Wednesday 1 February 2017

புதுக்கோட்டை - வீதி எண்.35 இல்



சென்ற வாரம் ஒருநாள் எனக்குள் ஒரு பதட்டம்; ஆனால் காரணம்  இன்னதென்று அறிந்து கொள்ள முடியவில்லை; உடம்பில் வியர்வை வேறு. இரத்த அழுத்தம் என்பதால் இருக்குமோ என்று டாக்டரைப் பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால் டாக்டரைப் பார்ப்பதற்கு முன்னரே எனக்கு எதனால் என்று சுதாரித்துக் கொண்டு விட்டேன். சென்றவாரம் சென்னை மெரினா கடற்கரையில் நடந்த மாணவர்கள் இளைஞர்கள் மீது நடந்த தாக்குதலை டிவியில் பார்த்ததன் எதிரொலி, மற்றும் இலங்கைத் தமிழர்களுக்கு நந்திக்கடலில் நேர்ந்த அவலத்தைப் போல, கடலுக்கும் போலீஸ்காரர்களுக்கும் இடையில் இருந்த மாணவர்களுக்கு ஏதேனும் ஆகி விடுமோ என்ற பதற்றம்தான் இவ்வாறு வந்து விட்டது என்பதை உணர்ந்து கொண்டேன். எனவே டீவி நிகழ்ச்சிகளை பார்ப்பதை நிறுத்தி விட்டு, மூன்று நாட்களுக்கு டிவி பக்கம் போகாமல் ஆசுவாசப் படுத்திக் கொண்டேன். எனினும் ஒரு கண்டனப் பதிவை எழுதிய பின்னரே எனது மனது அமைதியானது. (இந்த அனுபவத்தை இந்த வீதி - கூட்டத்தில், எனது பேச்சிலும் குறிப்பிட்டுள்ளேன்)

இந்த சமயத்தில்தான், ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் ஜனவரி மாத வீதி இலக்கிய கூட்டத்தில் (29.01.2017 – ஞாயிறு) பேச வருமாறு அன்புடன் அழைத்தார். நானும் ‘மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்’ என்று கலந்து கொண்டேன். வீதியில் இலக்கிய நண்பர்களைச் சந்தித்த பிறகு கலகலப்பாகி விட்டேன்.

கலந்துரையாடல்:

எப்போதும் போல திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு பஸ்சில் காலையில் புறப்பட்டு, கூட்டம் நடக்கும் ஆக்ஸ்போர்டு கேட்டரிங் காலேஜிற்கு, கூட்டம் துவங்கும் நேரமான  9.30 மணிக்கெல்லாம் சென்று விட்டேன். அங்கே ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் அன்புடன் வரவேற்றார்.. சற்று நேரத்தில், கூட்டத்தின் தலைமைப் பேச்சாளர் திரு T.சுதந்திரராஜன் அவர்களும் வந்து விட்டார். மற்றைய நண்பர்கள் வரும் வரை எங்களுக்குள் கலந்துரையாடல் நிகழ்ந்தது. 

படம் மேலே – ஆசிரியர் கஸ்தூரிரங்கன்

அப்போது ’படிக்க வேண்டிய பத்து நூல்கள்’ என்ற தலைப்பில் பேச விரும்புவோர் பேசலாம் என்று கூட்ட அமைப்பாளர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் அழைத்தார். வீதி இலக்கிய அமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவரான சகோதரி ஆசிரியை கீதா அவர்கள் மட்டுமே முழுமையாக பத்து நூல்கள் பற்றி சொன்னார்.

படம் மேலே - ஆசிரியை கீதா நூல் விமர்சனம் செய்தபோது (படம் உதவி Devatha Tamil)

வலைப்பதிவர் கவிஞர் மீரா செல்வகுமார் அவர்கள், தான் ரசித்துப் படித்த கரன் கார்க்கி எழுதிய ’கறுப்பர் நகரம்’ என்ற நாவலைப் பற்றி சிலாகித்துப் பேசியதும், அப்போதே அந்த நூலை வாங்க வேண்டும், படிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். என்னுடைய பங்காக, டாக்டர் மு.வரதராசன் எழுதிய ‘மொழி வரலாறு, டாக்டர் கே.கே.பிள்ளை எழுதிய ‘தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்’ மற்றும் எட்கர் தர்ஸ்டன் எழுதிய தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் – ஏழு தொகுதிகள் (தமிழில் முனைவர் க.இரத்னம்) – ஆகிய நூல்கள் பற்றி சொன்னேன்.

