச்சி மலை செல்கிறாள். அங்கு வானுலகம் அடைகிறாள். ஆனாலும் ஆவேச வடிவ கண்ணகியானவள்  மலையை விட்டு கீழிறங்கி கிழக்கு திசை நோக்கி காளி வடிவில் வருகிறாள். சிறுவாச்சூர் என்ற இந்த இடம் வரும் போது இருட்டி விடுகிறது. அப்போது அங்கிருந்த கோயிலில் தங்க இடம் கேட்கிறாள். உள்ளேயிருந்த செல்லியம்மன் என்னும் தெய்வம், தன்னால் வரம் பெற்ற தீய மந்திரவாதி ஒருவன் தன்னை மந்திரத்தால் கட்டி போட்டு இருப்பதாக கூறியது. அன்றிரவு செல்லியம்மனோடு தங்கும் காளி வழக்கப்படி மந்திர வேலைகள் செய்ய வந்த மந்திரவாதியை ஆவேசம் கொண்டு அழித்தாள். விடிந்ததும் செல்லியம்மன்  நீயே இங்கிரு என்று காளியிடம் சொல்லிவிட்டு, மேற்கில் அருகிலுள்ள பெரியசாமி மலைக்கு சென்றுவிடுகிறது.  சிறுவாச்சூரில் அமைதியாக (மதுரமாக) அமர்ந்ததால் மதுரகாளி என்று அழைக்கப் படுகிறாள். செல்லியம்மனை மந்திரத்தால் கட்டிப் போட்ட மந்திரவாதி பில்லி, சூன்யம் போன்ற வித்தைகள் தெரிந்தவன். அவனை காளி அழித்த இடம் என்பதால் இங்கு வந்து சென்றால் பில்லி, சூன்யம் சம்பந்தப்பட்ட துன்பங்கள் நீங்கும் என்று நம்புகிறார்கள்
(பார்க்க: எனது பதிவு: http://tthamizhelango.blogspot.com/2012/01/blog-post_08.html )

எல்லாமே நம்பிக்கைதான்:

ஒருமுறை அப்பரும்,சம்பந்தரும் மதுரைக்கு செல்வதாக இருந்தது. அப்போது நாளும் கோளும் சரியில்லை என்று அப்பர் பயணத்தை தள்ளி வைக்க சொன்னார். ஆனால் சம்பந்தரோ சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, மற்றும் ராகு- கேது என்னும் ஒன்பது கோள்களும் சிவனையே நினைந்திருப்பவருக்கு ஒன்றும் செய்யாது “ என்று ஒரு பதிகம் (கோளறு பதிகம்) பாடினார். ஒரு பதிகம் என்பது பத்து பாடல்கள் கொண்டது. அந்த பதிகத்தின் முதல் பாடல் இது.

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி
சனிபாம் பிரண்டும் உடனே
ஆசறு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியாரவர்க்கு மிகவே                       -   திருஞானசம்பந்தர் தேவாரம்


திருஞானசம்பந்தராவது பரவாயில்லை மென்மையாகவே பாடினார். இன்னொருவர் முருக பக்தர். பெயர் குமரகுருபரர். நேரிடையாகவே விஷயத்திற்கு வந்து விடுகிறார்.

நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
-          குமரகுருபரர் (கந்தர் அலங்காரம்)


ஒன்றே குலம் ஒருவனே தேவன் “ என்ற நம்பிக்கை உடையவன் நான். ஆனால் இந்த பில்லி சூன்யம் இவற்றில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஏனெனில் நல்லவனாக இருக்கும் ஒருவன் சொல்லும் வாக்கே பலிப்பதில்லை. இதில் தீய எண்ணம் தீய செயல் கொண்ட ஒருவன் சொல்லும் செயலும் பலிக்கும் என்பது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை. அப்படி நடந்து இருந்தால் இந்த உலகம் என்றைக்கோ சாம்பலாக போயிருக்கும்.
 

49 comments:

  1. வணக்கம்
    ஐயா.
    நல்ல தலைப்பு தெரிவுசெய்து எடுத்தமைக்கு எனது பாராட்டுக்கள் முதலில்

    என்னைப்பொறுத்த மட்டில் சொல்லப்போனால் இவற்றில் நம்பிக்கை இல்லை என்றுதான் சொல்வேன்.எல்லாவற்றுக்கும் மனந்தான் காரணம் மனதை ஒருநிலைப்படுத்தி நம்பிகையுடன் வாழ்ந்து இறைவனையும் வணங்கி வந்தால் எந்த செய்வினையும் வந்து சேராது..
    நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

    த.ம 1வது வாக்கு

    ReplyDelete
  2. எனக்கும் பில்லி, சூனியம் இவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் அது ஏற்படுத்தும் உளவியல் மாற்றங்கள் ஏற்புடையதே... யாரேனும் நமக்கு செய்வினை வைத்து விட்டார்கள் என்பதை நம்பத் தொடங்கும் மனம் அதை நம்பத் தொடங்கி அதன் வழியே செயல்பாடுகளும் அமைந்துவிடுகிறது என்பது உளவியல் பூர்வ உண்மை... நல்ல பதிவு.

    ReplyDelete
  3. எனக்கு இதில் நம்பிக்கை இல்லை. இருப்பினும் எழில் அவர்களின் கருத்துரையை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  4. மனோபலம் இல்லாதவர்களுக்கு இப்படிப்பட்ட மூட நம்பிக்கை ,இதைப் பயன்படுத்திக்கொண்டு மந்திரவாதிகள் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிறார்கள் ,என் அனுபவத்தில் நாத்திகர்களிடம் இந்த பில்லி சூனியம் எல்லாம் வேலை செய்வதாக தெரியவில்லை ..ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றிக் கொண்டுதான் இருப்பார்கள் !
    த ம 3

    ReplyDelete
  5. ஐயா மிக நல்ல ஒரு பதிவு. இவை எல்லாம் உளவியல் சார்ந்த நிகழ்வுகளே அல்லாமல் வேறு ஒன்றும் இல்லை. நம் நம்பிக்கையே தாங்கள் சொல்லியிருப்பது போல். எல்லாம் வல்ல நேர் மறை சக்தியான அந்த இறைவனைத் துதிப்போர்க்கு, கோளறு பதிகம் சொல்வது போல் இவை எவையும் அண்டாது என்பதே எங்கள் நம்பிக்கையும், தாழ்மையான கருத்தும்!

    ReplyDelete
  6. உளவியல் சம்பந்தமுடையது தான் இவையெல்லாம். இறைவனை நம்பினால் இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை.
    நல்லதொரு பகிர்வு......

    ReplyDelete
  7. மந்திரவாதிகளும்,பூசாரிகளும் நாட்டில் பிழைப்பதற்காக எடுத்துக் கொண்ட ஒன்று தான் இந்த ஏவல், பில்லி சூன்யம் எல்லாம்!

    ReplyDelete
  8. மறுமொழி> ரூபன் said...
    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  9. மறுமொழி> ezhil said...

    // எனக்கும் பில்லி, சூனியம் இவற்றில் நம்பிக்கை இல்லை. ஆனால் அது ஏற்படுத்தும் உளவியல் மாற்றங்கள் ஏற்புடையதே... யாரேனும் நமக்கு செய்வினை வைத்து விட்டார்கள் என்பதை நம்பத் தொடங்கும் மனம் அதை நம்பத் தொடங்கி அதன் வழியே செயல்பாடுகளும் அமைந்துவிடுகிறது என்பது உளவியல் பூர்வ உண்மை... நல்ல பதிவு. //

    சகோதரியின் உளவியல் கருத்துரைக்கு நன்றி! மந்திரவாதிகளை நம்பும் மனிதனின் மனது, மனோதத்துவ டாக்டர்கள் சொல்லுவதை ஏற்க மறுக்கிறது.

    ReplyDelete
  10. மறுமொழி> KILLERGEE Devakottai said...

    சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் வழிமொழிதல் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி> Bagawanjee KA said...

    சகோதரர் கே.ஏ. பகவான்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி> Thulasidharan V Thillaiakathu said...