தலைமை உரை

படம் மேலே - எழில் ஓவியா (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

படம் மேலே – தலைமை உரை செய்த T.சுதந்திரராஜன் (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

நிகழ்ச்சியின் தொடக்கமாக எழில் ஓவியா அவர்கள் ஒரு அருமையான பாடலைப் பாடினார். கூட்டத்திற்கு திரு T.சுதந்திரராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். இவரைப் பற்றி இங்கு குறிப்பிடுவது அவசியம். காவல்துறை அமைச்சுப்பணி அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நூல்கள் வாசிக்கும் ஆர்வம் மிக்கவர். நிறைய நூல்கள் வாசித்து இருக்கிறார். இவரது பேச்சினில் பல நூல்களைப் பற்றியும் தனது மலரும் நினைவுகளையும் சொன்னது ரசனையாக இருந்தது.









கவிஞர்கள் சுகுமாரன், மாலதி, சிவக்குமார், மீரா செல்வகுமார் ஆகியோர் கவிதை வாசிப்பு செய்தனர். 

படம் மேலே – கவிஞர் மீரா செல்வகுமார் கவிதை வாசிக்கிறார் (படம் உதவி Devatha Tamil)

மீரா செல்வகுமாரின் கவிதையில் தமிழ்ச் சொற்கள் துள்ளி விளையாடின. கூட்டத்தின் முடிவில் அவரிடம் உங்கள் கவிதைகளில் தமிழ்சொற்கள் கண்ணதாசனிடம் வந்து விழுவதைப் போல வந்து விழுகின்றன என்று பாராட்டிச் சொன்னேன்.

படம் மேலே – ஆசிரியர் மகாசுந்தர் (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

கவிதை நூல் விமர்சனம் என்ற வகையில் ஆசிரியர் முனைவர் மகாசுந்தர் அவர்கள், கவிஞர் தங்கம் மூர்த்தி எழுதிய ’தேவதைகளால் தேடப்படுபவன் ’ என்ற நூலினை ஆய்வுரை செய்தார். அவர் அந்த நூலினை எந்த அளவுக்கு மிகுந்த ஈடுபாடு கொண்டு படித்து இருக்கிறார், என்பதனை, வாசித்தபோது, அவரது உடல் மொழியும், கவிதை வரிகளை வாசிக்கும்போது  குரலில் தொனித்த ஏற்ற இறக்கங்களும் சொல்லாமல் சொல்லின. அவர் பேசி முடிந்ததும், புதுக்கோட்டையில் ஒரு சிறப்பு பட்டிமன்றக் கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர், இன்னொரு சாலமன் பாப்பையா உருவாகி வருகிறார் என்று பாராட்டினேன்.

எனது அனுபவங்கள்

படம் மேலே – நான் பேசியபோது (படம் உதவி: அண்டனூர் சுரா)

நான் பேச வேண்டிய தருணமும் வந்தது. ’வலையுலக அனுபவங்கள்’ என்ற’ தலைப்பை ஏற்கனவே சொல்லி இருந்தார்கள் பேசுவதற்கு வசதியாக, எனது பதிவுகளை மீள் பார்வையாக வாசித்து குறிப்புகள் எடுத்து ஒரு கட்டுரை வடிவில் டைப் செய்து எடுத்துப் போயிருந்தேன். ஆனால் நான் மேடையில் பேசிய பேச்சுக்கும் இதில் உள்ள குறிப்புகளுக்கும் நிறையவே வித்தியாசம். எனது பேச்சினில் வலைப்பூ பற்றிய பொதுப் பார்வை, ஃபேஸ்புக்கிற்கும் வலைத்தளத்திற்கும் உள்ள வேறுபாடு, விமர்சனங்கள், வலைப்பதிவர் சந்திப்பால் எனக்கு நிகழ்ந்த நன்மை, சில தொழில் நுட்பங்கள் பற்றியும், மின்னூலை விட அச்சுநூல்கள் சிறந்தவை ஏன், கவிதை நூல்களை ஒரு கவிஞர் ஏன் பிரபலம் செய்ய வேண்டும் என்றும் பன்முகமாக பேசினேன்.

படம் மேலே – கவிஞர் தங்கம் மூர்த்தி நடுவில் இருப்பவர் (படம் உதவி Devatha Tamil)

(மேலே - படம் உதவி : thangam moorthy facebook)

கூட்டத்திற்கு புரவலர் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்கள் வந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியான விஷயம். கூட்ட அமைப்பாளர் ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அவர்கள் நன்றியுரை சொல்லிட விழா இனிதே முடிந்தது.கூட்டத்தின் முடிவில், அமெரிக்காவில் இருக்கும், மென்பொறியாளர் சகோதரி கவிஞர் தேன்மதுரத்தமிழ் கிரேஸ் எழுதிய ’பாட்டன் காட்டைத் தேடி’ என்ற கவிதைநூல் விற்பனைக்கு வந்தது. இரண்டு பிரதிகள் வாங்கினேன். ஒன்று எனக்கு. இன்னொன்றை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய T.சுதந்திரராஜன் அவர்களிடம் அன்பளிப்பாக வழங்கினேன். 
  
படம் மேலே – ஸ்ரீமலையப்பன் (படம் உதவி: கஸ்தூரிரங்கன்)

(மேடையில் நானும் ஒரு பேச்சாளன் என்ற முறையில் அமர்ந்து இருந்ததால் என்னால் எனது கேமராவில் நிறைய படங்கள் எடுக்க இயலாமல் போய்விட்டது. எனவே நண்பர்கள் எடுத்த படங்களையே அதிகம் இங்கு இணைத்துள்ளேன் அவர்களூக்கு நன்றி.) 

தொடர்புடைய பதிவு:
வலையுலக அனுபவங்கள் http://tthamizhelango.blogspot.com/2017/01/blog-post_29.html

 

35 comments:

  1. நன்கு விவரித்துள்ளீர்கள் நன்றி.

    ReplyDelete
  2. அழகான தொகுப்பு...நன்றி அய்யா

    ReplyDelete
  3. தகவலகள் விவரித்த விதம் நன்று

    ReplyDelete
  4. விரிவான விவரணம். .உங்கள் கேமரா இல்லைய எனக் கேட்க நினைத்து வந்தால் காரணம் சொல்லியிருக்கிறீர்கள்..நல்ல தொகுப்பு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் அன்பான கருத்தினுக்கு நன்றி.

      Delete
  5. மிகவும் அழகாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. திண்டுக்கல்லாருக்கு நன்றி.

      Delete
  6. அருமையாய் ஒரு இலக்கிய நிகழ்வை கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள் ஐயா
    நன்றி

    ReplyDelete
  7. கடந்த பதிவில் அனுபவத்தைக் கண்டேன். இப்பதிவில் விழா நிகழ்வினை அருமையாப் பகிர்ந்துள்ளீர்கள். வீதியின் பணி பாராட்டத்தக்கது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  8. இதெல்லாம் உங்களுக்கு அல்வா சாப்பிடுவது போல் இருந்திருக்குமே

    ReplyDelete
  9. விழா நிகழ்ச்சியை அருமையாய் தொகுத்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டினுக்கு நன்றி அய்யா.

      Delete
  10. தங்கள் பாணியில் மிகவும் அழகான தொகுப்பு. பாராட்டுகள். வாழ்த்துகள்.

    நேற்றும் இன்றும் எனக்கு நெட் தொடர்ச்சியாகக் கிடைக்காமல், ஏராளமான படுத்தல்கள். அதனால் இந்த என் தாமதமான வருகை.

    //நான் பேச வேண்டிய தருணமும் வந்தது. ’வலையுலக அனுபவங்கள்’ என்ற’ தலைப்பை ஏற்கனவே சொல்லி இருந்தார்கள் பேசுவதற்கு வசதியாக, எனது பதிவுகளை மீள் பார்வையாக வாசித்து குறிப்புகள் எடுத்து ஒரு கட்டுரை வடிவில் டைப் செய்து எடுத்துப் போயிருந்தேன். ஆனால் நான் மேடையில் பேசிய பேச்சுக்கும் இதில் உள்ள குறிப்புகளுக்கும் நிறையவே வித்தியாசம்.//

    நானும் உங்களைப்போலவே தான். எனக்கும் எழுதும் அளவுக்குப் பேச வராது. அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுதிச்சென்று வாசிப்பது மட்டுமே என் வழக்கம். எனக்கு என்னவோ பேசும்போது ஒருவித படபடப்பும், சபைக்கூச்சமும் வந்துவிடுவதும் உண்டு.