    சகோதரர் வி.துளசிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி> rajalakshmi paramasivam said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  14. மறுமொழி> ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  15. அன்புடையீர்..
    உண்மையா.. பொய்யா.. - என்று உணர முடியாத இந்த விஷயத்தில் இன்றைய நாட்களில் போலிகளும் இரண்டறக் கலந்து விட்டனர்.
    இதனைத் தாங்கள் இன்றைய பதிவில் ஆராய்ந்த கோணம் - சிறப்பு!..

    // நல்லவனாக இருக்கும் ஒருவன் சொல்லும் வாக்கே பலிப்பதில்லை..//

    நல்லவர்கள் வாக்கினில் தங்களுக்கும் சந்தேகமா ஐயா!?..

    தவிர - கந்தரலங்காரம் அருளியவர் தித்திக்கும் திருப்புகழ் பாடிய - அருணகிரிநாதர்.

    குமரகுருபரர் பிறவியில் ஊமையாக இருந்து திருச்செந்தூரில் பேசும் திறன் பெற்றவர். கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் , நீதிநெறிவிளக்கம், முத்துக் குமரசுவாமி பிள்ளைத் தமிழ், சகலகலாவல்லி மாலை - என்பன அவர் அருளிய நூல்கள்..

    சிந்தைக்கு விருந்தளிக்கும் இனிய பதிவு கண்டு மகிழ்ச்சி.. வாழ்க நலம்..

    ReplyDelete
  16. மிகவும் அருமையான அலசல். ஆர்வமாகப்படித்தேன்.

    அடிப்படையில், சிலர், துணிச்சலின் காரணமாக எதையும் முழுவதும் நம்புவது இல்லை. வேறுசிலர் பயத்தின் காரணமாக முழுவதுமோ அல்லது பாதிக்குமேலோ நம்பி விடுகின்றனர்.

    எத்தைத்தின்றால் பித்தம் தெளியும் என்பதுபோல ஆகிறது, கஷ்டம் ஏற்பட்டுள்ளவரின் செயல் பாடுகள். இதனை வாய்ப்பாக வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றுபவர்களும் ஏராளமாகத்தான் உள்ளனர்.

    நம் மனதில் ஏற்படும் பயமே தான் இவற்றிற்கெல்லாம் அடிப்படியான காரணம்.

    யாருக்கும் எந்தக்கஷ்டமும் வராதவரை பிரச்சனை இல்லைதான். அவ்வாறு ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வது? என்பதே இதிலுள்ள பிரச்சனை.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  17. உளவியல் அடிப்படையில் பலவீனமானார்கள் கடவுள் இருக்கார்னு நம்புறாங்க, அதே பலவீனம், சாத்தான் ,பேய், பில்லி சூன்யம் இருக்கும்னு நம்ப வைக்குது.

    கடவுள் இருக்குனு நம்பும் எவரும் பில்லி சூனியம் குறித்து பயப்படவே செய்வார்கள்.

    கடவுளை வச்சு பொழப்பு நடத்தும் பிராமணர்களுக்கு இணையாக பில்லி சூனியம் வச்சு பொழப்பு நடத்துறாங்க அப்பிராமணர்கள் :-))

    பில்லி சூனியத்தினை எடுப்பதற்கு பரிகார பூஜை என சொல்லி மீண்டும் பிராமணர்கள் காசு பார்த்துடுவாங்க.

    # பில்லி சூனியம் இல்லைனு சொல்லுறிங்களே , பிராமணர்கள் பிருத்தியங்காரா தேவிக்கு மிளகா அபிஷேகம் செய்து , சத்ருசம்ஹார பூஜை செய்தால் எதிரிகள் அழிவாங்கனு வியாபாரம் செய்றாங்க அது மட்டும் நடக்குமானு ஆராய்ச்சி செய்து சொல்லவும் :-))

    ReplyDelete
  18. மறுமொழி> துரை செல்வராஜூ said...

    அன்பு சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    * // நல்லவனாக இருக்கும் ஒருவன் சொல்லும் வாக்கே பலிப்பதில்லை..// * நல்லவர்கள் வாக்கினில் தங்களுக்கும் சந்தேகமா ஐயா!?..//

    எனக்கு நல்லவர்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் ஆசீர்வாதம் செய்வதும் கூட சிலசம்யம் பலிக்காமல் போய்விடுகிறதே என்ற ஆதங்கம்தான்.