    நாம் எழுதிக்கொண்டு போனதை படித்து விட்டால் .... இதனால் இரண்டு இலாபங்கள் (1) நாம் சொல்ல வேண்டியது எதுவும் விட்டுப்போகாமலும் இருக்கும். (2) இதனால் நம் நேரமும் பிறரின் பொன்னான நேரங்களும் வேஸ்ட் ஆகாமலும் இருக்கும்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கும் அன்பான ஆலோசனைக்கும் நன்றி.

      Delete
  11. இருப்பினும் இரண்டு சந்தர்ப்பங்களில் மட்டும், எந்தவிதமான குறிப்புகளும் என்னிடம் இல்லாமல் இருக்கும்போதே, என்னை மேடை ஏற்றி பேச அழைத்து விட்டார்கள்.

    அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும்கூட நான் என் மனம் விட்டு, பொறுமையாக பலவிஷயங்களை, என் பாணியில் நகைச்சுவையாகச் சொல்லி, பலரின் கைத்தட்டுக்களைப் பெற்று விட்டேன்.

    இதனால் நம்மாலும் பேச முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது.

    அது போன்ற சந்தர்ப்பங்கள்:

    1) என் பணி ஓய்வுக்கு ஒரு வாரம் முன்பே, என் அலுவலக நெருங்கிய நண்பர்கள் மட்டும் சேர்ந்து எனக்குக் கொடுத்ததோர் விருந்துபசார விழா. இதோ இந்த என் பதிவினில் அதன் படங்களில் சிலவற்றை மட்டும் காட்டியுள்ளேன்:

    http://gopu1949.blogspot.in/2015/02/2-of-6.html

    2) திரு. ஆரண்யநிவாஸ் இராமமூர்த்தி அவர்களின் நூல் வெளியீட்டு விழா. இதோ இந்த என் பதிவினில் அதற்கான படங்கள் உள்ளன. [அதில் என் படம் மட்டும் எதுவும் இருக்காது]

    http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ளம் கொண்ட V.G.K அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி. மேலே தாங்கள் சுட்டிய, தங்களது பதிவுகள் இரண்டனையும் மீண்டும் படித்து, இரண்டிலும் பின்னூட்டம் எழுதியுள்ளேன். இரண்டரை ஆண்டுகளுக்கு முந்தைய நினைவலைகளை மீண்டும் கொண்டு வந்தமைக்கு நன்றி.

      Delete

  12. நிகழ்வுகளை சுருக்கமாக அதே நேரம் முழுமையாக விபரித்துள்ளீர்கள்.
    அருமையான தொகுப்பு ஐயா.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் பாராட்டினுக்கு நன்றி.

      Delete
  13. நிகழ்ச்சிகளை விவரித்த விதம் அருமை. பாராட்டுகள், வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. அடிக்கடி இம்மாதிரி நிகழ்வுகளில் கலந்துகொண்டு தகவல் தெரிவியுங்கள். எங்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்!
    - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.

    ReplyDelete
  15. நிறைந்த தகவல்கள்
    மிக்க நன்றி சகோதரா.
    தமிழ் மணம். 5

    ReplyDelete
  16. மிக அழகாக நிகழ்வை கூறிய விதம் அருமை சார்...நன்றி...

    ReplyDelete
  17. நாம் இருவரும் கலந்து கொண்ட வீதி நிகழ்வு இன்னமும் நினைவில்....

    வாழ்த்துகள் ஐயா....

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு நன்றி. புதுக்கோட்டைக்கு போகும்போதெல்லாம், அங்கே பேருந்து நிலையத்தில் நீங்களும்,நானும் அமர்ந்து பேசிய பெஞ்சைப் பார்க்கும் போதெல்லாம் அந்தநாள் நினைவுகள் நிழலாடும்.

      Delete