    ReplyDelete
  19. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அய்யா V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி> வவ்வால் said...

    வாருங்கள் வவ்வால் சார்! உங்களுடைய நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    // உளவியல் அடிப்படையில் பலவீனமானார்கள் கடவுள் இருக்கார்னு நம்புறாங்க, அதே பலவீனம், சாத்தான் ,பேய், பில்லி சூன்யம் இருக்கும்னு நம்ப வைக்குது. கடவுள் இருக்குனு நம்பும் எவரும் பில்லி சூனியம் குறித்து பயப்படவே செய்வார்கள். //

    கடவுள், ஆன்மீகம் என்பதெல்லாம் அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து அமைவது. சிலர் கடவுளை மூட நம்பிக்கைகளோடு நம்புகின்றனர். சிலர் கடவுளை மட்டும் நம்புகின்றனர்.

    // கடவுளை வச்சு பொழப்பு நடத்தும் பிராமணர்களுக்கு இணையாக பில்லி சூனியம் வச்சு பொழப்பு நடத்துறாங்க அப்பிராமணர்கள் :-))பில்லி சூனியத்தினை எடுப்பதற்கு பரிகார பூஜை என சொல்லி மீண்டும் பிராமணர்கள் காசு பார்த்துடுவாங்க.
    # பில்லி சூனியம் இல்லைனு சொல்லுறிங்களே , பிராமணர்கள் பிருத்தியங்காரா தேவிக்கு மிளகா அபிஷேகம் செய்து , சத்ருசம்ஹார பூஜை செய்தால் எதிரிகள் அழிவாங்கனு வியாபாரம் செய்றாங்க அது மட்டும் நடக்குமானு ஆராய்ச்சி செய்து சொல்லவும் :-)) //

    நான் பிராமண எதிர்ப்பாளன் இல்லை. எதற்கெடுத்தாலும் பிராமணர்கள்தான் என்று அவர்களை வம்புக்கு இழுப்பது சரியில்லை. எல்லா ஜாதியிலும் ஏமாற்றுவோர்களும், ஏமாறுவோர்களும் இருக்கிறார்கள். அவற்றை பட்டியல் போட்டு எழுதினால் தேவையற்ற விவாதங்கள்தான் வரும்.

    ReplyDelete
  21. அருமையான பதிவு ஐயா
    மனிதனின் மூட நம்பிக்கைகளின் விளைவு இது
    யாரோ சிலர் பணம் சம்பாதிப்பதற்காக,ஏற்படுத்திய விளையாட்டு இது

    ReplyDelete
  22. ரொம்ப நாளைய சந்தேகம் தான் .... மக்களுக்குப் பிடிக்காத ஆட்சி நடக்கும் போது பில்லியின் மூலம் அவ்வாட்சியை வலுவிழக்கச் செய்தால் எனக்கு சந்தேகம் தீர்ந்திடும்

    இலங்கையிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் யாராவது தலை சிறந்த சூனியக்காரர்கள் இருப்பின் சிபார்சு செய்யுங்கள் :)

    ReplyDelete
  23. கண்திருஷ்டி ஏவல்,பில்லி சூன்யம் எல்லாமே மனநிலை சோர்வு,
    உடல்நிலை தளர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தும்
    உளவியல் சிக்கல்களே..!

    ReplyDelete
  24. மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said... (1, 2 )

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி> ஆத்மா said...

    ஆத்மாவின் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // ரொம்ப நாளைய சந்தேகம் தான் .... மக்களுக்குப் பிடிக்காத ஆட்சி நடக்கும் போது பில்லியின் மூலம் அவ்வாட்சியை வலுவிழக்கச் செய்தால் எனக்கு சந்தேகம் தீர்ந்திடும் //

    என்னுடைய பதிவின் கடைசி பத்தியை மறுபடியும் படியுங்கள்.

    // இலங்கையிலும் ஆட்சி மாற்றம் வேண்டும் யாராவது தலை சிறந்த சூனியக்காரர்கள் இருப்பின் சிபார்சு செய்யுங்கள் :) //

    நல்ல ஜோக்! என்னுடைய வேலை அதுவல்ல. எதற்கும் கூகிளில் (GOOGLE) தேடிப் பாருங்கள்.

    ReplyDelete
  26. மறுமொழி> இராஜராஜேஸ்வரி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    // கண்திருஷ்டி ஏவல்,பில்லி சூன்யம் எல்லாமே மனநிலை சோர்வு, உடல்நிலை தளர்வு ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுத்தும் உளவியல் சிக்கல்களே..! //

    இன்றைய உளவியல் மருத்துவம் அன்றைய மந்திரம் தந்திரம்.என்றுதான் நினைக்க வேண்டி உள்ளது.

    ReplyDelete
  27. நான் சோட்டானிக்கரையில் பார்த்திருக்கிறேன். சந்தியா வேளையில் தீபாராதனை காட்டும் நேரம் சேவிக்க வந்திருப்பவர்கள் பலரும் நிலை கொள்ளாமல் ஆடுவார்கள். நம்பிக்கை சார்ந்தது என்றால் எந்த நம்பிக்கை எனும் கேள்வி. வவ்வால் அவர்களின் முதல் இரண்டு பத்திகள் சிந்திக்க வைக்கிறது

    ReplyDelete
  28. எதுவும் அவரவர் உள்ளத்தைப் பொறுத்ததே!

    ReplyDelete
  29. சரியான மனத்தெளிவு இருந்தால் போதும். பலருக்கு அது இல்லை.

    ReplyDelete
  30. மறுமொழி> G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி> புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவின் G.M.B கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி> பழனி. கந்தசாமி said...

    அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  33. பிரமாதமா சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
  34. அதை ஏங்க கேட்குறிங்க..... நான் இப்படி தான் உளவியல் என்று நினைத்து வாதாடி வதைபட்டேன்.
    இன்றளவும் அது எப்படி சாத்தியம் என்று யோசிப்பதும் உண்டு.
    யோசிக்கத் துர்ண்டும் பதிவு ஐயா.
    த.ம.7

    ReplyDelete
  35. சிறந்த ஆய்வுக் கட்டுரை
    தங்கள் கருத்துகளை விரும்புகிறேன்.

    ReplyDelete
  36. வெகுஜன மக்களால் பேசப்படும்
    யாரும் விவாதிக்க துணியாத
    அவர்களது நம்பிக்கையையும் பயத்தையும் வைத்து வியாபாரம் செய்கிற ...
    விசயத்தை போட்டு உடைத்திருக்கிறீர்கள்

    ReplyDelete
  37. மறுமொழி> கே. பி. ஜனா... said...
    சகோதரர் எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி> அருணா செல்வம் said...

    // அதை ஏங்க கேட்குறிங்க..... நான் இப்படி தான் உளவியல் என்று நினைத்து வாதாடி வதைபட்டேன். இன்றளவும் அது எப்படி சாத்தியம் என்று யோசிப்பதும் உண்டு.
    யோசிக்கத் துர்ண்டும் பதிவு ஐயா. த.ம.7 //

    கடவுளின் பெயராலும், மதத்தின் பெய்ராலும் (IN THE NAME OF GOD AND RELIGION) சொல்லப்படும் செய்யப்படும் நம்பிக்கைகளில் நாம் சொல்லும் உளவியல் கோட்பாடுகள் எடுபடாது என்பதே உண்மை.

    சகோதரி அருணாசெல்வம் அவர்களின் வெளிப்படையான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  39. மறுமொழி> Yarlpavanan Kasirajalingam said...

    சகோதரர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி> Mathu S said...

    // வெகுஜன மக்களால் பேசப்படும் யாரும் விவாதிக்க துணியாத
    அவர்களது நம்பிக்கையையும் பயத்தையும் வைத்து வியாபாரம் செய்கிற ... விசயத்தை போட்டு உடைத்திருக்கிறீர்கள் //

    சகோதரர் மலர்த்தரு எஸ் மது அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

    ReplyDelete
  41. உளவியல் சம்பந்தமுடையது. நன்றாக சொன்னீர்கள்.

    ReplyDelete
  42. மறுமொழி> மாதேவி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  43. //தீய எண்ணம் தீய செயல் கொண்ட ஒருவன் சொல்லும் செயலும் பலிக்கும் என்பது எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை.//

    இந்த மூட நம்பிக்கைதான் பலருக்கு அவர்களது தொழிலை ‘மேம்பட’ நடத்த மூலதனமாக உள்ளது.

    ReplyDelete
  44. மறுமொழி> வே.நடனசபாபதி said...

    // இந்த மூட நம்பிக்கைதான் பலருக்கு அவர்களது தொழிலை ‘மேம்பட’ நடத்த மூலதனமாக உள்ளது.//

    ஆமாம் அய்யா! சாதாரணமாக பிளாட்பாரத்தில் கிடந்த இந்த பிசீனஸ் இப்போது ஹைடெக் வசதியுடன் முன்னேறி விட்டது.
    தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  45. ஒன்றை இல்லை என்று சொல்வதற்கும், இருக்கிறது என்று சொல்வதற்கும் முன் அதனை ஆராய்தல் வேண்டும். சொல்லப்படும் கருத்துக்கள் ஆராய்ச்சியன்றி சொல்லபட்டால் இரண்டுமே தவறுதான். யாரேனும் உண்மையில் இதனை ஆராய்ந்து பின்பு அவர்தம் கருத்தை வெளியிடுவாராயின் மிக்க நன்று. பெரும்பாலும் தம்மை அறிவியல் சார்ந்தவர் என்று நினைப்பவர் அப்படி ஒன்றும் இல்லை என்று சொல்வதில் மகிழ்வர், ஆன்மீகம் சார்ந்தவர் அவை எல்லாம் உண்மை என்று சொல்வதில் மகிழ்வர், இரண்டையும் விடுத்து சற்று திறந்த மனதுடன் ஆராய்ந்தால் நாம் நம் மூதாதையர்களின் கலைகள் பலவற்றை இழக்காமல் இருந்திருப்போம். ஒரு காலத்தில் உப்பும் வேப்பிலையும் வைத்து பல் தேய்த்தவரை ஏளனம் செய்த மேதாவிகள் இன்று உங்கள் பற்பசையில் உப்பு உள்ளதா? வேப்பம் உள்ளதா என்று கேட்டு திரிகிறார்கள். உண்மை அறிவதே உண்மையாய் இருந்தால் உண்மை உன்மத்தம் ஆகாதே!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் ராமகிருஷ்ணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

      விடுபட்டுப் போன தாமதமான இந்த மறுமொழிக்கு மன்னிக்கவும்

      Delete
  46. இரு தினங்களுக்கு முன்பு வரை நானும் இவை எல்லாம் மனம் சம்பந்தப் பட்டவை என்று தான் நம்பிக் கொண்டிருந்தேன். இவை நமக்கு அனுபவத்தில் ஏற்படாதவரைக்கும் நாம் நம்ப மாட்டோம். என் நண்பர் அவரின் பக்கத்துக்கு வீட்டுக் காரர் அவருக்கு எதிராக மந்திர சித்து விளையாட்டுக்கள் செய்வதாக வெகு நாட்களாக சொல்லி வந்தார். இரு தினங்களுக்கு முன் ப்ரத்யங்கிர மஹா மந்திரம் ஏவல் சூன்யம் போன்றவற்றை எய்தவருக்கே திருப்பி அனுப்பும் என்றறிந்து, அந்த மந்திரத்தை பதிவிறக்கம் செய்து ஒழிக்க செய்தோம். 23 நிமிடத்தில் கண்ணீர் என்ற மணி ஓசை ஒலித்தது, அதோடு அவருக்கு எதிராக செய்யப் பட்டிருந்த ஏவலும் உடைந்தது. நானாக இருந்தாலும் நேரடியாக அதை அனுபவிக்க வில்லை என்றல் இது போன்ற விடயங்களை நம்ப மாட்டேன். யாரேனும் பாதிக்கப் பட்டிருந்தால் ப்ரத்யங்கிர தேவியை வணங்குங்கள், ப்ரத்யங்கிர மஹா மந்திரத்தை உபயோகியுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பர் ப்ரபு ப்ரபாகரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete